திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
மெய்யருள் வியப்பு
meyyaruḷ viyappu
அம்பலவாணர் அணையவருகை
ampalavāṇar aṇaiyavarukai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

113. அம்பலவாணர் வருகை
ampalavāṇar varukai

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    பல்லவி
  • 1. வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
    வல்லி மணாளரே வாரீர்
    மணிமன்ற வாணரே வாரீர்.
  • கண்ணிகள்
  • 2. அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு
    அம்பல வாணரே வாரீர்
    அன்புடை யாளரே வாரீர். வாரீர்
  • 3. அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய
    அந்தண ரேஇங்கு வாரீர்
    அம்பலத் தையரே வாரீர். வாரீர்
  • 4. அன்புரு வானவர் இன்புற உள்ளே
    அறிவுரு வாயினீர் வாரீர்
    அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர். வாரீர்
  • 5. அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
    அரும்பெருஞ் சித்தரே வாரீர்
    அற்புத ரேஇங்கு வாரீர். வாரீர்
  • 6. அம்மையு மாய்எனக் கப்பனு மாகிஎன்
    அன்பனு மாயினீர் வாரீர்
    அங்கண ரேஇங்கு வாரீர். வாரீர்
  • 7. அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய
    அம்பல வாணரே வாரீர்
    அங்கண ரேஇங்கு வாரீர். வாரீர்
  • 8. அப்பணி பொன்முடி அப்பனென் றேத்துமெய்
    அன்பருக் கன்பரே வாரீர்
    இன்பம் தரஇங்கு வாரீர். வாரீர்
  • 9. அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்
    அடிக்கம லத்தீரே வாரீர்
    நடிக்கவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
  • 10. அண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில்
    அளித்திட வல்லீரே வாரீர்
    களித்தென்னை ஆண்டீரே வாரீர். வாரீர்
  • 11. அம்பர மானசி தம்பர நாடகம்
    ஆடவல் லீர்இங்கு வாரீர்
    பாடல்உ வந்தீரே298 வாரீர். வாரீர்
  • 12. ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்
    அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
    ஆனந்த நாடரே வாரீர். வாரீர்
  • 13. ஆகம வேதம் அனேக முகங்கொண்
    டருச்சிக்கும் பாதரே வாரீர்
    ஆருயிர் நாதரே வாரீர். வாரீர்
  • 14. ஆசறும் அந்தங்கள் ஆறும் புகன்றநல்
    ஆரிய ரேஇங்கு வாரீர்
    ஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்
  • 15. ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல்
    ஆரிய ரேஇங்கு வாரீர்
    ஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்
  • 16. ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற
    ஆனந்த ரேஇங்கு வாரீர்
    ஆடல்வல் லீர்இங்கு வாரீர். வாரீர்
  • 17. ஆதர வாய்என் அறிவைத் தெளிவித்
    தமுதம் அளித்தீரே வாரீர்
    ஆடிய பாதரே வாரீர். வாரீர்
  • 18. ஆதார மீதானத் தப்பாலும் காண்டற்
    கரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
    கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர். வாரீர்
  • 19. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
    ஜோதிய ரேஇங்கு வாரீர்
    வேதிய ரேஇங்கு வாரீர். வாரீர்
  • 20. ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன்
    பாடல்கொண் டீர்இங்கு வாரீர்
    கூடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
  • 21. ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன்
    ஆண்டவ ரேஇங்கு வாரீர்
    தாண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்
  • 22. ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன்
    ஆணவம் போக்கினீர் வாரீர்
    காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்
  • 23. இதுதரு ணம்தரு ணம்தரு ணம்என்
