திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சன்மார்க்க நிலை
saṉmārkka nilai
தலைவி தோழிக்கு உரைத்தல்
talaivi tōḻikku uraittal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

073. சிவானந்தப் பற்று
sivāṉantap paṟṟu

    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கியநின்
    பாதமும் மாமுடி யும்கண்டு கொள்ளும் படிஎனக்கே
    போதமும் போதத் தருள்அமு தும்தந்த புண்ணியனே
    நாதமும் நாத முடியும் கடந்த நடத்தவனே.
  • 2. வண்ணப்பொன் னம்பல வாழ்வேஎன் கண்ணினுள் மாமணியே
    சுண்ணப்பொன் நீற்றொளி ஓங்கிய சோதிச் சுகப்பொருளே
    எண்ணப்ப யின்றஎன் எண்ணம் எலாம்முன்னர் ஈகஇதென்
    விண்ணப்பம் ஏற்று வருவாய்என் பால்விரைந் தேவிரைந்தே.
  • 3. சிற்சபை அப்பனைக் கண்டுகொண் டேன்அருள் தெள்ளமுதம்
    சற்சபை உள்ளம் தழைக்கஉண் டேன்உண்மை தான்அறிந்த
    நற்சபைச் சித்திகள் எல்லாம்என் கைவசம் நண்ணப்பெற்றேன்
    பொற்சபை ஓங்கப் புரிந்தாடு தற்குப் புகுந்தனனே.
  • 4. வரையற்ற சீர்ப்பெரு வாழ்வுதந் தென்மனம் மன்னிஎன்றும்
    புரையற்ற மெய்ந்நிலை ஏற்றிமெய்ஞ் ஞானப் பொதுவினிடைத்
    திரையற்ற காட்சி அளித்தின் னமுதத் தெளிவருளி
    நரையற்று மூப்பற் றிறப்பற் றிருக்கவும் நல்கியதே.
  • 5. தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த்
    தேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய்
    வாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற
    தூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே.
  • 6. ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப
    நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்
    சோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்
    சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.
  • 7. தன்னே ரிலாத தலைவாசிற் றம்பலம் தன்னில்என்னை
    இன்னே அடைகுவித் தின்பருள் வாய்இது வேதருணம்
    அன்னே எனைப்பெற்ற அப்பாஎன் றுன்னை அடிக்கடிக்கே
    சொன்னேன்முன் சொல்லுகின் றேன்பிற ஏதுந் துணிந்திலனே.
  • 8. தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே
    மோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன்
    நாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும்
    சாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.
  • 9. கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி
    உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
    பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்
    பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.
  • 10. தீமைகள் யாவும் தொலைத்துவிட் டேன்இத் தினந்தொடங்கிச்
    சேமநல் இன்பச் செயலே விளங்கமெய்ச் சித்திஎலாம்
    காமமுற் றென்னைக் கலந்துகொண் டாடக் கருணைநடத்
    தாமன்என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே.

    • 327. நண்ணினனே - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.

சிவானந்தப் பற்று // சிவானந்தப் பற்று

No audios found!