திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நெஞ்சறிவுறுத்தல்
neñsaṟivuṟuttal
மகாதேவ மாலை
makātēva mālai
முதல் திருமுறை / First Thirumurai

004. சிவநேச வெண்பா
sivanēsa veṇpā

    காப்பு
    நேரிசை வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம்
    சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - என்னவனே
    சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
    தற்பரனே நின்தாள் சரண்.
  • 2. வீறுடையாய் வேலுடையாய் விண்ணுடையாய் வெற்புடையாய்
    நீறுடையாய் நேயர்கடந் நெஞ்சுடையாய் - கூறு
    முதல்வாஓர் ஆறு முகவா முக்கண்ணன்
    புதல்வாநின் தாளென் புகல்.
  • 3. சீர்சான்ற வேதச் செழும்பொருளே சிற்சொருபப்
    பேர்சான்ற உண்மைப் பிரமமே - நேர்சான்றோர்
    நாடும் பரசிவமே நாயேனுக் கன்புநின்பால்
    நீடும் படிநீ நிகழ்த்து.
  • 4. நினைப்பித்தா நித்தா நிமலா எனநீ
    நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் - நினைப்பின்
    மறப்பித்தாலி யானும் மறப்பேன் எவையும்
    பிறப்பித்தாய் என்னாலென் பேசு.
  • 5. உருவாய் உருவில் உருவாகி ஓங்கி
    அருவாய் அருவில் அருவாய் - ஒருவாமல்
    நின்றாயே நின்ற நினைக்காண்ப தெவ்வாறோ
    என்தாயே என்தந்தை யே.
  • 6. வெஞ்சஞ் சலமா விகாரம் எனும்பேய்க்கு
    நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் - அஞ்சலென
    எண்தோள் இறையே எனையடிமை கொள்ளமனம்
    உண்டோ இலையோ உரை.
  • 7. அப்பாலுன் சித்தம் அறியேன் எனக்கம்மை
    அப்பாநின் தாளன்றி யார்கண்டாய் - இப்பாரில்
    சாதிஉரு வாக்குந் தளைஅவிழ்த்துத் தன்மயமாம்
    சோதிஉரு வாக்குந் துணை.
  • 8. பேரறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல்
    யாரறிவார் யானோ அறிகிற்பேன் சீர்கொள்
    வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள்
    ஒளியாகி நின்ற உனை.
  • 9. வந்தித்தேன்131 பிட்டுகந்த வள்ளலே நின்னடியான்
    சிந்தித்தேன் என்றல் சிரிப்பன்றோ - பந்தத்தாஞ்
    சிந்துசிந்திப் பித்தெனது சிந்தையுணின் பொன்னருளே
    வந்துசிந்திப் பித்தல் மறந்து.
  • 10. தேனென்ற இன்சொல் தெரிந்துநினைப் பாடுகின்றேன்
    நானென் றுரைத்தல் நகைஅன்றோ - வான்நின்ற
    ஒண்பொரு­ உள்ளம் உவந்தருளால் இன்சொல்லும்
    வண்பொருளும் ஈதல் மறந்து.
  • 11. அண்டங்க ளோஅவற்றின் அப்பாலோ இப்பாலோ
    பண்டங்க ளோசிற் பரவெளியோ - கண்தங்க
    வெம்பெருமால் நீத்தவர்தம் மெய்யுளமோ தையலொடும்
    எம்பெருமான் நீவாழ் இடம்.
  • 12. பூதமெங்கே மற்றைப் புலனெங்கே பல்லுயிரின்
    பேதமெங்கே அண்டமெனும் பேரெங்கே - நாதமெங்கே
    மன்வடிவ மெங்கே மறையெங்கே வான்பொரு­
    பொன்வடிவம் கொள்ளாத போது.
  • 13. பேருருவோ சோதிப் பிழம்பாகும் சின்மயத்தின்
    சீருருவோ தேவர் திருவுருவம் - நேருருவில்
    சால்புறச்சேர் அண்ட சராசரங்கள் எல்லாம்நும்
    கால்விரற்பால் நின்றொடுங்குங் கால்.
  • 14. இன்றோ பகலோ இரவோ வருநாளில்
    என்றோ அறியேன் எளியேனே - மன்றோங்கும்
    தாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து
    நாயனையேன் வாழ்கின்ற நாள்.
