திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்
kaṇṭēṉ kaṉintēṉ kalantēṉ eṉal
திருவடி நிலை
tiruvaṭi nilai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

043. இறை திருக்காட்சி
iṟai tirukkāṭsi

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை
    அருட்பெருஞ் ஜோதியை அரசே
    மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
    வள்ளலை மாணிக்க மணியைப்
    பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
    புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்
    தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான
    தீபத்தைக் கண்டுகொண் டேனே.
  • 2. துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்
    துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை
    என்பொலா மணியை என்சிகா மணியை
    என்னிரு கண்ணுள்மா மணியை
    அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை
    அருட்பெருஞ் ஜோதியை அடியேன்
    என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த
    எந்தையைக் கண்டுகொண் டேனே.
  • 3. சிதத்திலே271 ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்
    சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
    பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
    பரம்பர வாழ்வைஎம் பதியை
    மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
    மருந்தைமா மந்திரந் தன்னை
    இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
    இறைவனைக் கண்டுகொண் டேனே.
  • 4. உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த
    ஒருபெரும் பதியைஎன் உவப்பைப்
    புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது
    பொருளைஎன் புண்ணியப் பயனைக்
    கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த
    குருவைஎண் குணப்பெருங் குன்றை
    மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த
    வள்ளலைக் கண்டுகொண் டேனே.
  • 5. புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட
    பொற்சபை அப்பனை வேதம்
    சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட
    ஜோதியைச் சோதியா தென்னை
    மல்லிகை மாலை அணிந்துளே கலந்து
    மன்னிய பதியைஎன் வாழ்வை
    எல்லியும் இரவும் என்னைவிட் டகலா
    இறைவனைக் கண்டுகொண் டேனே.
  • 6. பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய்
    பதியுமாம் ஒருபசு பதியை
    நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி
    நல்கிய கருணைநா யகனை
    எண்ணிய படியே எனக்கருள் புரிந்த
    இறைவனை மறைமுடி இலங்கும்
    தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத்
    தந்தையைக் கண்டுகொண் டேனே.
  • 7. பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்
    பிறங்கிய பொதுமையைப் பெரிய
    தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த
    சாமியைத் தயாநிதி தன்னை
    வண்மையை அழியா வரத்தினை ஞான
    வாழ்வைஎன் மதியிலே விளங்கும்
    உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள்
    ஒருவனைக் கண்டுகொண் டேனே.
  • 8. ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
    அறிவித்த அறிவைஎன் அன்பைச்
    சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
    சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
    நீதியை எல்லா நிலைகளும் கடந்த
    நிலையிலே நிறைந்தமா நிதியை
    ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
    ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
  • 9. என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
    என்னைவாழ் விக்கின்ற பதியைப்
    பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே
    பொருந்திய மருந்தையென் பொருளை
    வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
    வைத்தசன் மார்க்கசற் குருவைக்
    கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
    கோயிலில் கண்டுகொண் டேனே.
  • 10. புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில்
    போந்தருள் அளித்தசற் குருவைக்
    கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த
    கருணையங் கடவுளைத் தனது
    சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே
    தோளுறப் புனைந்தமெய்த் துணையைத்
    தன்னிக ரில்லாத் தலைவனை எனது
    தந்தையைக் கண்டுகொண் டேனே.
  • 11. ஏங்கலை மகனே தூங்கலை எனவந்
    தெடுத்தெனை அணைத்தஎன் தாயை
    ஓங்கிய எனது தந்தையை எல்லாம்
    உடையஎன் ஒருபெரும் பதியைப்
    பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப்
    பரிசும்இங் களித்ததற் பரத்தைத்
    தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத்
    தலைவனைக் கண்டுகொண் டேனே.
  • 12. துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்
    சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை
    அன்புளே கலந்த தந்தையை என்றன்
    ஆவியைப் பாவியேன் உளத்தை
    இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி
    இனிதமர்ந் தருளிய இறையை
    வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்
    வள்ளலைக் கண்டுகொண் டேனே.
  • 13. நனவிலும் எனது கனவிலும் எனக்கே
    நண்ணிய தண்ணிய அமுதை
    மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
    வழங்கிய பெருந்தயா நிதியைச்
    சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
    சிவகுரு பதியைஎன் சிறப்பை
    உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
    ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
  • 14. கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக்
    கருதுகோற் றேன்நறுஞ் சுவையை
    அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை
    ஆவியை ஆவியுட் கலந்த
    பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப்
    பேசுதற் கரும்பெரும் பேற்றை
    விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும்
    விளக்கினைக் கண்டுகொண் டேனே.
  • 15. களங்கொளுங் கடையேன் களங்கெலாங் தவிர்த்துக்
    களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
    உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
    துள்ளகத் தூறும்இன் னமுதை
    வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
    மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
    குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
    குருவையான் கண்டுகொண் டேனே.
  • 16. சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
    சிதம்பர நடம்புரி சிவத்தைப்
    பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
    பதிசிவ பதத்தைத்தற் பதத்தை
    இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
    யாவுமாய் அல்லவாம் பொருளைச்
    சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
    சாமியைக் கண்டுகொண் டேனே.
  • 17. ஆரண முடிமேல் அமர்பிர மத்தை
    ஆகம முடிஅமர் பரத்தைக்
    காரண வரத்தைக் காரிய தரத்தைக்
    காரிய காரணக் கருவைத்
    தாரண நிலையைத் தத்துவ பதியைச்
    சத்திய நித்திய தலத்தைப்
    பூரண சுகத்தைப் பூரண சிவமாம்
    பொருளினைக் கண்டுகொண் டேனே.
  • 18. சுத்தவேத தாந்த பிரமரா சியத்தைச்
    சுத்தசித் தாந்தரா சியத்தைத்
    தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
    சமரச சத்தியப் பொருளைச்
    சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
    தெளிந்தபே ரானந்தத் தெளிவை
    வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
    மெய்மையைக் கண்டுகொண் டேனே.
  • 19. சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
    சபைநடம் புரிகின்ற தனியைத்
    தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச்
    சத்துவ நித்தசற் குருவை
    அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா
    ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை
    நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார
    நிதியைக் கண்டுகொண் டேனே.
  • 20. அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும்
    அருட்பெருஞ் சோதியை உலகக்
    களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும்
    காட்சியைக் கருணையங் கடலை
    உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல
    ஒளியையும் உதவிய ஒளியைக்
    குளவயின் நிறைந்த குருசிவ பதியைக்
    கோயிலில் கண்டுகொண் டேனே.
  • 21. சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
    சமரச சத்திய வெளியைச்
    சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
    துலங்கிய ஜோதியைச் சோதிப்
    பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
    பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
    சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
    தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
  • 22. அடிநடு முடியோர் அணுத்துணை யேனும்
    அறிந்திடப் படாதமெய் அறிவைப்
    படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த
    பதியிலே விளங்குமெய்ப் பதியைக்
    கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற்
    கடைக்கணித் தருளிய கருணைக்
    கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக்
    கோயிலில் கண்டுகொண் டேனே.
  • 23. பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும்
    பற்றறத் தவிர்த்தருட் பரிசும்
    நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு
    நல்கிய நண்பைநன் னாத
    இயமுற வெனது குளநடு நடஞ்செய்
    எந்தையை என்னுயிர்க் குயிரைப்
    புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப்
    பொற்புறக் கண்டுகொண் டேனே.
  • 24. கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்
    ககனத்தைக் காற்றினை அமுதை
    நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா
    நின்மல நிற்குண நிறைவை
    மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை
    வரவுபோக் கற்றசின் மயத்தை
    அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை
    அன்பினிற் கண்டுகொண் டேனே.
  • 25. மும்மையை எல்லாம் உடையபே ரரசை
    முழுதொருங் குணர்த்திய உணர்வை
    வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம்
    வியப்புற அளித்தமெய் விளைவைச்
    செம்மையை எல்லாச் சித்தியும் என்பால்
    சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை
    அம்மையைக் கருணை அப்பனை என்பே
    ரன்பனைக் கண்டுகொண் டேனே.
  • 26. கருத்தனை எனது கண்அனை யவனைக்
    கருணையா ரமுதெனக் களித்த
    ஒருத்தனை என்னை உடையநா யகனை
    உண்மைவே தாகம முடியின்
    அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற்
    றம்பலத் தருள்நடம் புரியும்
    நிருத்தனை எனது நேயனை ஞான
    நிலையனைக் கண்டுகொண் டேனே.
  • 27. வித்தெலாம் அளித்த விமலனை எல்லா
    விளைவையும் விளைக்கவல் லவனை
    அத்தெலாங்272 காட்டும் அரும்பெறல் மணியை
    ஆனந்தக் கூத்தனை அரசைச்
    சத்தெலாம் ஆன சயம்புவை ஞான
    சபைத்தனித் தலைவனைத் தவனைச்
    சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந்
    தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
  • 28. உத்தர ஞான சித்திமா புரத்தின்
    ஓங்கிய ஒருபெரும் பதியை
    உத்தர ஞான சிதம்பர ஒளியை
    உண்மையை ஒருதனி உணர்வை
    உத்தர ஞான நடம்புரி கின்ற
    ஒருவனை உலகெலாம் வழுத்தும்
    உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்
    ஓதியைக் கண்டுகொண் டேனே.
  • 29. புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப்
    புணர்த்திய புனிதனை எல்லா
    நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில்
    நிறுத்திய நிமலனை எனக்கு
    மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா
    வாழ்க்கையில் வாழவைத் தவனைத்
    தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
    தந்தையைக் கண்டுகொண் டேனே.
  • 30. பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த
    பரமனை என்னுளே பழுத்த
    கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக்
    கடவுளைக் கண்ணினுள் மணியைப்
    புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப்
    பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத்
    தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
    தந்தையைக் கண்டுகொண் டேனே.

    • 271. சிதம் - ஞானம்
    • 272. அத்து - செந்நிறம். முதற்பதிப்பு.

இறை திருக்காட்சி // இறை திருக்காட்சி

No audios found!