    இறையவ ரேஇங்கு வாரீர்
    காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்
  • 24. இச்சையின் வண்ணம் எனக்கருள் செய்ய
    இதுதரு ணம்இங்கு வாரீர்
    இன்னமு தாயினீர் வாரீர். வாரீர்
  • 25. இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள்
    இருக்கின்ற நாதரே வாரீர்
    இருக்கின் பொருளானீர் வாரீர். வாரீர்
  • 26. இரவும் பகலும் இதயத்தி லூறி
    இனிக்கும் அமுதரே வாரீர்
    இனித்தரி யேன்இங்கு வாரீர். வாரீர்
  • 27. இன்னும்தாழ்த் தங்கே இருப்ப தழகன்று
    இதுதரு ணம்இங்கு வாரீர்
    இருமையும் ஆயினீர் வாரீர். வாரீர்
  • 28. இடர்தவிர்த் தின்பம் எனக்களித் தாளற்
    கிதுதரு ணம்இங்கு வாரீர்
    இனியவ ரேஇங்கு வாரீர். வாரீர்
  • 29. இறையும் பொறுப்பரி தென்னுயிர் நாதரே
    இத்தரு ணம்இங்கு வாரீர்
    இதநடஞ் செய்கின்றீர் வாரீர். வாரீர்
  • 30. இம்மையி லேஎனக் கம்மையின் இன்பம்
    இதுஎன் றளித்தீரே வாரீர்
    இதயத் திருந்தீரே வாரீர். வாரீர்
  • 31. இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல்
    எங்கும் நிறைந்தீரே வாரீர்
    இந்தெழில் வண்ணரே வாரீர். வாரீர்
  • 32. இணைஒன்றும் இல்லா இணையடி என்தலை
    ஏறவைத் தீர்இங்கு வாரீர்
    இறுதியி லீர்இங்கு வாரீர். வாரீர்
  • 33. ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்
    கின்பமும் ஆயினீர் வாரீர்
    அன்பருக் கன்பரே வாரீர். வாரீர்
  • 34. ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென்
    இதயத்தில் ஏற்றினீர் வாரீர்
    உதயச் சுடரினீர் வாரீர். வாரீர்
  • 35. ஈடறி யாதமெய் வீடுதந் தன்பரை
    இன்புறச் செய்கின்றீர் வாரீர்
    வன்பர்க் கரியீரே வாரீர். வாரீர்
  • 36. ஈதியல் என்றுநின் றோதிய வேதத்திற்
    கெட்டா திருந்தீரே வாரீர்
    நட்டார்க் கெளியீரே வாரீர். வாரீர்
  • 37. ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந
    டேசரே நீர்இங்கு வாரீர்
    நேசரே நீர்இங்கு வாரீர். வாரீர்
  • 38. ஈசர் பலிக்குழல்299 நேசர்என் றன்பர்கள்
    ஏசநின் றீர்இங்கு வாரீர்
    நாசமில் லீர்இங்கு வாரீர். வாரீர்
  • 39. ஈறறி யாமறை யோன்என் றறிஞர்
    இயம்பநின் றீர்இங்கு வாரீர்
    வயந்தரு வீர்இங்கு வாரீர் வாரீர்
  • 40. ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக்
    கீதல்செய் வீர்இங்கு வாரீர்
    ஓதரி யீர்இங்கு வாரீர். வாரீர்
  • 41. ஈடணை அற்றநெஞ் சூடணை உற்றுமற்
    றீடணை யீர்இங்கு வாரீர்
    ஆடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
  • 42. ஈண்டறி வோங்கிடத் தூண்டறி வாகிஉள்
    ஈண்டுகின் றீர்இங்கு வாரீர்
    ஆண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்
  • 43. உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக்
    குள்ள துரைசெய்தீர் வாரீர்
    வள்ளல் விரைந்திங்கு வாரீர். வாரீர்
  • 44. உருவாய் அருவாய் உருவரு வாய்அவை
    ஒன்றுமல் லீர்இங்கு வாரீர்
    என்றும்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
  • 45. உறவும் பகையும் உடைய நடையில்
    உறவும்எண் ணேன்இங்கு வாரீர்
    பிறவுநண் ணேன்இங்கு வாரீர். வாரீர்
  • 46. உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென்
    உள்ளத் திருந்தீரே வாரீர்
    விள்ளற் கரியீரே வாரீர். வாரீர்
  • 47. உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும்
    உய்யவல் லேன்இங்கு வாரீர்
    செய்யவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
  • 48. உடையவ ரார்இக் கடையவ னேனுக்
    குடையவ ரேஇங்கு வாரீர்
    சடையவ ரே300 இங்கு வாரீர். வாரீர்
  • 49. உறங்கி இறங்கும் உலகவர் போலநான்
    உறங்கமாட் டேன்இங்கு வாரீர்
