திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
காதல் விண்ணப்பம்
kātal viṇṇappam
கொடி விண்ணப்பம்
koṭi viṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

053. பொருள் விண்ணப்பம்
poruḷ viṇṇappam

    திருவொற்றியூர்
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம்
    ஒன்று கோடியாய்ச் சென்றுசென் றுலைந்தே
    கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன்
    கலுழ்கின் றேன்செயக் கடவதொன் றறியேன்
    இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே
    இன்ப வெள்ளமே என்னுடை உயிரே
    திலக மேதிரு ஒற்றிஎம் உறவே
    செல்வ மேபர சிவபரம் பொருளே.
  • 2. எண்ணி லாநினைப் புற்றதின் வழியே
    இன்ப துன்பங்கள் எய்திஎன் நெஞ்சம்
    கண்ணி லாக்குரங் கெனஉழன் றதுகாண்
    கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
    பெண்நி லாவிய பாகத்தெம் அமுதே
    பிரமன் ஆதியர் பேசரும் திறனே
    தெண்நி லாமுடி ஒற்றியங் கனியே
    செல்வ மேபர சிவபரம் பொருளே.
  • 3. ஊண்உ றக்கமே பொருள்என நினைத்த
    ஒதிய னேன்மனம் ஒன்றிய தின்றாய்க்
    காணு றக்கருங் காமஞ்சான் றதுகாண்
    கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
    மாணு றக்களங் கறுத்தசெம் மணியே
    வள்ள லேஎனை வாழ்விக்கும் மருந்தே
    சேணு றத்தரும் ஒற்றிநா யகமே
    செல்வ மேபர சிவபரம் பொருளே.
  • 4. யாது சொல்லினும் கேட்பதின் றந்தோ
    யான்செய் தேன்என தென்னும்இவ் இருளில்
    காது கின்றதென் வஞ்சக நெஞ்சம்
    கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
    ஓது மாமறை உபநிட தத்தின்
    உச்சி மேவிய வச்சிர மணியே
    தீது நீக்கிய ஒற்றியந் தேனே
    செல்வ மேபர சிவபரம் பொருளே.
  • 5. சொல்லும் சொல்லள வன்றுகாண் நெஞ்சத்
    துடுக்க னைத்தும்இங் கொடுக்குவ தெவனோ
    கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால்
    கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
    அல்லும் எல்லும்நின் றகங்குழைந் தேத்தும்
    அன்பருள் ஊறும் ஆனந்தப் பெருக்கே
    செல்லு லாம்பொழில் ஒற்றியங் கரும்பே
    செல்வ மேபர சிவபரம் பொருளே.
  • 6. இம்மை இன்பமே வீடெனக் கருதி
    ஈனர் இல்லிடை இடர்மிக உழந்தே
    கைம்மை நெஞ்சம்என் றனைவலிப் பதுகாண்
    கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
    மும்மை யாகிய தேவர்தம் தேவே
    முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே
    செம்மை மேனிஎம் ஒற்றியூர் அரசே
    செல்வ மேபர சிவபரம் பொருளே.
  • 7. நின்ன டிக்கண்ஓர் கணப்பொழு தேனும்
    நிற்ப தின்றியே நீசமங் கையர்தம்
    கன்ன வில்தனம் விழைந்தது மனம்காண்
    கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
    அன்ன ஊர்தியும் மாலும்நின் றலற
    அடியர் தங்களுள் அமர்ந்தருள் அமுதே
    தென்இ சைப்பொழில் ஒற்றிஎம் வாழ்வே
    செல்வ மேபர சிவபரம் பொருளே.
  • 8. புலைய மங்கையர் புணர்முலைக் குவட்டில்
    போந்து ருண்டெனைப் புலன்வழிப் படுத்திக்
    கலைய நின்றதிக் கல்லுறழ் மனந்தான்
    கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
    விலையி லாஉயர் மாணிக்க மணியே
    வேத உச்சியில் விளங்கொளி விளக்கே
    சிலைவி லாக்கொளும் ஒற்றிஎம் மருந்தே
    செல்வ மேபர சிவபரம் பொருளே.
  • 9. தந்தை தாய்மனை மக்கள்என் றுலகச்
    சழக்கி லேஇடர் உழக்கும்என் மனந்தான்
    கந்த வாதனை இயற்றுகின் றதுகாண்
    கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
    எந்தை யேஎனை எழுமையும் தொடர்ந்த
    இன்ப வெள்ளமே என்உயிர்க் குயிரே
    சிந்தை ஓங்கிய ஒற்றிஎந் தேவே
    செல்வ மேபர சிவபரம் பொருளே.
  • 10. கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும்ஓர்
    குரங்கிற் கென்உறு குறைபல உரைத்தும்
    கடிய தாதலின் கசிந்தில தினிஇக்
    கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
    அடிய னேன்பிழை உளத்திடை நினையேல்
    அருளல் வேண்டும்என் ஆருயிர்த் துணையே
    செடிகள் நீக்கிய ஒற்றிஎம் உறவே
    செல்வ மேபர சிவபரம் பொருளே.

பொருள் விண்ணப்பம் // பொருள் விண்ணப்பம்

No audios found!