  • 15. மண்ணாசை வெற்பே மறிகடலே பொன்னாசை
    பெண்ணாசை ஒன்றேஎன் பேராசை - நண்ணாசை
    விட்டார் புகழும் விடையாய்நான் பொய்யாசைப்
    பட்டால் வருமே பதம்.
  • 16. தந்தையாய் என்னுடைய தாயாய்த் தகைசான்ற
    சிந்தையாய் என்னருமைத் தேசிகனாய் - முந்தையாய்
    நீடு மறைமுதலாய் நின்றாயென் னேநெஞ்சம்
    வாடுமெனை ஆட்கொள்ளா வாறு.
  • 17. ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே
    ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ - வாட்டுகின்ற
    அஞ்சுபுல வேடர்க் கறிவைப் பறிகொடுத்தென்
    நெஞ்சுபுலர்ந் தேங்கு நிலை.
  • 18. ஆமோ அலவோ அறியேன் சிறியேனான்
    தாமோ தரனும் சதுமுகனும் - தாமே
    அடியா தரிக்கும் அரசேநின் ஏவல்
    அடியார்குற் றேவலடி யன்.
  • 19. உன்னால் எனக்காவ துண்டதுநீ கண்டதுவே
    என்னால் உனக்காவ தேதுளது - சொன்னால்யான்
    தந்தார்வத் தோடும் தலைமேற்கொண் டுய்கிற்பேன்
    எந்தாயிங் கொன்றுமறி யேன்.
  • 20. சென்றுரைப்பார் சொல்லில் சிறியான் பயமறியான்
    என்றுரைப்பார் ஆங்கதுமற் றென்னளவே - மன்றகத்தோய்
    அஞ்சேல் விழியாரை அந்தகனென் பார்மொழியை
    அஞ்சேன் சிறிதும் அறிந்து.
  • 21. எந்தாய்நின் அன்பர்தமக் கின்னமுதம் இட்டேத்திச்
    சிந்தா நலமொன்றுஞ் செய்தறியேன் - நந்தாச்
    சுவருண்ட மண்போலும் சோறுண்டேன் மண்ணில்
    எவருண் டெனைப்போல் இயம்பு.
  • 22. உப்பிருந்த ஓடோ ஓதியோ உலாப்பிணமோ
    வெப்பிருந்த காடோ வினைச்சுமையோ - செப்பறியேன்
    கண்ணப்ப ருக்குக் கனியனையாய் நிற்பணியா
    துண்ணப் பருக்கும் உடம்பு.
  • 23. ஏலார் மனைதொறும்போய் ஏற்றெலும்புந் தேயநெடுங்
    காலாய்த் திரிந்துழலுங் கால்கண்டாய் - மாலாகித்
    தொண்டே வலஞ்செய்கழல் தோன்றலே நின்கோயில்
    கண்டே வலம்செய்யாக் கால்.
  • 24. ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயுமரைக்
    காசும் பெறவிரிக்கும் கைகண்டாய் - மாசுந்த
    விண்டுஞ் சிரங்குனிக்கும் வித்தகனே நின்தலத்தைக்
    கண்டுஞ் சிரங்குவியாக் கை.
  • 25. வெங்கோடை ஆதபத்தின் வீழ்நீர் வறந்துலர்ந்து
    மங்கோடை யாதல் வழக்கன்றோ - எங்கோநின்
    சீர்சிந்தாச் சேவடியின் சீர்கேட்டும் ஆனந்த
    நீர்சிந்தா வன்கண் நிலை.
  • 26. வாயன்றேல் வெம்மலஞ்செல் வாய்அன்றேல் மாநரக
    வாயன்றேல் வல்வெறிநாய் வாயென்பாம் - தாயென்றே
    ஊழ்த்தாதா ஏத்தும் உடையாய் சிவஎன்றே
    வாழ்த்தாதார் நாற்றப்பாழ் வாய்.
  • 27. வீட்டார் இறைநீ விடைமேல் வரும்பவனி
    காட்டா தடைத்த கதவன்றோ - நாட்டாதி
    நல்லத் துளையா நதிச்சடையாய் என்னுஞ்சீர்ச்
    செல்லத் துளையாச் செவி.
  • 28. புல்லங் கணநீர்ப் புழையென்கோ புற்றென்கோ
    சொல்லும் பசுமட் டுளையென்கோ - சொல்லுஞ்சீர்
    வீயாத பிஞ்ஞகப்பேர் மெல்லினத்தின் நல்லிசைதான்
    தோயாத நாசித் துளை.
