திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருள் நாம விளக்கம்
aruḷ nāma viḷakkam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

001. புண்ணிய விளக்கம்
puṇṇiya viḷakkam

    பொது
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
    கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும்
    ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
    தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
  • 2. கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்
    பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்
    அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
    திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
  • 3. வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
    துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
    ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
    செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே.
  • 4. கோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்
    நீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும்
    ஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
    சீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
  • 5. வஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
    கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்அளிக்கும்
    அஞ்சில் புகுந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
    செஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
  • 6. கண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை
    விண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்குத் தோற்றுவிக்கும்
    அண்கொள் வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
    திண்கொள் முனிவர் சுரர்புகழும் சிவாய நமஎன் றிடுநீறே.
  • 7. நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத்
    தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
    ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
    சேய அயன்மால் நாடரிதாம் சிவாய நமஎன் றிடுநீறே.
  • 8. எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
    உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
    அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
    திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
  • 9. சிந்தா மணியை நாம்பலநாள் தேடி எடுத்த செல்வமதை
    இந்தார் வேணி முடிக்கனியை இன்றே விடைமேல் வரச்செயும்காண்
    அந்தோ வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
    செந்தா மரையோன் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
  • 10. உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
    கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
    அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
    தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
  • 11. உற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக்
    கற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும்
    அற்றம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
    செற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.

புண்ணிய விளக்கம் // புண்ணிய விளக்கம்