திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
முறையீடு
muṟaiyīṭu
ஆன்ம விசாரத் தழுங்கல்
āṉma visārat taḻuṅkal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

010. அடியார் பேறு
aṭiyār pēṟu

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
    வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்
    நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ
    கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே.
  • 2. பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்
    ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே
    மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்
    நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே.
  • 3. பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான்
    ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ
    மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும்
    ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே.
  • 4. மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று
    பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
    கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே
    இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே.
  • 5. முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய
    உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே
    மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்
    கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ.
  • 6. அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ
    இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்
    செங்கேழ் இதழிச் சடைக்கனியே201 சிவமே அடிமைச் சிறுநாயேன்
    எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே.
  • 7. அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
    வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
    தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
    எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே.
  • 8. தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
    வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
    சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
    ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.
  • 9. பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக்
    கழுதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப
    திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
    எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.
  • 10. வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
    பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
    நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
    துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.
  • 11. கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான்
    அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன்
    கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச்
    சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ.
  • 12. படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக்
    கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே
    பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன்
    அடிமேல் அசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே.
  • 13. நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும்
    ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய
    தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல்
    மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே.
  • 14. நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை
    உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே
    வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற
    பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே.
  • 15. இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார்
    வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன்
    அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத்
    துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே.
  • 16. எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ
    அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன்
    சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ
    முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.
  • 17. எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ
    அந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை
    இந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்
    பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே203.
  • 18. அடுக்குந் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந் திங்கே என்னளவில்
    கொடுக்குந் தன்மை தனைஒளித்தால் ஒளிக்கப் படுமோ குணக்குன்றே
    தடுக்குந் தடையும் வேறில்லை தமியேன் தனைஇத் தாழ்வகற்றி
    எடுக்குந் துணையும் பிறிதில்லை ஐயோ இன்னும் இரங்கிலையே.
  • 19. எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம் என்றால் என்செயல்கள்
    எல்லாம் நினது செயல்அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல்
    வல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும் உன்றன் மயம்அன்றே
    நல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார் எங்கள் நாயகனே.
  • 20. கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
    வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்
    பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்
    ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே.

    • 201. செங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ. சு. பி. இரா. பாடம்.
    • 202. என்செய்கேன் - ச மு க. பதிப்பு.
    • 203. பரஞ்சுடரே - படிவேறுபாடு. ஆ பா.

அடியார் பேறு // அடியார் பேறு

No audios found!