  • 29. தோற்றமிலாக் கண்ணுஞ் சுவையுணரா நாவுதிகழ்
    நாற்றம் அறியாத நாசியுமோர் - மாற்றமுந்தான்
    கேளாச் செவியுங்கொள் கீழ்முகமே நீற்றணிதான்
    மூளாது பாழ்த்த முகம்.
  • 30. மான்றாம் உலக வழக்கின் படிமதித்து
    மூன்றா வகிர்ந்தே முடைநாற - ஊன்றா
    மலக்கூடை ஏற்றுகினு மாணாதே தென்பால்
    தலக்கூடல் தாழாத் தலை.
  • 31. கல்லென்கோ நீரடைக்குங் கல்லென்கோ கான்கொள்கருங்
    கல்லென்கோ காழ்வயிரக் கல்லென்கோ - சொல்லென்கோ
    இன்றா லெனிலோ எடுத்தாளெம் மீன்றாணேர்
    நின்தாள் நினையாத நெஞ்சு.
  • 32. சொல்லுகின்ற உள்ளுயிரைச் சோர்வுற் றிடக்குளிர்ந்து
    கொல்லுகின்ற நஞ்சில் கொடிதன்றோ - ஒல்லுமன்றத்
    தெம்மானின் தாட்கமல மெண்ணாது பாழ்வயிற்றில்
    சும்மா அடைக்கின்ற சோறு.
  • 33. சோர்படைத்துச் சோறென்றால் தொண்டைவிக்கிக் கொண்டுநடு
    மார்படைத்துச் சாவுகினும் மாநன்றே - சீர்படைக்க
    எண்ணுவார் எண்ணும் இறைவாநின் தாளேத்தா
    துண்ணுவார் உண்ணும் இடத்து.
  • 34. ஓகோ கொடிதே உறும்புலையர் இல்லினிடத்
    தேகோ வதைத்துண் செயலன்றோ - வாகோர்தம்
    வாழ்மனையில் செல்லாது வள்ளனினை ஏத்தாதார்
    பாழ்மனையில் சென்றுண் பது.
  • 35. வீயுமிடு காட்டகத்துள் வேம்பிணத்தின் வெந்தசையைப்
    பேயுமுடன் உண்ணஉண்ணும் பேறன்றோ - தோயுமயல்
    நீங்கஅருள் செய்வோய்வெண்ணீறணியார் தீமனையில்
    ஆங்கவரோ டுண்ணு மது.
  • 36. கண்குழைந்து வாடும் கடுநரகின்பேருரைக்கில்
    ஒண்குழந்தை யேனுமுலை உண்ணாதால் - தண்குழைய
    பூண்டாதார்க் கொன்றைப் புரிசடையோய் நின்புகழை
    வேண்டாதார் வீழ்ந்து விரைந்து.
  • 37. கண்ணுதலே நின்தாள் கருதாரை நேசிக்க
    எண்ணுதலே செய்யேன்மற் றெண்ணுவனேல் - மண்ணுலகில்
    ஆமிடத்து நின்னடியார்க் காசையுரைத் தில்லையென்பார்
    போமிடத்திற் போவேன் புலர்ந்து.
  • 38. அங்கணனே நின்னடிக்கோர் அன்பிலரைச் சார்ந்தோர்தம்
    வங்கணமே132 வைப்பதினான் வைத்தேனேல் - அங்கணத்தில்
    நீர்போல் எனது நிலைகெடுக நிற்பழிசொற்
    றார்போ லழிக தளர்ந்து.
  • 39. பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருப்பாதத்
    தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களைக் - கோவையிட்டுக்
    கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல்
    ஓவுவா ராவ133 லுனை.
  • 40. யாதோ கனற்கண் யமதூதர் காய்ச்சுகருந்
    தாதோ தழற்பிழம்போ தானறியேன் - மீதோங்கு
    நாட்டார்தார்க் கொன்றை நதிச்சடையோய் அஞ்செழுத்தை
    நாட்டாதார் வாய்க்கு நலம்.
  • 41. என்னெஞ்சோர் கோயில் எனக்கொண்டோய் நின்நினையார்
    தன்னெஞ்சோ கல்லாமச் சாம்பிணத்தார் - வன்நெஞ்சில்
    சார்ந்தவர்க்கும் மற்றவரைத் தானோக்கி வார்த்தைசொல
    நேர்ந்தவர்க்கும் கல்லாகும் நெஞ்சு.
