திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பிள்ளைப் பெரு விண்ணப்பம்
piḷḷaip peru viṇṇappam
ஆன்ம தரிசனம்
āṉma tarisaṉam
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

021. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
sutta saṉmārkka vēṇṭukōḷ

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
    எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
    எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
    செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
    திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
    தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
    தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
  • 2. ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
    பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
    புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
    எய்யாத279 அருட்சோதி என்கையுறல் வேண்டும்
    இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
    நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
    நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.
  • 3. அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
    கண்ணார நினைஎங்கும் கண்வத்தல் வேண்டும்
    காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
    பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
    பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
    உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
    உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே.
  • 4. அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
    செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
    திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
    ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
    ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
    எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
    எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
  • 5. அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
    வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
    மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
    புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
    பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
    உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
    ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
  • 6. அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
    துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
    சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
    படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
    படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
    ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
    ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
  • 7. அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
    இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
    இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
    எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
    ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
    தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
    சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
  • 8. அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
    எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
    எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
    இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
    எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
    உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
    உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
  • 9. அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
    செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
    சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
    எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
    எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
    பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
    பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
  • 10. அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
    மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
    மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
    இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
    திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
    பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
    புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.
  • 11. அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
    எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
    எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
    கமையாதி280 அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
    காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
    விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
    விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.

    • 279. எய்யாத - அறியாத. முதற்பதிப்பு.
    • 280. கமை - பொறுமை. முதற்பதிப்பு.

சுத்த சன்மார்க்க வேண்டுகோள் // சுத்த சன்மார்க்க வேண்டுகோள்