திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பிரிவாற்றாமை
pirivāṟṟāmai
திருவருட் பேறு
tiruvaruṭ pēṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

030. பிரியேன் என்றல்
piriyēṉ eṉṟal

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
    அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே
    இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
    எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
    தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின்
    தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும்
    துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே
    சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே.
  • 2. ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
    அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
    கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
    குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
    ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
    உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
    மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
    மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
  • 3. படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
    பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
    உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
    உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
    வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
    மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
    நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
    நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.
  • 4. வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
    மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
    ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
    இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
    மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
    மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
    கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
    கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.
  • 5. செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
    திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
    பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே
    பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
    எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
    எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
    ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
    அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.
  • 6. முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு
    முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன்
    இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே
    எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ
    அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே
    ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய்
    என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே
    என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே.
  • 7. உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
    உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ
    என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
    என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
    அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
    அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
    இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
    இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.
  • 8. நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது
    நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்
    வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை
    மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய
    ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
    உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்
    பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே
    பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.
  • 9. தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே
    சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த
    உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்
    ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ
    கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது
    கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான்
    வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி
    விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே.
  • 10. பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
    பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
    துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
    துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த
    அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
    அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
    உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
    உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.
  • 11. கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே
    கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே
    சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்
    தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்
    தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து
    தானாகி நானாடத் தருணம்இது தானே
    குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்
    குருவேஎன் குற்றமெலாம் குணமாகக்கொண் டவனே.

பிரியேன் என்றல் // பிரியேன் என்றல்