திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிவ தரிசனம்
siva tarisaṉam
அனுபோக நிலயம்
aṉupōka nilayam
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

024. வாதனைக் கழிவு
vātaṉaik kaḻivu

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. பொழுது விடிந்த தினிச்சிறிதும் பொறுத்து முடியேன் எனநின்றே
    அழுது விழிகள் நீர்துளும்பக் கூவிக் கூவி அயர்கின்றேன்
    பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள் பட்ட திலையோ பலகாலும்
    உழுது களைத்த மாடனையேன் துணைவே றறியேன் உடையானே.
  • 2. உடையாய் திருஅம் பலத்தாடல் ஒருவா ஒருவா உலவாத
    கொடையாய் எனநான் நின்றனையே கூவிக் கூவி அயர்கின்றேன்
    தடையா யினதீர்த் தருளாதே தாழ்க்கில் அழகோ புலைநாயிற்
    கடையாய்த் திரிந்தேன் கலங்குதல்சம் மதமோ கருணைக் கருத்தினுக்கே.
  • 3. கருணைக் கருத்து மலர்ந்தெனது கலக்க மனைத்துந் தவிர்த்தேஇத்
    தருணத் தருளா விடில்அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வதுதான்
    அருணச் சுடரே நின்னருளுக் கழகோ அழகென் றிருப்பாயேல்
    தெருணற் பதஞ்சார் அன்பரெலாம்236 சிரிப்பார் நானும் திகைப்பேனே.
  • 4. திகைப்பார் திகைக்க நான்சிறிதும் திகையேன் எனநின் திருவடிக்கே
    வகைப்பா மாலை சூட்டுகின்றேன் மற்றொன் றறியேன் சிறியேற்குத்
    தகைப்பா ரிடைஇத் தருணத்தே தாராய் எனிலோ பிறரெல்லாம்
    நகைப்பார் நகைக்க உடம்பினைவைத் திருத்தல் அழகோ நாயகனே.
  • 5. நாயிற் கடையேன் கலக்கமெலாம் தவிர்த்து நினது நல்லருளை
    ஈயிற் கருணைப் பெருங்கடலே என்னே கெடுவ தியற்கையிலே
    தாயிற் பெரிதும்237 தயவுடையான் குற்றம் புரிந்தோன் தன்னையும்ஓர்
    சேயிற் கருதி அணைத்தான்என் றுரைப்பா ருனைத்தான் தெரிந்தோரே.
  • 6. தெரிந்த பெரியர்க் கருள்புரிதல் சிறப்பென் றுரைத்த தெய்வமறை
    திரிந்த சிறியர்க் கருள்புரிதல் சிறப்பிற் சிறப்பென் றுரைத்தனவே
    புரிந்தம் மறையைப் புகன்றவனும் நீயே என்றால் புண்ணியனே
    விரிந்த மனத்துச் சிறியேனுக் கிரங்கி அருளல் வேண்டாவோ.
  • 7. வேண்டார் உளரோ நின்னருளை மேலோ ரன்றிக் கீழோரும்
    ஈண்டார் வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான்வேண்டல்
    தூண்டா விளக்கே திருப்பொதுவிற் சோதி மணியே ஆறொடுமூன்
    றாண்டா வதிலே முன்னென்னை ஆண்டாய் கருணை அளித்தருளே.
  • 8. அருளே வடிவாம் அரசேநீ அருளா விடில்இவ் வடியேனுக்
    கிருளே தொலைய அருளளிப்பார் எவரே எல்லாம் வல்லோய்நின்
    பொருளேய் வடிவிற் கலைஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்தெங்குந்
    தெருளே யுறஎத் தலைவருக்குஞ் சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.
  • 9. திகழ்ந்தார் கின்ற திருப்பொதுவில் சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
    புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய்உரைத்தே
    இகழ்ந்தேன் தனைக்கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கிங் கிசைத்திலைநீ
    அகழ்ந்தார் தமையும் பொறுக்கஎன அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.
  • 10. எல்லாம் வகுத்தாய் எனக்கருளில் யாரே தடுப்பார் எல்லாஞ்செய்
    வல்லான் வகுத்த வண்ணம்என மகிழ்வார் என்கண் மணியேஎன்
    சொல்லா னவையும் அணிந்துகொண்ட துரையே சோதித் திருப்பொதுவில்
    நல்லாய் கருணை நடத்தரசே தருணம் இதுநீ நயந்தருளே.
  • 11. நயந்த கருணை நடத்தரசே ஞான அமுதே நல்லோர்கள்
