திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர்
aruṭperuñjōti eṉ āṇṭavar
இறை எளிமையை வியத்தல்
iṟai eḷimaiyai viyattal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

033. திருமுன் விண்ணப்பம்
tirumuṉ viṇṇappam

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. மாழை மாமணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற
    வாழை வான்பழச் சுவைஎனப் பத்தர்தம் மனத்துளே தித்திப்போய்
    ஏழை நாயினேன் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும்
    கோழை மானிடப் பிறப்பிதில் உன்னருட் குருஉருக் கொளுமாறே.
  • 2. பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா கனித்தோங்கி
    மன்னு வாழையின் பழச்சுவை எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய்
    சின்ன நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
    இன்ன என்னுடைத் தேகம்நல் லொளிபெறும் இயலருக் கொளுமாறே.
  • 3. விஞ்சு பொன்னணி அம்பலத் தருள்நடம் விளைத்துயிர்க் குயிராகி
    எஞ்சு றாதபே ரின்பருள் கின்றஎன் இறைவநின் அருள்இன்றி
    அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி அமைத்தருள் செயல்வேண்டும்
    துஞ்சும் இவ்வுடல் இம்மையே துஞ்சிடாச் சுகஉடல் கொளுமாறே.
  • 4. ஓங்கு பொன்னணி அம்பலத் தருள்நடம் உயிர்க்கெலாம் ஒளிவண்ணப்
    பாங்கு மேவநின் றாடல்செய் இறைவநின் பதமலர் பணிந்தேத்தாத்
    தீங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
    ஈங்கு வீழுடல் இம்மையே வீழ்ந்திடா இயலுடல் உறுமாறே.
  • 5. இலங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற இறைவஇவ் வுலகெல்லாம்
    துலங்கும் வண்ணநின் றருளுநின் திருவடித் துணைதுணை என்னாமல்
    கலங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
    அலங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறா அருள்உடல் உறுமாறே.
  • 6. சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற
    அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த
    மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
    பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறுமாறே.
  • 7. விளங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற விரைமலர்த் திருத்தாளை
    உளங்கொள் அன்பர்தம் உளங்கொளும் இறைவநின் ஒப்பிலாப் பெருந்தன்மை
    களங்கொள் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
    துளங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறாத் தொல்லுடல் உறுமாறே.
  • 8. வாய்ந்த பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே மறைஎல்லாம்
    ஆய்ந்தும் இன்னஎன் றறிந்திலா நின்திரு அடிமலர் பணியாமல்
    சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
    ஏய்ந்த இவ்வுடல் இம்மையே திருவருள் இயல்உடல் உறுமாறே.
  • 9. மாற்றி லாதபொன் னம்பலத் தருள்நடம் வயங்கநின் றொளிர்கின்ற
    பேற்றில் ஆருயிர்க் கின்பருள் இறைவநின் பெயற்கழல் கணிமாலை
    சாற்றி டாதஎன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
    காற்றில் ஆகிய இவ்வுடல் இம்மையே கதியுடல் உறுமாறே.
  • 10. தீட்டு பொன்னணி அம்பலத் தருள்நடம் செய்துயிர்த் திரட்கின்பம்
    காட்டு கின்றதோர் கருணையங் கடவுள்நின் கழலிணை கருதாதே
    நீட்டு கின்றஎன் விண்ணப்பம் திருச்செவி நேர்ந்தருள் செயல்வேண்டும்
    வாட்டும்249இவ்வுடல் இம்மையே அழிவுறா வளமடைந் திடுமாறே.

    • 248. விளங்கு பொன்னணித் திருச்சிற் றம்பலத்திலே விரைமலர்த் திருத்தாளை - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க.
    • 249. ஆட்டும் - படிவேறுபாடு. ஆ. பா.

திருமுன் விண்ணப்பம் // திருமுன் விண்ணப்பம்

No audios found!