  • 42. வெள்ளமுதும் தேனும் வியன்கரும்பும் முக்கனியின்
    உள்ளமுதும் தெள்ளமுதும் ஒவ்வாதால் கள்ளமிலா
    நின்னன்பர் தம்புகழின் நீள்மதுரந் தன்னைஇனி
    என்னென்ப தையா இயம்பு.
  • 43. பண்ணாலுன் சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெலும்பு
    பெண்ணான தென்பார் பெரிதன்றே - அண்ணாஅச்
    சைவவடி வாஞான சம்பந்தர் சீருரைக்கில்
    தெய்வவடி வாஞ்சாம்பர் சேர்ந்து.
  • 44. எங்கோவே யான்புகலி எம்பெருமான் தன்மணத்தில்
    அங்கோர் பொருட்சுமையாள் ஆனேனேல் - இங்கேநின்
    தாள்வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலினிந்
    நாள்வருந்த வேண்டுகின்றேன் நான்.
  • 45. பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு
    நாவுக் கரையரெனு நன்னாம - மேவுற்ற
    தொண்டர்க்கு நீகட்டுச் சோறெடுத்தாய் என்றறிந்தோ
    தொண்டர்க்குத் தொண்டனென்பார் சொல்.
  • 46. எம்பரவை134 யோமண் ணிடந்தலைந்தான் சுந்தரனார்
    தம்பரவை வீட்டுத் தலைக்கடையாய் - வெம்பணையாய்
    வாயிற் படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே
    மாயப்பெயர் நீண்ட மால்.
  • 47. நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பதெங்கள்
    மண்ணில் பழைய வழக்கங்காண் - பண்ணிற்சொல்
    அம்மையார் வாமத்தோய் ஆயினுமுன் காரைக்கால்
    அம்மையார் போனடந்தார் ஆர்.
  • 48. வேத முடிவோ விளங்கா கமமுடிவோ
    நாத முடிவோ நவில்கண்டாய் - வாதமுறு
    மாசகர்க்குள் நில்லா மணிச்சுடரே மாணிக்க
    வாசகர்க்கு நீஉரைத்த வாறு.
  • 49. ஆர்கொண்டார் சேய்க்கறியிட் டாரே சிறுத்தொண்டப்
    பேர்கொண்டார் ஆயிடிலெம் பெம்மானே - ஓர்தொண்டே
    நாய்க்குங் கடைப்பட்ட நாங்களென்பேம் எங்கள்முடை
    வாய்க்கிங் கிஃதோர் வழக்கு.
  • 50. கோள்கொண்ட நஞ்சங் குடியேனோ கூர்கொண்ட
    வாள்கொண்டு வீசி மடியேனோ - கீள்கொண்ட
    அங்கோவ ணத்தழகா அம்பலவா நின்புகழை
    இங்கோதி வாழ்த்தாத யான்.
  • 51. ஆயாக் கொடியேனுக் கன்புடையாய் நீஅருளிங்
    கீயாக் குறையே இலைகண்டாய் - மாயாற்கும்
    விள்ளாத் திருவடிக்கீழ் விண்ணப்பம் யான்செய்து
    கொள்ளாக் குறையே குறை.
  • 52. பெற்றிடுதாய் போல்வதுநின் பெற்றியென்பேன் பிள்ளையது
    மற்றழுதால் கேட்டும் வராதங்கே - சற்றிருக்கப்
    பெற்றாள் பொறுப்பள் பிரானீ பொறுக்கினுநின்
    பொற்றாள் பொறாஎம் புலம்பு.
  • 53. பொன்போல் பொறுமையுளார் புந்திவிடாய் நீஎன்பார்
    என்போல் பொறுமையுளார் யார்கண்டாய் - புன்போக
    அல்லாம் படிசினங்கொண் டாணவஞ்செய் இன்னாமை
    எல்லாம் பொறுக்கின்றேன் யான்.
  • 54. முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல்
    என்மணத்தில் நீவந் திடாவிடினும் - நின்கணத்தில்
    ஒன்றும் ஒருகணம்வந் துற்றழைக்கில் செய்ததன்றி
    இன்றும் ஒருமணஞ்செய் வேன்.
