திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கொடைமடப் புகழ்ச்சி
koṭaimaṭap pukaḻchsi
அபராத விண்ணப்பம்
aparāta viṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

016. திருவருள் வேட்கை
tiruvaruḷ vēṭkai

    திருவொற்றியூர்
    கொச்சகக் கலிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. மன்அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
    இன்அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும்
    முன்அமுதா உண்டகளம் முன்னிமுன்னி வாடுகின்றேன்
    என்அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ.
  • 2. தோன்றாத் துணையாகும் சோதியே நின்அடிக்கே
    ஆன்றார்த்த அன்போ டகங்குழையேன் ஆயிடினும்
    ஊன்றார்த் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன்
    தேன்றார்ச் சடையாய்உன் சித்தம் இரங்காதோ.
  • 3. காதார் கடுவிழியார் காமவலைக் குள்ளாகி
    ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும்
    போதார் நினதுகழல் பொன்அடியே போற்றுகின்றேன்
    நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ.
  • 4. இலைவேட்ட மாதர்தம தீனநல மேவிழைந்து
    கொலைவேட் டுழலும் கொடியனேன் ஆயிடினும்
    நிலைவேட்ட நின்அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன்
    கலைவேட்ட வேணியனே கருணைசற்றும் கொண்டிலையே.
  • 5. கொண்டல்நிறத் தோனும் குணிக்கரிய நின்அடிக்கே
    தொண்டறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும்
    எண்டகநின் பொன்அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன்
    தண்டலைசூழ் ஒற்றியுளாய் தயவுசற்றும் சார்ந்திலையே.
  • 6. சாரா வறுஞ்சார்பில் சார்ந்தரைசே உன்னுடைய
    தாரார் மலரடியைத் தாழ்ந்தேத்தேன் ஆயிடினும்
    நேராய்நின் சந்நிதிக்கண் நின்றுநின்று வாடுகின்றேன்
    ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே.
  • 7. ஊர்மதிக்க வீணில் உளறுகின்ற தல்லதுநின்
    சீர்மதிக்க நின்அடியைத் தேர்ந்தேத்தேன் ஆயிடினும்
    கார்மதிக்கும் நஞ்சம்உண்ட கண்டநினைந் துள்குகின்றேன்
    ஏர்மதிக்கும் ஒற்றியூர் எந்தைஅளி எய்தாயோ.
  • 8. தாய்க்கும்இனி தாகும்உன்தன் தாள்மலரை ஏத்தாது
    நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும்
    வாய்க்கும்உன்தன் சந்திதிக்கண் வந்துவந்து வாடுகின்றேன்
    தூய்க்குமரன் தந்தாய்என் சோர்வறிந்து தீராயோ.
  • 9. அறியாப் பருவத் தடியேனை ஆட்கொண்ட
    நெறியாம் கருணை நினைந்துருகேன் ஆயிடினும்
    குறியாப் பொருளேஉன் கோயிலிடை வந்துநின்றும்
    பறியாப் பிணியேன் பரதவிப்பைப் பார்த்திலையே.
  • 10. பார்நடையாம் கானில் பரிந்துழல்வ தல்லதுநின்
    சீர்நடையாம் நன்னெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும்
    நேர்நடையாம் நின்கோயில் நின்றுநின்று வாடுகின்றேன்
    வார்நடையார் காணா வளர்ஒற்றி மன்அமுதே.

திருவருள் வேட்கை // திருவருள் வேட்கை

No audios found!