திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆற்றா முறை
āṟṟā muṟai
கருணை மாலை
karuṇai mālai
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

011. இரந்த விண்ணப்பம்
iranta viṇṇappam

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. நாளை ஏகியே வணங்குதும் எனத்தினம் நாளையே கழிக்கின்றோம்
    ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன்
    தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர்உடல் தணந்திடல் தனைஇந்த
    வேளை என்றறி வுற்றிலம் என்செய்வோம் விளம்பரும் விடையோமே.
  • 2. விடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரைமலர்ப் பதம்போற்றேன்
    கடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே
    விடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே
    தடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே.
  • 3. பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்
    ஒருமை ஈயும்நின் திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ
    அருமை யாம்தவத் தம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே
    தரும வள்ளலே குணப்பெருங் குன்றமே தணிகைமா மலையானே.
  • 4. மலையும் வேற்கணார் மையலில் அழுந்தியே வள்ளல்நின் பதம்போற்றா
    தலையும் இப்பெருங் குறையினை ஐயகோ யாவரோ டுரைசெய்கேன்
    நிலைகொள் ஆனந்த நிருத்தனுக் கொருபொருள் நிகழ்த்திய பெருவாழ்வே
    தலைமை மேவிய சற்குரு நாதனே தணிகையம் பதியானே.
  • 5. பதியும் அப்பனும் அன்னையும் குருவும்நற் பயன்தரு பொருளாய
    கதியும் நின்திருக் கழல்அடி அல்லது கண்டிலன் எளியேனே
    விதியும் மாலும்நின் றேத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே
    வதியும் சின்மய வடிவமே தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே.
  • 6. வாழும் நின்திருத் தொண்டர்கள் திருப்பதம் வழுத்திடா துலகத்தே
    தாழும் வஞ்சர்பால் தாழும்என் தன்மைஎன் தன்மைவன் பிறப்பாய
    ஏழும் என்னதே ஆகிய தையனே எவர்எனைப் பொருகின்றோர்
    ஊழும் நீக்குறும் தணிகைஎம் அண்ணலே உயர்திரு வருள்தேனே.
  • 7. தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும்நின் திருவருள் தேன்உண்டே
    யானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள் எந்தநாள் அறியேனே
    வானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே
    கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமாரசற் குணக்குன்றே.
  • 8. குன்று பொய்உடல் வாழ்வினை மெய்எனக் குறித்திவண் அலைகின்றேன்
    இன்று நின்திரு வருள்அடைந் துய்வனோ இல்லைஇவ் வுலகத்தே
    என்றும் இப்படிப் பிறந்திறந் துழல்வனோ யாதும்இங் கறிகில்லேன்
    நன்று நின்திருச் சித்தம்என் பாக்கியம் நல்தணி கையில்தேவே.
  • 9. தேவ ரும்தவ முனிவரும் சித்தரும் சிவன்அரி அயன்ஆகும்
    மூவ ரும்பணி முதல்வநின் அடியில்என் முடிஉற வைப்பாயேல்
    ஏவ ரும்எனக் கெதிர்இலை முத்திவீ டென்னுடை யதுகண்டாய்
    தாவ ரும்பொழில் தணிகையம் கடவுளே சரவண பவகோவே.
  • 10. வேயை வென்றதோள் பாவையர் படுகுழி விழுந்தலைந் திடும்இந்த
    நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாதநின் செயல்அன்றே
    தாயை அப்பனைத் தமரினை விட்டுனைச் சார்ந்தவர்க் கருள்கின்றோய்
    மாயை நீக்குநல் அருள்புரி தணிகைய வந்தருள் இந்நாளே.

இரந்த விண்ணப்பம் // இரந்த விண்ணப்பம்