திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இறை திருக்காட்சி
iṟai tirukkāṭsi
அச்சோப் பத்து
achsōp pattu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

044. திருவடி நிலை
tiruvaṭi nilai

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
    உவப்பிலா அண்டத்தின் பகுதி
    அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
    அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
    விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
    றிருந்தென விருந்தன மிடைந்தே
    இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
    தென்பர்வான் திருவடி நிலையே.
  • 2. தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
    யேச்சுரன் சதாசிவன் விந்து
    நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
    நவில்பர சிவம்எனும் இவர்கள்
    இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
    இடதுகாற் கடைவிரல் நகத்தின்
    கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
    கண்டனன் திருவடி நிலையே.
  • 3. அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
    அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
    படர்தரு விந்து பிரணவப் பிரமம்
    பரைபரம் பரன்எனும் இவர்கள்
    சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
    துணையடிப் பாதுகைப் புறத்தே
    இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
    ஏத்துவன் திருவடி நிலையே.
  • 4. இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
    பிரமன்ஈ சானனே முதலாம்
    மகத்துழல் சமய வானவர் மன்றின்
    மலரடிப் பாதுகைப் புறத்தும்
    புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
    புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
    செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
    தெரிந்தனன் திருவடி நிலையே.
  • 5. பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்
    போந்தவான் முடியதாங் கதன்மேல்
    மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா
    வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல்
    என்வணச் சோதிக் கொடிபர நாதாந்
    தத்திலே இலங்கிய ததன்மேல்
    தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்
    தழுவினன் திருவடி நிலையே.
  • 6. மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான்
    மற்றவற் றுட்புறங் கீழ்மேல்
    அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின்
    அமைந்தன சத்திகள் அவற்றின்
    கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும்
    கருதுரு முதலிய விளங்க
    நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று
    நவின்றனர் திருவடி நிலையே.
  • 7. தொகையள விவைஎன் றறிவரும் பகுதித்
    தொல்லையின் எல்லையும் அவற்றின்
    வகையொடு விரியும் உளப்பட ஆங்கே
    மன்னிஎங் கணும்இரு பாற்குத்
    தகையுறு முதலா வணங்கடை யாகத்
    தயங்கமற் றதுவது கருவிச்
    சிகையுற உபயம் எனமன்றில் ஆடும்
    என்பரால் திருவடி நிலையே.
  • 8. மன்றஓங் கியமா மாயையின் பேத
    வகைதொகை விரிஎன மலிந்த
    ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா
    உற்றன மற்றவை எல்லாம்
    நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க
    நின்றசத் திகளொடு சத்தர்
    சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில்
    என்பரால் திருவடி நிலையே.
  • 9. பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
    பெரியஓங் காரமே முதலா
    ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
    என்றவற் றவண்அவண் இசைந்த
    மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
    மன்அதி காரம்ஐந் தியற்றத்
    தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
    என்பரால் திருவடி நிலையே.
  • 10. பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
    பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
    உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
    வெறுவெளி எனஉல குணர்ந்த
    புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
    திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
    திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
    என்பரால் திருவடி நிலையே.

திருவடி நிலை // திருவடி நிலை

No audios found!