திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தற் சுதந்தரம் இன்மை
taṟ sutantaram iṉmai
திருக்கதவந் திறத்தல்
tirukkatavan tiṟattal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

017. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு
attuvita āṉanta aṉupava iṭaiyīṭu

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
    திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
    உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
    உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
    பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
    பொங்கிஅகம் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
    அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
  • 2. கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
    கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
    அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
    அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
    மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
    வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
    சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
    தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
  • 3. நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
    ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
    போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ
    புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
    வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
    வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
    பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்
    பரமர்திரு வுளம்எதுவோ பரம்அறிந் திலனே.
  • 4. சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
    சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
    பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
    பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
    நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
    நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
    மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
    வள்ளல்குரு நாதர்திரு வுள்ளம்அறி யேனே.
  • 5. களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
    கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
    விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
    வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
    கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
    குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
    துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
    ஜோதிதிரு வுளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.
  • 6. திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்
    சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
    கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்
    காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
    விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்
    விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
    தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ
    தடைபடுமோ திருவுளந்தான் சற்றும்அறிந் திலனே.
  • 7. ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே
    அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்
    கானந்த மதத்தாலே காரமறை படுமோ
    கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
    ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ
    உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
    நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ
    நல்லதிரு வுளம்எதுவோ வல்லதறிந் திலனே.
  • 8. தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்
    சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
    காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ
    கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
    பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ
    பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
    வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை
    மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம்அறிந் திலனே.
  • 9. தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச்
    செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன்
    காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ
    கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
    மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ
    விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ
    ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ
    எப்படியோ திருவுளந்தான் ஏதும்அறிந் திலனே.
  • 10. ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
    நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
    ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
    உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
    ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ
    இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
    ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ
    ஐயர்திரு வுளம்எதுவோ யாதுமறிந் திலனே.

அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு // அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு