திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அபராத விண்ணப்பம்
aparāta viṇṇappam
கருணை விண்ணப்பம்
karuṇai viṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

083. கலி விண்ணப்பம்
kali viṇṇappam

    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. செறியாத நெஞ்சக வஞ்சக னேன்இச் சிறுதலத்தே
    அறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஐயநின்தாள்
    குறியா தரித்தல தாணைமற் றில்லைஎங் கொற்றவனே
    முறியா தருள்செய்தி யோதெரி யேன்எந்தை முன்னியதே.
  • 2. தீதொன்று மேகண் டறிந்ததல் லால்பலன் சேரநலம்
    யாதொன்றும் நான்கண் டறியேன் அறிந்தவன் என்னஇங்கே
    போதொன்று போக்குகின் றேன்பிழை யாவும் பொறுத்தருள்வாய்
    மாதொன்று பாகத் துணைஅன்றி நற்றுணை மற்றிலையே.
  • 3. எல்லாம் தெரிந்த இறைவாநின் தண்ணருள் எய்துகிலாப்
    பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்வாய்
    கல்லா மனக்கடை யாலே கடைவைத்துக் கண்டதுதுன்
    பல்லால் அணுத்துணை யும்அறி யேன்இன்பம் ஆவதுவே.
  • 4. மண்ணுடை யாரிடை வாளா மனஞ்செல வைத்ததலால்
    எண்ணுடை யாரிடை எய்திநின் தாண்மலர் ஏத்துகிலேன்
    புண்ணுடை யாரிற் புலம்புகின் றேனைப் பொறுத்தருள்முக்
    கண்ணுடை யாய்கழற் காலுடை யாய்மணி கண்டத்தனே.
  • 5. தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன்
    வீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்
    ஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே
    வாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே.
  • 6. ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து
    நான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன்
    ஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்
    வான்செய்த நாதநின் தண்ணருள் வண்ணம்என் வாழ்த்துவனே.
  • 7. ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற
    தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே
    ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்
    வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே.
  • 8. ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்
    இன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ
    கன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே
    துன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே.
  • 9. ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட
    தேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்
    வாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்
    நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே.
  • 10. பள்ளத்தி லேசெலும் நீர்போல்என் உள்ளம் பரப்பதலால்
    எள்ளத்தி லேசிறி தாயினும் நான்செல்வ தில்லைஎந்தாய்
    கள்ளத்தி லேசொல்லு கின்றேன் அலநின் கழலிணைஎன்
    உள்ளத்தி லேநின்ற ஆங்கவை காண்க உடையவனே.

கலி விண்ணப்பம் // கலி விண்ணப்பம்