திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பிரிவாற்றாமை
pirivāṟṟāmai
சிவபுண்ணியப் பேறு
sivapuṇṇiyap pēṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

069. ஆனந்தானுபவம்
āṉantāṉupavam

    நேரிசை வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம்
    வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே
    காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற
    வாணா நினக்கடிமை வாய்த்து.
  • 2. காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
    சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்
    சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்
    ஏகா நினக்கடிமை ஏற்று.
  • 3. மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
    யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
    நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
    தாய்க்குத் தனிஇயற்கை தான்.
  • 4. கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
    பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
    தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
    எந்தாய் கருணை இது.
  • 5. கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
    உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்
    அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும்
    அழியாச்சிற் றம்பலத்தே யான்.
  • 6. பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
    போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
    றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
    நாடுகின்றேன் சிற்சபையை நான்.
  • 7. எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
    உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச்
    சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
    குற்றம் பலபொறுத்துக் கொண்டு.
  • 8. கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும்
    கண்டான்265 களித்தான் கலந்திருந்தான் - பண்டாய
    நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில்
    வான்மயத்தான் என்னை மகிழ்ந்து.
  • 9. கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
    உண்டேன் அழியா உரம்266 பெற்றேன் - பண்டே
    எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம்
    தனைஉவந்து கொண்டான் தனை.
  • 10. தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
    மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
    குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
    மணவாளன் பாத மலர்.
  • 11. திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
    குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
    தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
    மாப்பிள்ளை பாத மலர்.
  • 12. என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின்
    தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச்
    சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
    மாலைஇட்டான் பாதமலர்.

    • 264. ஓங்குமறை - படிவேறுபாடு. ஆ. பா.
    • 265. கண்டே - முதற்பதிப்பு. பி. இரா.
    • 266. வரம் - படிவேறுபாடு. ஆ. பா.

ஆனந்தானுபவம் // ஆனந்தானுபவம்

No audios found!