    வியந்த மணியே மெய்யறிவாம் விளக்கே என்னை விதித்தோனே
    கயந்த மனத்தேன் எனினும்மிகக் கலங்கி நரகக் கடுங்கடையில்
    பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்தருளே.
  • 12. பார்த்தார் இரங்கச் சிறியேன்நான் பாவி மனத்தால் பட்டதுயர்
    தீர்த்தாய் அந்நாள் அதுதொடங்கித் தெய்வந் துணைஎன் றிருக்கின்றேன்
    சேர்த்தார்238 உலகில் இந்நாளில் சிறியேன் தனைவெந் துயர்ப்பாவி
    ஈர்த்தால் அதுகண் டிருப்பதுவோ கருணைக் கழகிங் கெந்தாயே.
  • 13. தாயே எனைத்தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே
    பேயேன் செய்த பெருங்குற்றம் பொறுத்தாட் கொண்ட பெரியோனே
    நீயே இந்நாள் முகமறியார் நிலையில் இருந்தால் நீடுலகில்
    நாயே அனையேன் எவர்துணைஎன் றெங்கே புகுவேன் நவிலாயே.
  • 14. ஆயேன் வேதா கமங்களைநன் கறியேன் சிறியேன் அவலமிகும்
    பேயேன் எனினும் வலிந்தென்னைப் பெற்ற கருணைப் பெருமானே
    நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன்நான்
    காயே எனினும் கனிஆகும் அன்றே நினது கருணைக்கே.
  • 15. கருணா நிதியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கலந்தொளிரும்
    தெருணா டொளியே வெளியேமெய்ச் சிவமே சித்த சிகாமணியே
    இருணா டுலகில் அறிவின்றி இருக்கத் தரியேன் இதுதருணம்
    தருணா அடியேற் கருட்சோதி தருவாய் என்முன் வருவாயே.
  • 16. வருவாய் என்கண் மணிநீஎன் மனத்திற் குறித்த வண்ணமெலாம்
    தருவாய் தருணம் இதுவேமெய்த் தலைவா ஞான சபாபதியே
    உருவாய்239 சிறிது தாழ்க்கில்உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடைவாய்
    இருவாய் அலநின் திருவடிப்பாட் டிசைக்கும் ஒருவாய் இசைத்தேனே.
  • 17. தேனே திருச்சிற் றம்பலத்தில் தெள்ளா ரமுதே சிவஞான
    வானே ஞான சித்தசிகா மணியே என்கண் மணியேஎன்
    ஊனே புகுந்தென் உளங்கலந்த உடையாய் அடியேன் உவந்திடநீ
    தானே மகிழ்ந்து தந்தாய்இத் தருணம் கைம்மா றறியேனே.
  • 18. அறியேன் சிறியேன் செய்தபிழை அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக்
    குறியே குணமே பெறஎன்னைக் குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க
    நெறியே விளங்க எனைக்கலந்து நிறைந்தாய் நின்னை ஒருகணமும்
    பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே.
  • 19. சுகமே நிரம்பப் பெருங்கருணைத் தொட்டில் இடத்தே எனைஅமர்த்தி
    அகமே விளங்கத் திருஅருளா ரமுதம் அளித்தே அணைத்தருளி
    முகமே மலர்த்திச் சித்திநிலை முழுதும் கொடுத்து மூவாமல்
    சகமேல்240 இருக்கப் புரிந்தாயே தாயே என்னைத் தந்தாயே.
  • 20. தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலுந் தனித்தலைமை
    எந்தாய் நினது பெருங்கருணை என்என் றுரைப்பேன் இவ்வுலகில்
    சிந்தா குலந்தீர்த் தருள்எனநான் சிறிதே கூவு முன்என்பால்
    வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான்பொழுதே.

    • 235. பலநாளும் - ச. மு. க. பதிப்பு.
    • 236. அடியரெலாம் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
    • 237. தாயிற் பெரிய - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.
    • 238. சேர்த்தாய் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
    • 239. ஒருவா - ச. மு. க.
    • 240. சகமே - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க.

வாதனைக் கழிவு // வாதனைக் கழிவு

No audios found!