  • 55. செய்யார் அழலேநின் செம்மேனி என்னினும்என்
    அய்யாநின் கால்பிடித்தற் கஞ்சேன்காண் - மெய்யாஇஞ்
    ஞான்றுகண்டு நான்மகிழ நந்தொண்டன் என்றெனையும்
    ஏன்றுகொண் டால்போதும் எனக்கு.
  • 56. என்பாலோ என்பால் இராதோடு கின்றமனத்
    தின்பாலோ அம்மனத்தைச் சேர்மாயை - தன்பாலோ
    யார்பால் பிழையுளதோ யானறியேன் என்னம்மை
    ஓர்பால் கொளநின்றோய் ஓது.
  • 57. நாணவத்தி னேன்றனையோ நாயேனை மூடிநின்ற
    ஆணவத்தை யோநான் அறியேனே - வீணவத்தில்
    தீங்குடையாய் என்னஇவண் செய்பிழையை நோக்கிஅருட்
    பாங்குடையாய் தண்டிப் பது.
  • 58. எச்சம் பெறுமுலகோர் எட்டிமர மானாலும்
    பச்சென் றிருக்கப் பகர்வார்காண் - வெச்சென்ற
    நஞ்சனையேன் குற்றமெலாம் நாடாது நாதஎனை
    அஞ்சனையேல் என்பாய் அமர்ந்து.
  • 59. கற்றறியேன் நின்னடிச்சீர் கற்றார் கழகத்தில்
    உற்றறியேன் உண்மை உணர்ந்தறியேன் - சிற்றறிவேன்
    வன்செய்வேல் நேர்விழியார் மையலினேன் மாதேவா
    என்செய்வேன் நின்னருளின் றேல்.
  • 60. மெய்தான் உடையோர் விரும்புகின்ற நின்அருளென்
    செய்தால் வருமோ தெரியேனே - பொய்தாவு
    நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினைக்கேட்க
    அஞ்சினேன் அன்பின்மை யால்.
  • 61. மாதேவா ஓவா மருந்தேவா மாமணிஇப்
    போதேவா என்றே புலம்புற்றேன் - நீதாவா
    யானாலுன் சித்த மறியேன் உடம்பொழிந்து
    போனாலென் செய்வேன் புகல்.
  • 62. கொன்செய்தாற் கேற்றிடுமென் குற்றமெலாம் ஐயஎனை
    என்செய்தால் தீர்ந்திடுமோ யானறியேன் - முன்செய்தோய்
    நின்பால் எனைக்கொடுத்தேன் நீசெய்க அன்றிஇனி
    என்பால் செயலொன் றிலை.
  • 63. எண்ணிலெளி யேன்தவிர எல்லா உயிர்களுநின்
    தண்ணிலகுந் தா­ழல் சார்ந்திடுங்காண் - மண்ணில்வருந்
    தீங்கென்ற எல்லாமென் சிந்தையிசைந் துற்றனமற்
    றாங்கொன்றும் இல்லாமை யால்.
  • 64. தாரம்விற்றுஞ் சேய்விற்றுந் தன்னைவிற்றும் பொய்யாத
    வாரம்வைத்தான் முன்னிங்கோர் மன்னனென்பர் - நாரம்வைத்த
    வேணிப் பிரானதுதான் மெய்யாமேல் அன்றெனைநீ
    ஏணிற் பிறப்பித்த தில்.
  • 65. உள்ளொன்ற நின்னடிக்கன் புற்றறியேன் என்னுளத்தின்
    வெள்ளென்ற வன்மை விளங்காதோ - நள்ளொன்ற
    அச்சங்கொண் டேனைநினக் கன்பனென்பர் வேழத்தின்
    எச்சங்கண் டாற்போல வே.
  • 66. நீத்தாடுஞ்136 செஞ்சடையாய் நீள்வேடங் கட்டிவஞ்சக்
    கூத்தாடு கின்றேனைக் கொண்டுசிலர் - கூத்தாநின்
    பத்தனென்பர் என்னோ பகல்வேடத் தார்க்குமிங்கு
    வித்தமிலா137 நாயேற்கும் வேறு.
  • 67. அன்புடையார் இன்சொல் அமுதேறு நின்செவிக்கே
    இன்புடையாய் என்பொய்யும் ஏற்குங்கொல் - துன்புடையேன்
    பொய்யுடையேன் ஆயினுநின் பொன்னருளை வேண்டுமொரு
    மெய்யுடையேன் என்கோ விரைந்து.
