திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஏழைமையின் இரங்கல்
ēḻaimaiyiṉ iraṅkal
காணாப் பத்து
kāṇāp pattu
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

024. பணித்திறஞ் சாலாப் பாடிழிவு
paṇittiṟañ sālāp pāṭiḻivu

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அடுத்திலேன் நின்அடியர் அவைக்குட் சற்றும்
    அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம்
    தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத்
    தரிசனம்செய் தேமதுரத் தமிழ்ச்சொல் மாலை
    தொடுத்திலேன் அழுதுநின் தருளை வேண்டித்
    தொழுதுதொழு தானந்தத் தூய்நீர் ஆடேன்
    எடுத்திலேன் நல்லன்எனும் பெயரை அந்தோ
    ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
  • 2. திரப்படுவேன் மையல்புரி மாய வாழ்வில்
    தியங்குவேன் சிறிதேனும் தெளிவொன் றில்லேன்
    மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே
    மங்கையர்தம் கண்கள்எனும் வலைக்குள் வீழ்வேன்
    கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன்
    கண்அனையாய் நின்தணிகை மலையைக் காணேன்
    இரப்பவர்க்கோர் அணுவளவும் ஈயேன் பேயேன்
    ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
  • 3. . செய்திலேன் நின்தொண்டர் அடிக்குற் றேவல்
    திருத்தணிகை மலையைவலஞ் செய்து கண்­ர்ப்
    பெய்திலேன் புலன்ஐந்தும் ஒடுக்கி வீதல்
    பிறத்தல்எனும் கடல்நீந்தேன் பெண்கள் தம்மை
    வைதிலேன் மலர்கொய்யேன் மாலை சூட்டேன்
    மணியேநின் திருப்புகழை வழுத்தேன் நின்பால்
    எய்திலேன் இவ்வுடல்கொண் டேழை யேன்யான்
    ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
  • 4. சீர்கொண்டார் புகழ்தணிகை மலையிற் சேரேன்
    சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநின்
    பேர்கொண்டார் தமைவணங்கி மகிழேன் பித்தேன்
    பெற்றதே அமையும்எனப் பிறங்கேன் மாதர்
    வார்கொண்டார் முலைமலைவீழ்ந் துருள்வேன் நாளும்
    வஞ்சமே செய்திடுவேன் மதிஒன் றில்லேன்
    ஏர்கொண்டார் இகழ்ந்திடஇங் கேழை யேன்யான்
    ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
  • 5. காமாந்த காரியாய் மாதர் அல்குல்
    கடல்வீழ்ந்தேன் மதிதாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்
    நாமாந்த கனைஉதைத்த நாதன் ஈன்ற
    நாயகமா மணியேநல் நலமே உன்றன்
    பூமாந்தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும்
    பொழில்கொள்தணி காசலத்தைப் புகழ்ந்து பாடேன்
    ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ
    ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
  • 6. நன்றறியேன் தீங்கனைத்தும் பறியேன் பொல்லா
    நங்கையர்தம் கண்மாய நவையைச் சற்றும்
    வென்றறியேன் கொன்றறிவார் தம்மைக் கூடும்
    வேடனேன் திருத்தணிகை வெற்பின் நின்பால்
    சென்றறியேன் இலையென்ப தறிவேன் ஒன்றும்
    செய்தறியேன் சிவதருமம் செய்வோர் நல்லோர்
    என்றறியேன் வெறியேன்இங் கந்தோ அந்தோ
    ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
  • 7. அல்லார்க்கும் குழலார்மேல் ஆசை வைப்பேன்
    ஐயாநின் திருத்தாள்மேல் அன்பு வையேன்
    செல்லார்க்கும் பொழில்தணிகை எங்கே என்று
    தேடிடேன் நின்புகழைச் சிந்தை செய்யேன்
    கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்க ணேன்புன்
    கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்
    எல்லார்க்கும் பொல்லாத பாவி யேன்யான்
    ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
  • 8. அரும்பாய நகைமடவார்க் காளாய் வாளா
    அலைகின்றேன் அறிவென்ப தறியேன் நின்பால்
    திரும்பாத பாதகனேன் திருஒன் றில்லேன்
    திருத்தணிகை மலைக்கேகச் சிந்தை செய்யேன்
    கரும்பாய வெறுத்துவேம் பருந்தும் பொல்லாக்
    காக்கைஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா
    இரும்பாய வன்நெஞ்சக் கள்வ னேன்யான்
    ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
  • 9. அம்பாதல் நெடுங்கண்ணார்க் கிச்சை கொள்வேன்
    அகமலர முகமலர்வோ டருள்செய் உன்றன்
    செம்பாத மலர்ஏத்தேன் இலவு காத்தேன்
    திருத்தணிகை யேநமது செல்வம் என்றே
    நம்பாத கொடியேன்நல் லோரைக் கண்டால்
    நாணிலேன் நடுங்கிலேன் நாயிற் பொல்லேன்
    எம்பாத கத்தைஎடுத் தியார்க்குச் சொல்வேன்
    ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
  • 10. பண்ணேன்நின் புகழ்சொல்வோர் தமக்குப் பூசை
    பாடேன்நின் திருச்சீரைப் பரமன் ஈன்ற
    கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன்
    கைகுவியேன் மெய்குளிரேன் கண்­ர் பாயேன்
    உண்ணேன்நல் ஆனந்த அமுதை அன்பர்
    உடன்ஆகேன் ஏகாந்தத் துறஓர் எண்ணம்
    எண்ணேன்வன் துயர்மண்ணேன் மனஞ்செம் புண்ணேன்
    ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.

பணித்திறஞ் சாலாப் பாடிழிவு // பணித்திறஞ் சாலாப் பாடிழிவு