திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சோதிடம் நாடல்
sōtiṭam nāṭal
காதற் சிறப்புக் கதுவா மாண்பு
kātaṟ siṟappuk katuvā māṇpu
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

016. திருஅருட் பெருமிதம்
tiruaruṭ perumitam

    செவிலி கழறல்
    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால்
    அடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம்
    உடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ
    இடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
  • 2. கருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார்
    திருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில்
    பெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ
    இருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
  • 3. மட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
    பட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் பரிந்தனையோ
    கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ
    இட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
  • 4. நடங்கொள் கமலச் சேவடியார் நலஞ்சேர் ஒற்றி நாதர்அவர்
    தடங்கொள் மார்பின் மணிப்பணியைத் தரிப்பார் நமக்கென் றெண்ணினையால்
    படங்கொள் பாம்பே பாம்பென்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ
    இடங்கொள் மயல்கொண் டெதுபெறுவாய் எழை அடிநீ என்மகளே.
  • 5. திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர்
    எருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால்
    உருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ
    இருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
  • 6. மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர்
    மாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே
    ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே
    ஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
  • 7. மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
    யோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே
    ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண்
    ஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
  • 8. விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும்
    உண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித்
    தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ
    எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
  • 9. நீடி வளங்கொள் ஒற்றியில்வாழ் நிமலர் உலகத் துயிர்தோறும்
    ஓடி ஒளிப்பார் அவர்நீயும் ஒக்க ஓட உன்வசமோ
    நாடி நடிப்பார் நீயும்உடன் நடித்தால் உலகர் நகையாரோ
    ஈடில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
  • 10. உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு
    வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும்
    கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ
    எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.

திருஅருட் பெருமிதம் // திருஅருட் பெருமிதம்

No audios found!