  • 68. என்னா ருயிர்க்குயிராம் எம்பெருமான் நின்பதத்தை
    உன்னார் உயிர்க்குறுதி உண்டோதான் - பொன்னாகத்
    தார்க்கும் சதுமுகர்க்கும் தானத்த138வர்க்குமற்றை
    யார்க்கும் புகலுன் அருள்.
  • 69. வெள்ளைப் பிறைஅணிந்த வேணிப் பிரானேநான்
    பிள்ளைப் பிராயத்தில் பெற்றாளை - எள்ளப்
    பொறுத்தாள்அத் தாயில் பொறுப்புடையோய் நீதான்
    வெறுத்தால் இனிஎன்செய் வேன்.
  • 70. ஆயிரமன்றேநூறும் அன்றேஈ ரைந்தன்றே
    ஆயிரம்பேர் எந்தைஎழுத் தைந்தேகாண் - நீஇரவும்
    எல்லு நினைத்தியென ஏத்துகினும் எந்தாய்வீண்
    செல்லுமனம் என்செய்கேன் செப்பு.
  • 71. வஞ்சந் தருங்காம வாழ்க்கையிடைச் சிக்கியஎன்
    நெஞ்சந் திருத்தி நிலைத்திலையே - எஞ்சங்
    கரனே மழுக்கொள் கரனே அரனே
    வரனே சிதம்பரனே வந்து.
  • 72. தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்தென்னை
    வாழ்விக்கும் நல்ல மருந்தென்கோ - வீழ்விக்கும்
    ஈங்கான மாயை இகந்தோர்க் கருள்வோய்நின்
    பாங்கான செம்பொற் பதம்.
  • 73. ஏசொலிக்கு மானிடனாய் ஏன்பிறந்தேன் தொண்டர்கடந்
    தூசொலிப்பான் கல்லாகத் தோன்றிலனே - தூசொலிப்பான்
    கல்லாகத் தோன்றுவனேல் காளகண்டா நாயேனுக்
    கெல்லா நலமுமுள தே.
  • 74. குற்றம் பலசெயினுங் கோபஞ் செயாதவருள்
    சிற்றம் பலமுறையுஞ் சிற்பரனே - வெற்றம்பல்
    பொய்விட்டால் அன்றிப் புரந்தருளேன் என்றெனைநீ
    கைவிட்டால் என்செய்கேன் காண்.
  • 75. தீக்குணத்தார் யாவருமென் சீடரெனில் என்னுடைய
    தீக்குணத்தின் எல்லைஎவர் தேர்கிற்பார் - ஊக்கமிகு
    நல்லோர்க் களிக்கு நதிச்சடையோய் எற்கருளில்
    எல்லோர்க்கும் ஐயுறவா மே.
  • 76. இன்படையான் றன்புடையான் என்றேழை யேன்தலைமேல்
    அன்புடையாய் நீயமைப்பித் தாயிதற்கு - வன்படையா
    தெவ்வண்ணம் நின்னெஞ் சிசைந்ததோ அந்நாளில்
    இவ்வண்ணம் என்றறிகி லேன்.
  • 77. ஏய்ப்பிறப்பொன் றில்லாதோய் என்பிறப்பின் ஏழ்மடங்கோர்
    பேய்ப்பிறப்பே நல்ல பிறப்பந்தோ - வாய்ப்புலகம்
    வஞ்சமெனத் தேக மறைத்தடிமண் வையாமல்
    அஞ்சிநின்னோ டாடும் அது.
  • 78. கோடும் பிறைச்சடையோய் கோளுங் குறும்புஞ்சாக்
    காடும் பிணிமூப்புங் காணார்காண் - நீடுநினைக்
    கண்டார் அடிப்பொடியைக் கண்டார் திருவடியைக்
    கண்டார் வடிவுகண்டார் கள்.
  • 79. மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங்
    கோலெங்கே வானோர் குடியெங்கே - கோலஞ்சேர்
    அண்டமெங்கே அவ்வவ் வரும்பொருளெங் கேநினது
    கண்டமங்கே நீலமுறாக் கால்.
  • 80. எவ்வேளை யோவருங்கூற் றெம்பாலென் றெண்ணுகின்ற
    அவ்வேளை தோறும் அழுங்குற்றேன் - செவ்வேளை
    மிக்களித்தோய் நின்கழற்கால் வீரத்தை எண்ணுதொறும்
    எக்களித்து வாழ்கின்றேன் யான்.
