1. அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்
நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ
கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே.
2. பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்
ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே
மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்
நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே.
6. அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ
இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்
செங்கேழ் இதழிச் சடைக்கனியே201 சிவமே அடிமைச் சிறுநாயேன்
எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே.
7. அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே.
16. எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ
அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன்
சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ
முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.
17. எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ
அந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை
இந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்
பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே203.
19. எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம் என்றால் என்செயல்கள்
எல்லாம் நினது செயல்அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல்
வல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும் உன்றன் மயம்அன்றே
நல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார் எங்கள் நாயகனே.