திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
மருட்கை விண்ணப்பம்
maruṭkai viṇṇappam
சிறு விண்ணப்பம்
siṟu viṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

058. கொடைமட விண்ணப்பம்
koṭaimaṭa viṇṇappam

    திருவொற்றியூர்
    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
    பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன்
    என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய்
    மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே.
  • 2. வேதிய னேவெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே
    நீதிய னேமன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும்
    ஆதிய னேஎமை ஆண்டவ னேமலை யாள்மகிழும்
    பாதிய னேஎம் பராபர னேமுக்கட் பண்ணவனே.
  • 3. பண்ணவ னேபசு பாசத்தை நீக்கும் பரம்பரனே
    மண்ணவ னேனை மகிழ்ந்தவ னேமலம் மாற்றுகின்ற
    விண்ணவ னேவெள் விடையவ னேவெற்றி மேவுநெற்றிக்
    கண்ணவ னேஎனைக் காத்தவ னேஒற்றிக் காவலனே.
  • 4. காவல னேஅன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டவிழ்த்த
    பாவல னேதொழும் பாணன் பரிசுறப் பாட்டளித்த
    நாவல னேதில்லை நாயக னேகடல் நஞ்சைஉண்ட
    மாவல னேமுக்கண் வானவ னேஒற்றி மன்னவனே.
  • 5. மன்னவ னேகொன்றை மாலைய னேதிரு மாலயற்கு
    முன்னவ னேஅன்று நால்வர்க்கும் யோக முறைஅறந்தான்
    சொன்னவ னேசிவ னேஒற்றி மேவிய தூயவனே
    என்னவ னேஐயம் ஏற்பவ னேஎனை ஈன்றவனே.
  • 6. ஈன்றவ னேஅன்பர் இன்னுயிர்க் கின்புறும் இன்னமுதம்
    போன்றவ னேசிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே
    ஆன்றவ னேஎம துள்ளும் புறம்பும் அறிந்துநின்ற
    சான்றவ னேசிவ னேஒற்றி மேவிய சங்கரனே.
  • 7. சங்கர னேஅர னேபர னேநற் சராசரனே
    கங்கர னேமதிக் கண்ணிய னேநுதல் கண்ணினனே
    நங்கர மேவிய அங்கனி போன்றருள் நாயகனே
    செங்கர னேர்வண னேஒற்றி மேவிய சின்மயனே.
  • 8. சின்மய னேஅனல் செங்கையில் ஏந்திய சேவகனே
    நன்மைய னேமறை நான்முகன் மாலுக்கு நாடரிதாம்
    தன்மைய னேசிவ சங்கர னேஎஞ் சதாசிவனே
    பொன்மய னேமுப் புராந்தக னேஒற்றிப் புண்ணியனே.
  • 9. புண்ணிய னேஎமைப் போல்வார்க்கும் இன்பப் பொருள்அளிக்கும்
    திண்ணிய னேநற் சிவஞான நெஞ்சில் தெளிந்தஅருள்
    அண்ணிய னேகங்கை ஆறமர் வேணியில் ஆர்ந்தமதிக்
    கண்ணிய னேபற் பலவாகும் அண்டங்கள் கண்டவனே.
  • 10. கண்டவ னேசற்றும் நெஞ்சுரு காக்கொடுங் கள்வர்தமை
    விண்டவ னேகடல் வேம்படி பொங்கும் விடம்அனைத்தும்
    உண்டவ னேமற்றும் ஒப்பொன் றிலாத உயர்வுதனைக்
    கொண்டவ னேஒற்றிக் கோயிலின் மேவும் குருபரனே.

கொடைமட விண்ணப்பம் // கொடைமட விண்ணப்பம்

No audios found!