  • 81. துற்சங்கத் தோர்கணமுந் தோயாது நின்னடியர்
    சற்சங்கத் தென்றனைநீ தான்கூட்டி - நற்சங்கக்
    காப்பான் புகழுன் கழற்புகழைக் கேட்பித்துக்
    காப்பாய் இஃதென் கருத்து.
  • 82. என்னமுதே முக்கண் இறையே நிறைஞான
    இன்னமுதே நின்னடியை ஏத்துகின்றோர் - பொன்னடிக்கே
    காதலுற்றுத் தொண்டுசெயக் காதல்கொண்டேன் எற்கரு­
    காதலுற்றுச் செய்தல் கடன்.
  • 83. ஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன்
    பேராத வஞ்சப் பிழைநோக்கி - யாரேனு
    நின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால்
    என்போல்வார் என்சொல்லார் ஈங்கு.
  • 84. மெய்யாக நின்னைவிட வேறோர் துணையில்லேன்
    ஐயா அதுநீ அறிந்ததுகாண் - பொய்யான
    தீதுசெய்வேன் தன்பிழையைச் சித்தங் குறித்திடில்யான்
    யாதுசெய்வேன் அந்தோ இனி.
  • 85. திண்ணம் அறியாச் சிறியேன் உளத்திருக்கும்
    எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் - அண்ணலுன்பால்
    நித்தம் இரங்காஎன் நெஞ்சமர்ந்த தாலோநின்
    சித்தம் இரங்காச் செயல்.
  • 86. கொன்னஞ்சேன் தன்பிழையைக் கூர்ந்துற்று நானினைக்கில்
    என்நெஞ்சே என்னை எரிக்குங்காண் - மன்னுஞ்சீர்
    எந்தாய்நின் சித்தத்திற் கேதாமோ நானறியேன்
    சிந்தா குலனென்செய் வேன்.
  • 87. நின்னன்பர் தம்பால் நிறுத்துதியோ அன்றிஎனைப்
    பொன்னன்பர் தம்பால் புணர்த்துதியோ - பொன்னன்பர்
    வைவமே என்னும் வறியேன் அறியேனென்
    தெய்வமே நின்றன் செயல்.
  • 88. என்சிறுமை நோக்கா தெனக்கருளல் வேண்டுமென்றே
    நின்பெருமை நோக்கிஇங்கு நிற்கின்றேன் - என்பெரும
    யாதோநின் சித்தம் அறியேன் அடியேற்கெப்
    போதோ அருள்வாய் புகல்.
  • 89. எந்தாயென் குற்றமெலாம் எண்ணுங்கால் உள்நடுங்கி
    நொந்தா குலத்தின் நுழைகின்றேன் - சிந்தாத
    காள மகிழ்நின் களக்கருணை எண்ணுதொறும்
    மீளமகிழ் கின்றேன் விரைந்து.
  • 90. எள்ளலே என்னினுமோர் ஏத்துதலாய்க் கொண்டருளெம்
    வள்ளலே என்றனைநீ வாழ்வித்தால் - தள்ளலே
    வேண்டுமென யாரே விளம்புவார் நின்னடியர்
    காண்டுமெனச் சூழ்வார் களித்து.
  • 91. வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா
    மாணிக்க மேகருணை மாகடலே - மாணிக்கு
    முன்பொற் கிழியளித்த முத்தேஎன் ஆருயிர்க்கு
    நின்பொற் கழலே நிலை.
  • 92. முத்தேவர் போற்று முதற்றேவ நின்னையன்றி
    எத்தேவர் சற்றே எடுத்துரைநீ - பித்தேன்செய்
    குற்றமெலாம் இங்கோர் குணமாகக் கொண்டென்னை
    அற்றமிலா தாள்கின் றவர்.
  • 93. கங்கைச் சடையாய்முக் கண்ணுடையாய் கட்செவியாம்
    அங்கச் சுடையாய் அருளுடையாய் - மங்கைக்
    கொருகூ றளித்தாய் உனைத்தொழுமிந் நாயேன்
    இருகூ றளித்தேன் இடர்க்கு.
  • 94. பேசத் தெரியேன் பிழையறியேன் பேதுறினும்
    கூசத் தெரியேன் குணமறியேன் - நேசத்தில்
    கொள்ளுவார் உன்னடிமைக் கூட்டத்தார் அல்லாதார்
    எள்ளுவார் கண்டாய் எனை.
