திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆளுடைய நம்பிகள் அருண்மாலை
āḷuṭaiya nampikaḷ aruṇmālai
நான்காம் திருமுறை / Fourth Thirumurai

012. ஆளுடைய அடிகள் அருண்மாலை
āḷuṭaiya aṭikaḷ aruṇmālai

    தரவு கொச்சகக் கலிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
    வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
    மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
    ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே.
  • 2. கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற
    பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்
    குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்தனி
    உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே.
  • 3. மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
    என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்‘ரும் ஏமாக்க
    அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர்
    இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே.
  • 4. உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற
    திருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த
    குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ
    இருஎன்ற தனிஅகவல்194 எண்ணம்எனக் கியம்புதியே.
  • 5. தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்
    ஆடுகின்ற சேவடிகக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே
    நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
    வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே.
  • 6. சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
    மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
    காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
    ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.
  • 7. வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
    நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
    தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
    ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
  • 8. வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
    ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்
    தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன்
    குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே.
  • 9. பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்
    எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி
    மண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால்
    புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே .
  • 10. வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசத்தைக்
    கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
    வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
    நாட்டமுறும் என்னில்இங்கு நானடைதல் வியப்பன்றே.

    • 194 `இருஎன்ற தனிஅகவல்' என்றது திருவாசகம், திருவண்டப்பகுதியில் `என்னையும் இருப்பதாக்கினன்' என்ற வாசகத்தை.வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழைகுரம்பை தோறும் நாயுட லகத்தேகுரம்புகொண்டு இன்தேன் பாய்த்தினன் நிரம்பியஅற்புத மான அமுத தாரைகள்எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவதுஉள்ளம் கொண்டுஓர் உருச்செய்தாங்கு எனக்குஅள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளியகன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறைஎன்னையும் இருப்ப தாக்கினன் என்னில்கருணை வான்தேன் கலக்கஅருளொடு பராவமுது ஆக்கினன்பிரமன்மால் அறியாப் பெற்றி யோனே.- திருவாசகம். 3. திருவண்டப் பகுதி 170-182.

ஆளுடைய அடிகள் அருண்மாலை // ஆளுடைய அடிகள் அருண்மாலை