திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருட்பெருஞ்சோதி அடைவு
aruṭperuñsōti aṭaivu
உத்திரஞானசிதம்பர மாலை
uttirañāṉasitampara mālai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

083. அடிமைப் பேறு
aṭimaip pēṟu

    நேரிசை வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. அருள்அளித்தான் அன்பளித்தான் அம்பலத்தான் உண்மைப்
    பொருள்அளித்தான் என்னுட் புணர்ந்தான் - தெருள்அளித்தான்
    எச்சோ தனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான்
    அச்சோ எனக்கவன்போல் ஆர்.
  • 2. ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குணர்த்துகின்ற
    காரணமும் காரியமும் காட்டுவித்தான் - பூரணன்சிற்
    றம்பலத்தான் என்னாசை அப்பன் எலாவல்ல
    செம்பலத்தை என்உளத்தே சேர்த்து.
  • 3. சேர்த்தான் பதம்என் சிரத்தே திருவருட்கண்
    பார்த்தான்என் எண்ணமெலாம் பாலித்தான் - தீர்த்தான்என்
    துன்பமெலாம் தூக்கமெலாம் சூழாது நீக்கிவிட்டான்
    இன்பமெலாம் தந்தான் இசைந்து.
  • 4. இசைந்தான்என் உள்ளத் திருந்தான் எனையும்
    நசைந்தான்என் பாட்டை நயந்தான் - அசைந்தாடு
    மாயை மனம்அடக்கி வைத்தான் அருள்எனும்என்
    தாயைமகிழ் அம்பலவன் தான்.
  • 5. தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான்
    தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான்
    நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான
    வான்ஆனான் அம்பலத்தெம் மான்.
  • 6. மான்முதலா உள்ள வழக்கெல்லாம் தீர்த்தருளித்
    தான்முதலாய் என்னுளமே சார்ந்தமர்ந்தான் - தேன்முதலாத்
    தித்திக்கும் பண்டமெலாம் சேர்த்தாங்கென் சிந்தைதனில்
    தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து.
  • 7. தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள்
    ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் - சார்ந்தேன்சிற்
    றம்பலத்தில் எல்லாம்வல் லானை அவன்அருளால்
    எம்பலத்தெல் லாம்வலன்ஆ னேன்.
  • 8. ஆனேன் அவனா அவன்அருளால் ஆங்காங்கு
    நானே களித்து நடிக்கின்றேன் - தானேஎன்
    தந்தைஎன்பால் வைத்த தயவைநினைக் குந்தோறும்
    சிந்தைவியக் கின்றேன் தெரிந்து.
  • 9. தெரிந்தேன் அருளால் சிவம்ஒன்றே என்று
    புரிந்தேன் சிவம்பலிக்கும் பூசை - விரிந்தமனச்
    சேட்டைஎலாம் தீர்த்துவிட்டேன் சித்தெல்லாம் வல்லஅருள்
    நாட்டைஎலாம் கைக்கொண்டேன் நான்.
  • 10. நான்செய்த நற்றவந்தான் யாதோ நவிற்றரிது
    வான்செய்த தேவரெலாம் வந்தேவல் - தான்செய்து
    தம்பலம்என் றேமதிக்கத் தான்வந்தென் னுட்கலந்தான்
    அம்பலவன் தன்அருளி னால்.

அடிமைப் பேறு // அடிமைப் பேறு

No audios found!