திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தலைவி தோழிக்கு உரைத்தல்
talaivi tōḻikku uraittal
பாங்கி தலைவிபெற்றி உரைத்தல்
pāṅki talaivipeṟṟi uraittal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

075. நற்றாய் கூறல்
naṟṟāy kūṟal

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ
    கண்டுகொள் கணவனே என்றாள்
    ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்
    உவந்திலேன் உண்மையீ தென்றாள்
    பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த
    பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்
    மாதய வுடைய வள்ளலே என்றாள்
    வரத்தினால் நான்பெற்ற மகளே.
  • 2. மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான்
    மறப்பனோ கனவினும் என்றாள்
    உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ
    உயிர்தரி யாதெனக் கென்றாள்
    கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக்
    கடலமு தளித்தருள் என்றாள்
    வயங்குசிற் சபையில் வரதனே என்றாள்
    வரத்தினால் நான்பெற்ற மகளே.
  • 3. அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே
    அன்பினால் அணைத்தருள் என்றாள்
    பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்
    படமுடி யாதெனக் கென்றாள்
    செஞ்செவே எனது கருத்தெலாம் உனது
    திருவுளம் அறியுமே என்றாள்
    வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்
    வரத்தினால் நான்பெற்ற மகளே.
  • 4. பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப்
    புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
    காமிஎன் றெனைநீ கைவிடேல் காமக்
    கருத்தெனக் கில்லைகாண் என்றாள்
    சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ
    சற்றுநான் தரித்திடேன் என்றாள்
    மாமிகு கருணை வள்ளலே என்றாள்
    வரத்தினால் நான்பெற்ற மகளே.
  • 5. அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
    ஆசைமேற் பொங்கிய தென்றாள்
    தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
    தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
    தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
    சொலமுடி யாதெனக் கென்றாள்
    மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
    வரத்தினால் நான்பெற்ற மகளே.
  • 6. தடுத்திடல் வல்லார் இல்லைநின் அருளைத்
    தருகநற் றருணம்ஈ தென்றாள்
    கொடுத்திடில் ஐயோ நின்னருட் பெருமை
    குறையுமோ குறைந்திடா தென்றாள்
    நடுத்தய விலர்போன் றிருத்தலுன் றனக்கு
    ஞாயமோ நண்பனே என்றாள்
    வடுத்தினும் வாயேன் அல்லன்நான் என்றாள்
    வரத்தினால் நான்பெற்ற மகளே.
  • 7. பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
    பொங்கிய தாசைமேல் என்றாள்
    என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
    என்னள வன்றுகாண் என்றாள்
    கொன்செயும் உலகர் என்னையும் உனது
    குறிப்பையும் குறித்திலார் என்றாள்
    வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
    வரத்தினால் நான்பெற்ற மகளே.
  • 8. மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு
    மேவிலை என்னையோ என்றாள்
    நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்
    நல்லவர்க் கடுப்பதோ என்றாள்
    மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற
    வைத்தல்உன் மரபல என்றாள்
    வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்
    வரத்தினால் நான்பெற்ற மகளே.
  • 9. ஒன்றிலேன் பிறிதொன் றுன்னருட் சோதி
    ஒன்றுற ஒன்றினேன் என்றாள்
    நன்றிலேன் எனினும் நின்திரு வடியை
    நம்பினேன் நயந்தருள் என்றாள்
    குன்றிலே இருத்தற் குரியநான் துயரக்
    குழியிலே இருந்திடேன் என்றாள்
    மன்றிலே நடஞ்செய் வள்ளலே என்றாள்
    வரத்தினால் நான்பெற்ற மகளே.
  • 10. ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்
    அன்பினால் கூடினன் என்றாள்
    கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்
    கூடுதல் கூடுமோ என்றாள்
    பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்
    பரிசெலாம் புரிந்தனன் என்றாள்
    வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்
    வரத்தினால் நான்பெற்ற மகளே.

நற்றாய் கூறல் // நற்றாய் கூறல்

No audios found!