திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அவா அறுத்தல்
avā aṟuttal
சிற்சபை விளக்கம்
siṟsapai viḷakkam
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

013. திருவருள் விழைதல்
tiruvaruḷ viḻaital

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின்
    திருவுளக் குறிப்பையும் தெரியேன்
    உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
    உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
    மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
    வினையனேன் என்செய விரைகேன்
    பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன்
    புலையனேன் புகல்அறி யேனே.
  • 2. அறிவிலேன் அறிந்தார்க் கடிப்பணி புரியேன்
    அச்சமும் அவலமும் உடையேன்
    செறிவிலேன் பொதுவாம் தெய்வம்நீ நினது
    திருவுளத் தெனைநினை யாயேல்
    எறிவிலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன்
    என்செய்வேன் யார்துணை என்பேன்
    பிறிவிலேன் பிரிந்தால் உயிர்தரிக் கலன்என்
    பிழைபொறுத் தருள்வதுன் கடனே.
  • 3. உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன்
    உடல்பொருள் ஆவியும் உனக்கே
    பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த
    பின்னும்நான் தளருதல் அழகோ
    என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன்
    என்செய்வேன் யார்துணை என்பேன்
    முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி
    முறிதல்ஓர் கணம்தரி யேனே.
  • 4. தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது
    தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே
    தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும்
    தெரித்திடாய் எனில்இடர் எனைத்தான்
    எரித்திடும் அந்தோ என்செய்வேன் எங்கே
    எய்துகேன் யார்துணை என்பேன்
    திரித்தநெஞ் சகத்தேன் சரித்திரம் அனைத்தும்
    திருவுளம் தெரிந்தது தானே.
  • 5. தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே
    சத்தியம் உணர்ந்தனன் தனித்தே
    தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின்
    திருவுளம் தெரிந்ததெந் தாயே
    ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும்
    அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில்
    நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே
    நடம்புரி ஞானநா டகனே.
  • 6. ஞானமும் அதனால் அடைஅனு பவமும்
    நாயினேன் உணர்ந்திட உணர்த்தி
    ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள்
    இந்தநாள் அடியனேன் இங்கே
    ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி
    உழைக்கின்றேன் ஒருசிறி தெனினும்
    ஏனென வினவா திருத்தலும் அழகோ
    இறையும்நான் தரிக்கலன் இனியே.
  • 7. இனியநற் றாயின் இனியஎன் அரசே
    என்னிரு கண்ணினுண் மணியே
    கனிஎன இனிக்கும் கருணையா ரமுதே
    கனகஅம் பலத்துறும் களிப்பே
    துனிஉறு மனமும் சோம்புறும் உணர்வும்
    சோர்வுறு முகமும்கொண் டடியேன்
    தனிஉளங் கலங்கல் அழகதோ எனைத்தான்
    தந்தநற் றந்தைநீ அலையோ.
  • 8. தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்
    சாமியும் பூமியும் பொருளும்
    சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்
    சுற்றமும் முற்றும்நீ என்றே
    சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்
    திருவுளம் தெரிந்ததே எந்தாய்
    நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்
    நீதியோ நின்அருட் கழகோ.
  • 9. அழகனே ஞான அமுதனே என்றன்
    அப்பனே அம்பலத் தரசே
    குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும்
    கொழுநனே சுத்தசன் மார்க்கக்
    கழகநேர் நின்ற கருணைமா நிதியே
    கடவுளே கடவுளே எனநான்
    பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில்
    பழங்கணால் அழுங்குதல் அழகோ.
  • 10. பழம்பிழி மதுரப் பாட்டல எனினும்
    பத்தரும் பித்தரும் பிதற்றும்
    கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக்
    கிளர்ச்சிஎன் றறிந்தநாள் முதலாய்
    வழங்குநின் புகழே பாடுறு கின்றேன்
    மற்றொரு பற்றும்இங் கறியேன்
    சழங்குடை உலகில் தளருதல் அழகோ
    தந்தையுந் தாயும்நீ அலையோ.
  • 11. தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான
    சபையிலே தனிநடம் புரியும்
    தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன்
    தூக்கமும் சோம்பலும் துயரும்
    மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும்
    வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ
    நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன்
    நல்அருட் சோதிதந் தருளே.
  • 12. சோதியேல் எனைநீ சோதனை தொடங்கில்
    சூழ்உயிர் விடத்தொடங் குவன்நான்
    நீதியே நிறைநின் திருவருள் அறிய
    நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே
    ஓதியே உணர்தற் கரும்பெரும் பொருளே
    உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
    ஆதியே நடுவே அந்தமே ஆதி
    நடுஅந்தம் இல்லதோர் அறிவே.
  • 13. இல்லைஉண் டெணும்இவ் விருமையும் கடந்தோர்
    இயற்கையின் நிறைந்தபே ரின்பே
    அல்லைஉண் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே
    அம்பலத் தாடல்செய் அமுதே
    வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து
    வழங்குக நின்அருள் வழங்கல்
    நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ
    நான்உயிர் தரிக்கலன் அரசே.
  • 14. அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்
    அருளர செனஅறிந் தனன்பின்
    உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை
    உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்
    வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி
    வழிகின்ற தென்வசங் கடந்தே
    இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை
    ஈந்தருள் இற்றைஇப் போதே.
  • 15. போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த
    புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும்
    சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும்
    தூயர்கள் மனம்அது துளங்கித்
    தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ
    தனிஅருட் சோதியால் அந்த
    வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம்
    வழங்குவித் தருளுக விரைந்தே.
  • 16. விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும்
    விளம்பும்இத் தருணம்என் உளந்தான்
    கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக்
    கரைஎலாம் கடந்தது கண்டாய்
    வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம்
    வல்லவா அம்பல வாணா
    திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித்
    திகழ்வித்த சித்தனே சிவனே.
  • 17. சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும்
    தெய்வம்ஒன் றேஎனும் திறமும்
    நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும்
    நன்மையும் நரைதிரை முதலாம்
    துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச்
    சுகவடி வம்பெறும் பேறும்
    தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ
    தந்தருள் தருணம்ஈ தெனக்கே.
  • 18. தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
    தனிநெறி உலகெலாம் தழைப்பக்
    கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
    கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
    பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
    புண்ணியம் பொற்புற வயங்க
    அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
  • 19. என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற்
    றிருள்இர வொழிந்தது முழுதும்
    மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன்
    மங்கல முழங்குகின் றனசீர்ப்
    பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப்
    பூவையர் புணர்ந்திடப் போந்தார்
    சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி
    துலங்கவந் தருளுக விரைந்தே.
  • 20. வந்தருள் புரிக விரைந்திது தருணம்
    மாமணி மன்றிலே ஞான
    சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
    சுத்தசன் மார்க்கசற் குருவே
    தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல
    தனிஅருட் சோதியை எனது
    சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே
    செய்வித் தருள்கசெய் வகையே.

திருவருள் விழைதல் // திருவருள் விழைதல்