  • 95. ஊணே உடையேஎன் றுட்கருதி வெட்கமிலேன்
    வீணேநன் னாளை விடுகின்றேன் - காணேனின்
    செம்பாத மேஎன்றுந் தீராப் பொருளென்று
    நம்பாத நாயடியேன் நான்.
  • 96. சிவமே சிவஞானச் செல்வமே அன்பர்
    நவமே தவமே நலமே நவமாம்
    வடிவுற்ற தேவேநின் மாக்கருணை யன்றோ
    படிவுற்ற என்னுட் பயன்.
  • 97. கோளாக்கிக் கொள்ளுங் கொடியே னையுநினக்கோர்
    ஆளாக்கிக் கொள்ளற் கமைவாயேல் - நீளாக்குஞ்
    செங்கேச வேணிச் சிவனேஎன் ஆணவத்திற்
    கெங்கே இடங்காண் இயம்பு.
  • 98. திண்ணஞ்சற் றீந்திடநின் சித்தம் இரங்காத
    வண்ணஞ்சற் றேதெரிய வந்ததுகாண் - எண்ணெஞ்சில்
    இத்தனையு மென்வினைகள் நீங்கில் இருக்கஅண்டம்
    எத்தனையும் போதாமை என்று.
  • 99. இண்டைச் சடையோய் எனக்கருள எண்ணுதியேல்
    தொண்டைப் பெறுமென் துயரெல்லாம் - சண்டைக்கிங்
    குய்ஞ்சே139 மெனஓடும் ஓட்டத்திற் கென்னுடைய
    நெஞ்சே பிறகிடுங்காண் நின்று.
  • 100. கண்ணா ணிழுதைகள்பாற் காட்டிக் கொடுக்கிலெனை
    அண்ணா அருளுக் கழகன்றே - உண்ணாடு
    நின்னடியார் கூட்டத்தில் நீரிவனைச் சேர்த்திடுமின்
    என்னடியான் என்பாய் எடுத்து.
  • 101. கண்ணப்பன் ஏத்துநுதற் கண்ணப்ப மெய்ஞ்ஞான
    விண்ணப்ப நின்றனக்கோர் விண்ணப்பம் - மண்ணிற்சில்
    வானவரைப் போற்றும் மதத்தோர் பலருண்டு
    நானவரைச் சேராமல் நாட்டு.
  • 102. பொன்னின் றொளிரும் புரிசடையோய் நின்னையன்றிப்
    பின்னொன் றறியேன் பிழைநோக்கி - என்னை
    அடித்தாலு நீயே அணைத்தாலு நீயே
    பிடித்தேனுன் பொற்பாதப் பேறு.
  • 103. துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினுமற்றை
    நற்குணத்தில் உன்சீர் நயப்பேன்காண் - சிற்குணத்தோய்
    கூற்றுதைத்த நின்பொற் குரைகழற்பூந் தாளறிக
    வேற்றுரைத்தே னில்லை விரித்து.
  • 104. இப்பாரில் என்பிழைகள் எல்லாம் பொறுத்தருளென்
    அப்பாநின் தாட்கே அடைக்கலங்காண் - இப்பாரில்
    நானினது தா­ழல் நண்ணுமட்டும் நின்னடியர்
    பானினது சீர்கேட்கப் பண்.

    • 130. மன்னவனே - தொ.வே.1; 2. பொ. சு., பி. இரா., ச. மு. க., சென்னைப் பதிப்புகள்.
    • 131. வந்தி தேன் எனற்பாலது வந்தித்தேன் என விரித்தல் விகாரமாயிற்று. ஈண்டு தேன்என்பது இனிமை. தொ.வே.
    • 132. வங்கணம் - நட்பு. தொ.வே.
    • 133. ஆவலென்பதனை எதிர்காலத் தன்மை ஒருமை வினைமுற்றாகக் கொள்க. தொ. வே.
    • 134. எம்பர - அண்மை விளி, இறை முன்னிலை. தொ. வே.
    • 135. மாயற்கு, மாயாற்கென நீட்டல் விகாரமாயிற்று. தொ.வே.
    • 136. நீத்தம், நீத்தெனக் குறைந்து நின்றது. தொ.வே.
    • 137. வித்தம் - அறிவு. தொ.வே.
    • 138. தானம் - சுவர்க்கம். தொ.வே.
    • 139. உய்ந்தேம், உய்ஞ்சேம் எனத் திரிந்தது. தொ.வே.

சிவநேச வெண்பா // சிவநேச வெண்பா