Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
பிரசாதப் பதிகம்
pirasātap patikam
திருப்புகற் பதிகம்
tiruppukaṟ patikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
073. பிரார்த்தனைப் பதிகம்
pirārttaṉaip patikam
திருவொற்றியூரும் திருத்தில்லையும்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்
1.
அப்பார் மலர்ச்சடை ஆரமு தேஎன் அருட்டுணையே
துப்பார் பவள மணிக்குன்ற மேசிற் சுகக்கடலே
வெப்பார் தருதுய ரால்மெலி கின்றனன் வெற்றடியேன்
இப்பார் தனில்என்னை அப்பாஅஞ் சேல்என ஏன்றுகொள்ளே.
2.
ஏன்றுகொள் வான்நம தின்னுயிர் போல்முக்கண் எந்தைஎன்றே
சான்றுகொள் வாய்நினை நம்பிநின் றேன்இத் தமிஅடியேன்
மான்றுகொள் வான்வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல்
ஞான்றுகொள் வேன்அன்றி யாதுசெய் வேன்இந்த நானிலத்தே.
3.
நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர்
சலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே
குலத்தேவர் போற்றும் குணக்குன்ற மேஎங் குலதெய்வமே
புலத்தே இழிதகை யேன்பிழை யாவும் பொறுத்தருளே.
4.
அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில்
பொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன்
இருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன்
மருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே.
5.
வாயார நின்பொன் மலர்த்தாள் துணையே வழுத்துகிலேன்
ஓயா இடர்உழந் துள்நலி கின்றனன் ஓகெடுவேன்
பேயாய்ப் பிறந்திலன் பேயும்ஒவ் வேன்புலைப் பேறுவக்கும்
நாயாய்ப் பிறந்திலன் நாய்க்கும் கடைப்பட்ட நான்இங்ஙனே.
6.
நான்செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்துநின் நல்லருள்நீ
தான்செய் தனைஎனில் ஐயாமுக் கட்பெருஞ் சாமிஅவற்
கேன்செய் தனைஎன நிற்றடுப் பார்இலை என்அரசே
வான்செய்த நன்றியை யார்தடுத் தார்இந்த வையகத்தே.
7.
வையகத் தேஇடர் மாக்கடல் மூழ்கி வருந்துகின்ற
பொய்யகத் தேனைப் புரந்தரு ளாமல் புறம்பொழித்தால்
நையகத் தேன்எது செய்வேன்அந் தோஉள் நலிகுவன்காண்
மெய்யகத் தேநின் றொளிர்தரும் ஞான விரிசுடரே.
8.
விரிதுய ரால்தடு மாறுகின் றேன்இந்த வெவ்வினையேன்
பெரிதுய ராநின்ற நல்லோர் அடையும்நின் பேரருள்தான்
அரிதுகண் டாய்அடை வேன்எனல் ஆயினும் ஐயமணிப்
புரிதுவர் வார்சடை யாய்நீ உவப்பில் புரியில்உண்டே.
9.
உண்டோஎன் போல்துய ரால்அலை கின்றவர் உத்தமநீ
கண்டோர் சிறிதும் இரங்குகி லாய்இக் கடையவனேன்
பண்டோர் துணைஅறி யேன்நின்னை யன்றிநிற் பற்றிநின்றேன்
எண்டோள் மணிமிடற் றெந்தாய் கருணை இருங்கடலே.
10.
கடலே அனைய துயர்மிகை யால்உட் கலங்கும்என்னை
விடலே அருளன் றெடுத்தாளல் வேண்டும்என் விண்ணப்பமீ
தடல்ஏ றுவந்த அருட்கட லேஅணி அம்பலத்துள்
உடலே மருவும் உயிர்போல் நிறைஒற்றி யூரப்பனே.
பிரார்த்தனைப் பதிகம் // பிரார்த்தனைப் பதிகம்
No audios found!
Oct,12/2014: please check back again.