திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
போற்றித் திருப்பதிகம்
pōṟṟit tiruppatikam
தரிசனப் பதிகம்
tarisaṉap patikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

080. விண்ணப்பப் பதிகம்
viṇṇappap patikam

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. தண்ணார் மதிபோல் சீதளவெண் தரளக் கவிகைத் தனிநிழற்கீழ்க்
    கண்ணார் செல்வச் செருக்கினர்தம் களிப்பில் சிறிய கடைநாயேன்
    பெண்ணார் பாகப் பெருந்தகைதன் பெரிய கருணைக் குரியம்என்றே
    எண்ணா நின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே.
  • 2. இரங்கா திருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்தமனக்
    குரங்கால் அலைப்புண் டலைகின்ற கொடிய பாவி இவன்என்றே
    உரங்கா தலித்தோர் சிரிப்பார்நான் உலகத் துயரம் நடிக்கின்ற
    அரங்காக் கிடப்பேன் என்செய்வேன் ஆரூர் அமர்ந்த அருமணியே.
  • 3. மணியார் கண்டத் தெண்டோள்செவ் வண்ணப் பவள மாமலையே
    அணியால் விளங்கும் திருஆரூர் ஆரா அமுதே அடிச்சிறியேன்
    தணியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன்
    திணியார் முருட்டுக் கடைமனத்தேன் செய்வ தொன்றும் தெரியேனே.
  • 4. தெரியத் தெரியும் தெரிவுடையார் சிவாநு பவத்தில் சிறக்கின்றார்
    பிரியப் பிரியும் பெரும்பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன்
    துரியப் பொருளே அணிஆரூர்ச் சோதி மணிநீ தூயஅருள்
    புரியப் பெறுவேன் எனில்அவர்போல் யானும் சுகத்திற் பொலிவேனே.
  • 5. பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதா னந்தக் கடல்ஆடி
    மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணிநீ வழங்காயேல்
    மெலிவேன் துன்பக் கடல்மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல்
    நலிவேன் அந்தோ அந்தோநின் நல்ல கருணைக் கழகன்றே.
  • 6. கருணைக் கடலே திருஆரூர்க் கடவுட் சுடரே நின்னுடைய
    அருணக் கமல மலரடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல்
    வருணக் கொலைமா பாதகனாம் மறையோன் தனக்கு மகிழ்ந்தன்று
    தருணக் கருணை அளித்தபுகழ் என்னாம் இந்நாள் சாற்றுகவே.
  • 7. இந்நாள் அடியேன் பிழைத்தபிழை எண்ணி இரங்காய் எனில்அந்தோ
    அந்நாள் அடிமை கொண்டனையே பிழையா தொன்றும் அறிந்திலையோ
    பொன்னார் கருணைக் கடல்இன்று புதிதோ பிறர்பால் போயிற்றோ
    என்நா யகனே திருஆரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே.
  • 8. உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒருநா ளேனும் ஒழிந்திடவும்
    வெள்ளக் கருணை இறையேனும் மேவி யிடவும் பெற்றறியேன்
    கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனைத்
    தள்ளத் தகுமோ திருஆரூர் எந்தாய் எந்தாய் தமியேனே.
  • 9. எந்தாய் ஒருநாள் அருள்வடிவின் எளியேன் கண்டு களிப்படைய
    வந்தாய் அந்தோ கடைநாயேன் மறந்து விடுத்தேன் மதிகெட்டேன்
    செந்தா மரைத்தாள் இணைஅன்றே சிக்கென் றிறுகப் பிடித்தேனேல்
    இந்தார் சடையாய் திருஆரூர்இறைவா துயரற் றிருப்பேனே.
  • 10. இருப்பு மனத்துக் கடைநாயேன் என்செய் வேன்நின் திருவருளாம்
    பொருப்பில் அமர்ந்தார் அடியர்எலாம் அந்தோ உலகப் புலைஒழுக்காம்
    திருப்பில் சுழன்று நான்ஒருவன் திகைக்கின் றேன்ஓர் துணைகாணேன்
    விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண்ணார் வியன்அமுதே.

திருவாரூர்ப் பதிகம் // விண்ணப்பப் பதிகம்