திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சந்நிதி முறையீடு
sanniti muṟaiyīṭu
நெஞ்சுறுத்த திருநேரிசை
neñsuṟutta tirunērisai
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

029. தவத்திறம் போற்றல்
tavattiṟam pōṟṟal

    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. வில்வத் தொடும்பொன் கொன்றைஅணி வேணிப் பெருமான் ஒற்றிநகர்
    செல்வப் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைக்
    கல்வைப் புடைய மனம்களிக்கக் கண்கள் களிக்கக் கண்டுநின்றேன்
    இல்வைப் புடையேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
  • 2. கூடும் படிமுன் திருமாலும் கோல மாகிப் புவி இடந்து
    தேடும் திருத்தாள் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி
    நாடும் புகழ்சேர் ஒற்றிநகர் நாடிப் புகுந்து கண்டேனால்
    ஈடும் அகன்றேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
  • 3. ஆர்க்கும் கடற்கண் அன்றெழுந்த ஆல காலம் அத்தனையும்
    சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைக்
    கார்க்கண் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் பிறவி கண்டிலனே
    யார்க்கென் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
  • 4. உள்ளும் புறமும் நிறைந்தடியார் உள்ளம் மதுரித் தூறுகின்ற
    தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாகப் பெருமான் திருமுகத்தைக்
    கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில்போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே
    எள்ளல் இகந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
  • 5. ஆவல் உடையார் உள்ளுடையார் அயன்மால் மகவான் ஆதியராம்
    தேவர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடிவைக்
    காவம் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் கண்ட காட்சிதனை
    யாவர் பெறுவார் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
  • 6. மறப்பை அகன்ற மனத்துரவோர் வாழ்த்த அவர்க்கு வான்கதியின்
    சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைப்
    பிறப்பை அகற்றும் ஒற்றியில்போய்ப் பேரா னந்தம் பெறக்கண்டேன்
    இறப்பைத் தவிர்த்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
  • 7. வில்லாம் படிப்பொன் மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான்
    செல்லாம் கருணைச் சிவபெருமான் தியாகப் பெருமான் திருகூத்தைக்
    கல்லாம் கொடிய மனம்கரையக் கண்டேன் பண்டு காணாத
    எல்லாம் கண்டேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
  • 8. ஒல்லை எயில்மூன் றெரிகொளுவ உற்று நகைத்தோன் ஒற்றியுளான்
    தில்லை நகரான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி
    கல்லை அளியும் கனியாக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கோர்
    எல்லை அறியேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
  • 9. துன்னும் சோம சுந்தரனார் தூய மதுரை நகர்அளித்த
    தென்னர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைப்
    பன்னும் ஒற்றி நகர்தன்னில் பார்த்தேன் வினைபோம் வழிபார்த்த
    என்னை மறந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
  • 10. முன்னம் காழி வள்ளலுக்கு முத்துச் சிவிகை குடையொடுபொன்
    சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடியைக்
    கன்னின் றுருகா நெஞ்சுருகக் கண்டேன் கண்ட காட்சிதனை
    என்என் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.

தவத்திறம் போற்றல் // தவத்திறம் போற்றல்

No audios found!