திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருச்சாதனத் தெய்வத் திறம்
tiruchsātaṉat teyvat tiṟam
ஆடலமுதப் பத்து
āṭalamutap pattu
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

024. தியாக வண்ணப் பதிகம்
tiyāka vaṇṇap patikam

    திருவொற்றியூர்
    எழுசீர்க்15 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. காரார் குழலாள் உமையோ டயில்வேல் காளையொ டுந்தான் அமர்கின்ற
    ஏரார் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கொன் றருளானேல்
    நீரார் சடைமேல் பிறையொன் றுடையான் நிதிக்கோன் தோழன் எனநின்றான்
    பேரார் ஒற்றி யூரான் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
  • 2. தண்ணார் நீபத் தாரா னொடும்எம் தாயோ டும்தான் அமர்கின்ற
    கண்ணார் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கொன் றருளானேல்
    பண்ணார் இன்சொல் பதிகம் கொண்டு படிக்கா சளித்த பரமன்ஓர்
    பெண்ணார் பாகன் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
  • 3. பத்தர்க் கருளும் பாவையொ டும்வேல் பாலனொ டும்தான் அமர்கின்ற
    நித்தக் கோலம் கண்டு களிப்பான் நினைக்கும் எமக்கொன் றருளானேல்
    சித்தப் பெருமான் தில்லைப் பெருமான் தெய்வப் பெருமான் சிவபெருமான்
    பித்தப் பெருமான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
  • 4. மன்னும் கதிர்வேல் மகனா ரோடும் மலையா ளொடும்தான் வதிகின்ற
    துன்னும் கோலம் கண்டு களிப்பான் துதிக்கும் எமக்கொன் றருளானேல்
    மின்னும் சூலப் படையான் விடையான் வெள்ளிமலையொன் றதுஉடையான்
    பின்னும் சடையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
  • 5. அணிவேல் படைகொள் மகனா ரொடும்எம் அம்மை யொடுந்தான் அமர்கின்ற
    தணியாக் கோலம்கண்டு களிக்கத் தகையா தெமக்கொன் றருளானேல்
    மணிசேர் கண்டன் எண்தோள் உடையான் வடபால் கனக மலைவில்லான்
    பிணிபோக் கிடுவான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
  • 6. சூத மெறிவேல் தோன்ற லொடும்தன் துணைவி யொடும்தான் அமர்கின்ற
    காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கொன் றருளானேல்
    ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன்மாற் கிறையானான்
    பேதம் இல்லான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
  • 7. வெற்றிப் படைவேல் பிள்ளை யோடும் வெற்பா ளொடும்தான் அமர்கின்ற
    மற்றிக் கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கொன் றருளானேல்
    கற்றைச் சடையான் கண்மூன் றுடையான் கரியோன் அயனும் காணாதான்
    பெற்றத் திவர்வான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
  • 8. வரமன் றலினார் குழலா ளொடும்வேல் மகனா ரொடும்தான் அமர்கின்ற
    திரமன் றவுநின் றெழில்கண் டிடுவான் சிறக்க எமக்கொன் றருளானேல்
    பரமன் தனிமால் விடைஒன் றுடையான் பணியே பணியாப் பரிவுற்றான்
    பிரமன் தலையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
  • 9. அறங்கொள் உமையோ டயிலேந் தியஎம் ஐய னொடுந்தான் அமர்கின்ற
    திறங்கொள் கோலம் கண்டுக ளிப்பான் சிறக்க எமக்கொன் றருளானேல்
    மறங்கொள் எயில்மூன் றெரித்தான் கனக மலையான் அடியார் மயல்தீர்ப்பான்
    பிறங்கும் சடையான்ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
  • 10. தேசார் அயில்வேல் மகனா ரொடும்தன் தேவி யொடும்தான் அமர்கோலம்
    ஈசா எனநின் றேத்திக் காண எண்ணும் எமக்கொன் றருளானேல்
    காசார் அரவக் கச்சேர் இடையான் கண்ணார் நுதலான் கனிவுற்றுப்
    பேசார்க்கருளான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.

    • 15. கலித்துறை - தொ.வே.முதற்பதிப்பு, இரண்டாம் பதிப்பு. எழுசீர்.ச.மு.க. ஆ.பா

தியாக வண்ணப் பதிகம் // தியாக வண்ணப் பதிகம்

No audios found!