திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நெஞ்சறிவுறூஉ
neñsaṟivuṟūu
பற்றின் திறம் பகர்தல்
paṟṟiṉ tiṟam pakartal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

038. நெடுமொழி வஞ்சி
neṭumoḻi vañsi

    திருவொற்றியூர்
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
    மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்
    பார்க்கின் றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்
    பாவ மேஅலால் பலன்சிறி துளதோ
    ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா
    இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி
    ஊர்க்குள் மேவிய சிவன்அருள் வாளால்
    உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
  • 2. கொடிய மாதர்கள் இடையுறும் நரகக்
    குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக்
    கடிய வஞ்சனை யால்எனைக் கலக்கம்
    கண்ட பாவியே காமவேட் டுவனே
    இடிய நெஞ்சகம் இடர்உழந் திருந்தேன்
    இன்னும் என்னைநீ ஏன்இழுக் கின்றாய்
    ஒடிவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
    உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
  • 3. பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த
    பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி
    வாதை உற்றிட வைத்தனை ஐயோ
    மதியில் காமமாம் வஞ்சக முறியா
    ஏதம் நீத்தருள் அடியர்தம் சார்வால்
    எழுகின் றேன்எனை இன்னும்நீ இழுக்கில்
    ஓதும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
    உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
  • 4. கோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக்
    கொடிய னேஎனைக் கூடிநீ நின்ற
    பாவ வன்மையால் பகைஅடுத் துயிர்மேல்
    பரிவி லாமலே பயன்இழந் தனன்காண்
    சாவ நீயில தேல்எனை விடுக
    சலஞ்செய் வாய்எனில் சதுர்மறை முழக்கம்
    ஓவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
    உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
  • 5. சார்ந்த லோபமாம் தயையிலி ஏடா
    தாழ்ந்தி ரப்பவர் தமக்கணு அதனுள்
    ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய்
    இரக்கின் றோர்தரின் அதுகொளற் கிசைவாய்
    சோர்ந்தி டாதுநான் துய்ப்பவும் செய்யாய்
    சுகமி லாதநீ தூரநில் இன்றேல்
    ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
    உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
  • 6. மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய்
    முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில்
    போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும்
    போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம்
    சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச்
    சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில்
    ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
    உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
  • 7. மதம்எ னும்பெரு மத்தனே எனைநீ
    வருத்தல் ஓதினால் வாயினுக் கடங்கா
    சிதமெ னும்பரன் செயலினை அறியாய்
    தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம்
    இதம றிந்தனம் எமக்கினி ஒப்பார்
    யாவர் என்றெனை இழிச்சினை அடியார்க்
    குதவும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
    உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
  • 8. அமைவ றிந்திடா ஆணவப் பயலே
    அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண்
    எமைந டத்துவோன் ஈதுண ராமல்
    இன்று நாம்பரன் இணையடி தொழுதோம்
    கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம்
    கனிகின் றோம்எனக் கருதிட மயக்கேல்
    உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
    உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
  • 9. கருமை யாம்அகங் காரமர்க் கடவா
    கடைய னேஉனைக் கலந்தத னாலே
    அருமை யாகநாம் பாடினோம் கல்வி
    அறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம்
    இருமை இன்பமும் பெற்றனம் என்றே
    எனைம தித்துநான் இழிவடைந் தனன்காண்
    ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
    உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
  • 10. வெண்மை சேர்அகங் காரமாம் வீணா
    விடுவி டென்றனை வித்தகம் உணராய்
    தண்மை இன்றிதற் கிதுஎனத் துணிந்தென்
    தனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய்
    அண்மை நின்றிடேல் சேய்மைசென் றழிநீ
    அன்றி நிற்றியேல் அரிமுதல் ஏத்தும்
    உண்மை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
    உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.

நெடுமொழி வஞ்சி // நெடுமொழி வஞ்சி

No audios found!