திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அனுபவ நிலை
aṉupava nilai
வேண்டுகோள்
vēṇṭukōḷ
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

058. கைம்மாறின்மை
kaimmāṟiṉmai

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. இழைஎலாம் விளங்கும் அம்மை இடங்கொள்நின் கருணை என்னும்
    மழைஎலாம் பொழிந்தென் உள்ள மயக்கெலாம் தவிர்த்து நான்செய்
    பிழைஎலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கென் புரிவேன் அந்தோ
    உழைஎலாம் இலங்குஞ் சோதி உயர்மணி மன்று ளானே.
  • 2. போதுதான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத்
    தீதுதான் பொறுத்த உன்றன் திருவருட் பெருமைக் கந்தோ
    ஏதுதான் புரிவேன் ஓகோ என்என்று புகழ்வேன் ஞான
    மாதுதான் இடங்கொண் டோங்க வயங்குமா மன்று ளானே.
  • 3. சிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய்
    குற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப்
    பெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக்
    கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ.
  • 4. மையரி நெடுங்க ணார்தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே
    பொய்யறி வுடையேன் செய்த புன்மைகள் பொறுத்தாட் கொண்டாய்
    ஐயறி வுடையார் போற்றும் அம்பலத் தரசே நின்சீர்
    மெய்யறி வறியேன் எந்த விளைவறிந் துரைப்பேன் அந்தோ.
  • 5. பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை இல்லை
    ஆயினும் பொறுத்தாட் கொண்டாய் அம்பலத் தரசே என்றன்
    தாயினும் இனிய உன்றன் தண்ணருட் பெருமை தன்னை
    நாயினுங் கடையேன் எந்த நலமறிந் துரைப்பேன் அந்தோ.
  • 6. துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
    பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்
    அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற
    கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் னென்பேன் அந்தோ.
  • 7. வரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய்
    திரைகடந் தண்ட பிண்டத் திசைஎலாம் கடந்தே அப்பால்
    கரைகடந் தோங்கும் உன்றன் கருணையங் கடற்சீர் உள்ளம்
    உரைகடந் ததுஎன் றால்யான் உணர்வதென் உரைப்ப தென்னே.
  • 8. நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ
    கனவினும் பிழையே செய்தேன் கருணைமா நிதியே நீதான்
    நினைவினும் குறியா தாண்டாய் நின்னருட் பெருமை தன்னை
    வினைவினும் சொல்வார் காணேன் என்செய்வேன் வினைய னேனே.
  • 9. வன்செயல் பொறுத்தாட் கொண்ட வள்ளலே அடிய னேன்றன்
    முன்செயல் அவைக ளோடு முடுகுபின் செயல்கள் எல்லாம்
    என்செயல் ஆகக் காணேன் எனைக்கலந் தொன்றாய் நின்றோய்
    நின்செயல் ஆகக் கண்டேன் கண்டபின் நிகழ்த்தல் என்னே.
  • 10. இருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன்
    பெருமைஎன் னென்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி
    உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட
    ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே.

கைம்மாறின்மை // கைம்மாறின்மை

No audios found!