திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திரு உலா வியப்பு
tiru ulā viyappu
இன்பக் கிளவி
iṉpak kiḷavi
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

005. சல்லாப வியன்மொழி
sallāpa viyaṉmoḻi

    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. காது நடந்த கண்மடவாள் கடிமா மனைக்குக் கால்வருந்தத்
    தூது நடந்த பெரியவர்சிற் சுகத்தா ரொற்றித் தொன்னகரார்
    வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வாவென்றார்
    போது நடந்த தென்றேனெப் போது நடந்த தென்றாரே.
  • 2. கச்சை யிடுவார் படவரவைக் கண்மூன் றுடையார் வாமத்திற்
    பச்சை யிடுவா ரொற்றியுள்ளார் பரிந்தென் மனையிற் பலிக்குற்றார்
    இச்சை யிடுவா ருண்டியென்றா ருண்டே னென்றே னெனக்கின்று
    பிச்சை யிடுவா யென்றார்நான் பிச்சை யடுவே னென்றேனே.
  • 3. கருதற் கரியார் கரியார்முன் காணக் கிடையாக் கழலடியார்
    மருதத் துறைவார் திருவொற்றி வாண ரின்றென் மனைக்குற்றார்
    தருதற் கென்பா லின்றுவந்தீ ரென்றே னதுநீ தானென்றார்
    வருதற் குரியீர் வாருமென்றேன் வந்தே னென்று மறைந்தாரே.
  • 4. கல்லை வளைக்கும் பெருமானார் கழிசூ ழொற்றிக் கடிநகரார்
    எல்லை வளைக்குந் தில்லையுள்ளா ரென்றன் மனைக்குப் பலிக்குற்றார்
    அல்லை வளைக்குங் குழலன்ன மன்பி னுதவா விடிலோபம்
    இல்லை வளைக்கு மென்றார்நா னில்லை வளைக்கு மென்றேனே.
  • 5. வெற்றி யிருந்த மழுப்படையார் விடையார் மேரு வில்லுடையார்
    பெற்றி யிருந்த மனத்தர்தமுட் பிறங்குந் தியாகப் பெருமானார்
    சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ் சொல்லி நகைக்க வருகணைந்தார்
    ஒற்றி யிருமென் றுரைத்தேனோ னொற்றி யிருந்தே னென்றாரே.
  • 6. விண்டங் கமரர் துயர்தவிர்க்கும் வேற்கை மகனை விரும்பிநின்றோர்
    வண்டங் கிசைக்கும் பொழிலொற்றி வதிவா ரென்றன் மனையடைந்தார்
    தண்டங் கழற்கு நிகரானீர் தண்டங் கழற்கென் றேன்மொழியாற்
    கண்டங் கறுத்தா யென்றார்நீர் கண்டங் கறுத்தீ ரென்றேனே.
  • 7. விற்கண் டாத நுதன்மடவாள் வேட்ட நடன வித்தகனார்
    சொற்கண் டாத புகழொற்றித் தூய ரின்றென் மனைபுகுந்தார்
    நிற்கண் டார்கண் மயலடைவா ரென்றார் நீர்தா நிகழ்த்தியசொற்
    கற்கண் டாமென் றுரைத்தேனான் கற்கண் டாமென் றுரைத்தாரே.
  • 8. விடையார் கொடிமே லுயர்த்தருளும் வேத கீதப் பெருமானார்
    உடையா ரொற்றி யூரமர்ந்தா ருவந்தென் மனையி லின்றடைந்தார்
    இடையா வைய மென்றார்நா னிடைதா னைய மென்றேனாற்
    கடையா ரளியா ரென்றார்கட் கடையா ரளியா ரென்றேனே.
  • 9. நாடொன் றியசீர்த் திருவொற்றி நகரத் தமர்ந்த நாயகனார்
    ஈடொன் றில்லா ரென்மனையுற் றிருந்தார் பூவுண் டெழில்கொண்ட
    மாடொன் றெங்கே யென்றேனுன் மனத்தி லென்றார் மகிழ்ந்தமர்வெண்
    காடொன் றுடையீ ரென்றேன்செங் காடொன் றுடையே னென்றாரே.
  • 10. சொல்லா லியன்ற தொடைபுனைவார் தூயா ரொற்றித் தொன்னகரார்
    அல்லா லியன்ற மனத்தார்பா லணுகா ரென்றென் மனைபுகுந்தார்
    வல்லா லியன்ற முலையென்றார் வல்லார் நீரென் றேனுன்சொற்
    கல்லா லியன்ற தென்றார்முன் கல்லா லியன்ற தென்றேனே.

சல்லாப வியன்மொழி // சல்லாப வியன்மொழி

No audios found!