திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவடி நிலை
tiruvaṭi nilai
அருட்ஜோதி நிலை
aruṭjōti nilai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

045. அச்சோப் பத்து
achsōp pattu

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப்
    பெருங்கருணைக் கடலை வேதத்
    திருத்தனைஎன் சிவபதியைத் தீங்கனியைத்
    தெள்ளமுதத் தெளிவை வானில்
    ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை
    உயிர்க்குணர்வை உணர்த்த னாதி
    அருத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
    தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
  • 2. மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன்
    இதயத்தே விளங்கு கின்ற
    துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத்
    தலைவனைச்சிற் சுகந்தந் தானைச்
    செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை
    ஒன்றான தெய்வந் தன்னை
    அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
    தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
  • 3. எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும்
    விளங்கவிளக் கிடுவான் தன்னைச்
    செப்பரிய பெரியஒரு சிவபதியைச்
    சிவகதியைச் சிவபோ கத்தைத்
    துப்புரவு பெறஎனக்கே அருளமுதம்
    துணிந்தளித்த துணையை என்றன்
    அப்பனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
    தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
  • 4. பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த
    பெருந்தகைஎம் பெருமான் தன்னைச்
    செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப்
    பெருங்களிப்புச் செய்தான் தன்னை
    முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு
    கொடுத்தெனக்கு முன்னின் றானை
    அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
    தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
  • 5. பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம்
    பெரும்பொருளைப் புனிதந் தன்னை
    என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட
    பெருங்கருணை இயற்கை தன்னை
    இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும்
    பெருவாழ்வை என்னுள் ஓங்கும்
    அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
    தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
  • 6. இத்தனைஎன் றிடமுடியாச் சத்திஎலாம்
    உடையானை எல்லாம் வல்ல
    சித்தனைஎன் சிவபதியைத் தெய்வமெலாம்
    விரித்தடக்கும் தெய்வந் தன்னை
    எத்தனையும் என்பிழைகள் பொறுத்ததனிப்
    பெருந்தாயை என்னை ஈன்ற
    அத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
    தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
  • 7. எம்மையும்என் தனைப்பிரியா தென்னுளமே
    இடங்கொண்ட இறைவன் தன்னை
    இம்மையில்என் தனக்கழியாத் திருவடிவம்
    தந்தானை எல்லாம் வல்ல
    செம்மைதரு சித்தனைஎன் சிவபதியைத்
    தெள்ளமுதத் திரளை என்றன்
    அம்மையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
    தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
  • 8. என்னையும்என் பொருளையும்என் ஆவியையும்
    தான்கொண்டிங் கென்பால் அன்பால்
    தன்னையும்தன் பொருளையும்தன் ஆவியையும்
    களித்தளித்த தலைவன் தன்னை
    முன்னையும்பின் னையும்எனக்கே முழுத்துணையாய்
    இருந்தமுழு முதல்வன் தன்னை
    அன்னையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
    தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
  • 9. எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணமெலாம்
    தருகின்றோம்324 இன்னே என்றென்
    கண்நிரம்ப ஒளிகாட்டிக் கருத்தில்அமர்ந்
    திருக்கின்ற கருத்தன் தன்னைப்
    புண்ணியனை உளத்தூறும் புத்தமுதை
    மெய்இன்பப் பொருளை என்றன்
    அண்ணலைசிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
    தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
  • 10. சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
    விடுவித்தென் தன்னை ஞான
    நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
    நிலைதனிலே நிறுத்தி னானைப்
    பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
    பராபரனைப் பதிஅ னாதி
    ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
    தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

    • 323. சிவபோகத்தே - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு.
    • 324. தருகின்றாம் - பி. இரா. பதிப்பு.

அச்சோப் பத்து // அச்சோப் பத்து

No audios found!