திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நாள் அவம்படாமை வேண்டல்
nāḷ avampaṭāmai vēṇṭal
கூடல் விழைதல்
kūṭal viḻaital
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

038. அன்பிற் பேதுறல்
aṉpiṟ pētuṟal

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. மூடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
    முறியனேன் தனக்குநின் அடியாம்
    ஏடவிழ் கமலத் திருநற வருந்த
    என்றுகொல் அருள்புரிந் திடுவாய்
    ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
    ஐயருக் கொருதவப் பேறே
    கோடணி தருக்கள் குலவும்நற் றணிகைக்
    குன்றமர்ந் திடுகுணக் குன்றே
  • 2. கற்றவர் புகழ்நின் திருவடி மலரைக்
    கடையனேன் முடிமிசை அமர்த்தி
    உற்றஇவ் வுலக மயக்கற மெய்மை
    உணர்த்தும்நாள் எந்தநாள் அறியேன்
    நற்றவர் உணரும் பரசிவத் தெழுந்த
    நல்அருட் சோதியே நவைதீர்
    கொற்றவேல் உகந்த குமரனே தணிகைக்
    குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
  • 3. ஞாலவாழ் வெனும்புன் மலமிசைந் துழலும்
    நாயினும் கடையஇந் நாய்க்குன்
    சீலவாழ் வளிக்கும் திருவடிக் கமலத்
    தேன்தரு நாளும்ஒன் றுண்டோ
    ஆலவாய் உகந்த ஒருசிவ தருவில்
    அருள்பழுத் தளிந்தசெங் கனியே
    கோலவா னவர்கள் புகழ்திருத் தணிகைக்
    குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
  • 4. பவம்எனுங் கடற்குள் வீழ்ந்துழன் றேங்கும்
    பாவியேன் தன்முகம் பார்த்திங்
    கெவையும்நா டாமல் என்னடி நிழற்கீழ்
    இருந்திடென் றுரைப்பதெந் நாளோ
    சிவம்எனும் தருமக் கடல்அகத் தெழுந்த
    தெள்ளிய அமுதமே தேனே
    குவிமுலை வல்லிக் கொடியொடுந் தணிகைக்
    குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
  • 5. முலைமுகங் காட்டி மயக்கிடும் கொடியார்
    முன்புழன் றேங்கும்இவ் எளியேன்
    நிலைமுகங் காட்டும் நின்திருப் பாத
    நீழல்வந் தடையும்நாள் என்றோ
    மலைமுகம் குழைய வளைத்திடும் தெய்வ
    மணிமகிழ் கண்ணினுள் மணியே
    கொலைமுகம் செல்லார்க் கருள்தருந் தணிகைக்
    குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
  • 6. வருபயன் அறியா துழன்றிடும் ஏழை
    மதியினேன் உய்ந்திடும் வண்ணம்
    ஒருவரும் நினது திருவடிப் புகழை
    உன்னும்நாள் எந்தநாள் அறியேன்
    அருவுரு ஆகும் சிவபிரான் அளித்த
    அரும்பெறல் செல்வமே அமுதே
    குருவுரு ஆகி அருள்தரும் தணிகைக்
    குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
  • 7. அழிதரும் உலக வாழ்வினை மெய்யென்
    றலைந்திடும் பாவியேன் இயற்றும்
    பழிதரும் பிழையை எண்ணுறேல் இன்று
    பாதுகாத் தளிப்பதுன் பரமே
    மொழிதரும் முக்கட் செங்கரும் பீன்ற
    முத்தமே முக்தியின் முதலே
    கொழிதரும் அருவி பொழிதருந் தணிகைக்
    குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
  • 8. நின்நிலை அறியா வஞ்சகர் இடத்தில்
    நின்றுநின் றலைதரும் எளியேன்
    தன்நிலை அறிந்தும் ஐயகோ இன்னும்
    தயைஇலா திருந்தனை என்னே
    பொன்நிலைப் பொதுவில் நடஞ்செயும் பவளப்
    பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே
    கொல்நிலை வேல்கைக் கொளும்திருத் தணிகைக்
    குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
  • 9. பாடிநின் திருச்சீர் புகழ்ந்திடாக் கொடிய
    பதகர்பால் நாள்தொறும் சென்றே
    வாடிநின் றேங்கும் ஏழையேன் நெஞ்ச
    வாட்டம்இங் கறிந்திலை என்னே
    ஆடிநீ றாடி அருள்செயும் பரமன்
    அகம்மகிழ் அரும்பெறல் மருந்தே
    கோடிலங் குயர்வான் அணிதிருத் தணிகைக்
    குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
  • 10. வன்பொடு செருக்கும் வஞ்சர்பால் அலையா
    வண்ணம்இன் றருள்செயாய் என்னில்
    துன்பொடு மெலிவேன் நின்திரு மலர்த்தாள்
    துணைஅன்றித் துணைஒன்றும் காணேன்
    அன்பொடும் பரமன் உமைகையில் கொடுக்க
    அகமகிழ்ந் தணைக்கும்ஆர் அமுதே
    கொன்பெறும் இலைவேல் கரத்தொடும் தணிகைக்
    குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

அன்பிற் பேதுறல் // அன்பிற் பேதுறல்