திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இன்பக் கிளவி
iṉpak kiḷavi
திரு உலாத் திறம்
tiru ulāt tiṟam
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

007. இன்பப் புகழ்ச்சி
iṉpap pukaḻchsi

    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. மாடொன் றுடையார் உணவின்றி மண்ணுன் டதுகாண் மலரோன்றன்
    ஓடொன் றுடையார் ஒற்றிவைத்தார் ஊரை மகிழ்வோ டுவந்தாலங்
    காடொன் றுடையார் கண்டமட்டுங் கறுத்தார் பூத கணத்தோடும்
    ஈடொன் றுடையார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
  • 2. பித்தர் எனும்பேர் பிறங்கநின்றார் பேயோ டாடிப் பவுரிகொண்டார்
    பத்தர் தமக்குப் பணிசெய்வார் பணியே பணியாப் பரிவுற்றார்
    சித்தர் திருவாழ் ஒற்றியினார் தியாகர் என்றுன் கலைகவர்ந்த
    எத்தர் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
  • 3. கடுத்தாழ் களத்தார் கரித்தோலார் கண்ணால் மதனைக் கரிசெய்தார்
    உடுத்தார் முன்ஓர் மண்ணோட்டை ஒளித்தே தொண்ட னொடும்வழக்குத்
    தொடுத்தார் பாம்பும் புலியும்மெச்சித் துதிக்க ஒருகால் அம்பலத்தில்
    எடுத்தார் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
  • 4. உரப்பார் மிசையில் பூச்சூட ஒட்டார் சடைமேல் ஒருபெண்ணைக்
    கரப்பார் மலர்தூ வியமதனைக் கண்ணால் சுட்டார் கல்எறிந்தோன்
    வரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க வைத்தார் பலிக்கு மனைதொறும்போய்
    இரப்பார் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
  • 5. கருதும் அவரை வெளிக்கிழுப்பார் காணா தெல்லாங் காட்டிநிற்பார்
    மருதில் உறைவார் ஒற்றிதனில் வதிவார் புரத்தை மலைவில்லால்
    பொருது முடிப்பார் போல்நகைப்பார் பூவுண் டுறங்கும் புதுவெள்ளை
    எருதில் வருவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
  • 6. ஆக்கம் இல்லார் வறுமையிலார் அருவம் இல்லார் உருவமிலார்
    தூக்கம் இல்லார் சுகம்இல்லார் துன்பம் இல்லார் தோன்றுமல
    வீக்கம் இல்லார் குடும்பமது விருத்தி யாக வேண்டுமெனும்
    ஏக்கம் இல்லார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
  • 7. ஊரும் இல்லார் ஒற்றிவைத்தார் உறவொன் றில்லார் பகைஇல்லார்
    பேரும் இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சில்லார்
    நேரும் இல்லார் தாய்தந்தை நேயர் தம்மோ டுடன்பிறந்தோர்
    யாரும் இல்லார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
  • 8. தங்கு மருப்பார் கண்மணியைத் தரிப்பார் என்பின் தார்புனைவார்
    துங்கும் அருட்கார் முகில்அனையார் சொல்லும் நமது சொற்கேட்டே
    இங்கும் இருப்பார் அங்கிருப்பார் எல்லாம் இயல்பில் தாம்உணர்ந்தே
    எங்கும் இருப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
  • 9. துத்திப் படத்தார் சடைத்தலையார் தொலையாப் பலிதேர் தொன்மையினார்
    முத்திக் குடையார் மண்எடுப்பார் மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம்
    புத்திக் குரிய பத்தர்கள்தம் பொருளை உடலை யாவையுமே
    எத்திப் பறிப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
  • 10. மாறித் திரிவார் மனம்அடையார் வணங்கும் அடியார் மனந்தோறும்
    வீறித் திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகுவிலை
    கூறித் திரிவார் குதிரையின்மேற் கொள்வார் பசுவிற் கோல்வளையோ
    டேறித் திரிவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.

இன்பப் புகழ்ச்சி // இன்பப் புகழ்ச்சி

No audios found!