    இறங்கமாட் டேன்இங்கு வாரீர். வாரீர்
  • 50. உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு
    துண்டி விரும்பினேன் வாரீர்
    உண்டி தரஇங்கு வாரீர். வாரீர்
  • 51. உன்னுதோ றுன்னுதோ றுள்ளே இனிக்கின்ற
    உத்தம ரேஇங்கு வாரீர்
    உற்ற துணையானீர் வாரீர். வாரீர்
  • 52. உம்மாணை உம்மாணை உம்மைஅல் லால்எனக்
    குற்றவர் மற்றிலை வாரீர்
    உற்றறிந் தீர்இங்கு வாரீர். வாரீர்
  • 53. ஊன நடந்தவிர்த் தான நடங்காட்டு
    மோன நடேசரே வாரீர்
    ஞான நடேசரே வாரீர். வாரீர்
  • 54. ஊருமில் லீர்ஒரு பேருமில் லீர்அறி
    வோருமில் லீர்இங்கு வாரீர்
    யாருமில் லீர்இங்கு வாரீர். வாரீர்
  • 55. ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற
    வீறுடை யீர்இங்கு வாரீர்
    நீறுடை யீர்இங்கு வாரீர். வாரீர்
  • 56. ஊன்றுநும் சேவடி சான்று தரிக்கிலேன்
    ஏன்றுகொள் வீர்இங்கு வாரீர்
    ஆன்றவ ரேஇங்கு வாரீர். வாரீர்
  • 57. ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென
    ஏற்றம் அருள்செய்வீர் வாரீர்
    தேற்றம் அருள்செய்வீர் வாரீர். வாரீர்
  • 58. ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள்
    பாடல்சொல் வீர்இங்கு வாரீர்
    ஆடல்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
  • 59. ஊக்கம் கொடுத்தென்றன் ஏக்கம் கெடுத்தருள்
    ஆக்க மடுத்தீரே வாரீர்
    தூக்கம் தவிர்த்தீரே வாரீர். வாரீர்
  • 60. ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்துண்டென்
    றோமை அறிவித்தீர் வாரீர்
    சேமஞ் செறிவித்தீர் வாரீர். வாரீர்
  • 61. ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத
    யோகம் கொடுத்தீரே வாரீர்
    போகம் கொடுத்தீரே வாரீர். வாரீர்
  • 62. ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை
    ஓதிய நாதரே வாரீர்
    ஆதிஅ னாதியீர் வாரீர். வாரீர்
  • 63. என்குறை தீர்த்தென்னுள் நன்குறை வீர்இனி
    என்குறை என்முன்னீர் வாரீர்
    தன்குறை இல்லீரே வாரீர். வாரீர்
  • 64. என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர்
    இன்னுயிர் ஆயினீர் வாரீர்
    என்னுயிர் நாதரே வாரீர். வாரீர்
  • 65. என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய
    என்கண் ணனையீரே வாரீர்
    என்கண் ணுதலீரே வாரீர். வாரீர்
  • 66. எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும்
    எல்லாம்வல் லீர்இங்கு வாரீர்
    சொல்லா நிலையினீர் வாரீர். வாரீர்
  • 67. எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல்
    எட்டும் படிசெய்தீர் வாரீர்
    எட்டுரு வாயினீர் வாரீர்.301 வாரீர்
  • 68. என்று கண்டாய்இது302 நன்றுகொண் டாளுக
    என்றுதந் தீர்இங்கு வாரீர்
    அன்றுவந் தீர்இன்று வாரீர். வாரீர்
  • 69. எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர்
    இச்சம யம்இங்கு வாரீர்
    மெய்ச்சம யந்தந்தீர் வாரீர். வாரீர்
  • 70. என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை
    இன்பால் பெறுகின்றீர் வாரீர்
    தென்பால் முகங்கொண்டீர் வாரீர். வாரீர்
  • 71. எச்ச உரையன்றென் இச்சைஎல் லாம்உம
    திச்சைகண் டீர்இங்கு வாரீர்
    அச்சம்த விர்த்தீரே வாரீர். வாரீர்
  • 72. எண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்
    எண்ணம் எனக்கில்லை வாரீர்
    வண்ணம் அளிக்கின்றீர் வாரீர். வாரீர்
  • 73. ஏராய நான்முகர் நாராய ணர்மற்றும்
    பாராய ணம்செய்வீர் வாரீர்
    ஊராயம் ஆயினீர் வாரீர். வாரீர்
  • 74. ஏம மிகுந்திரு வாம சுகந்தரும்
    ஏம சபேசரே வாரீர்
    சோம சிகாமணி வாரீர். வாரீர்
  • 75. ஏத மிலாப்பர நாத முடிப்பொருள்
    ஏதது சொல்லுவீர் வாரீர்
    ஈதல் உடையீரே வாரீர். வாரீர்
  • 76. ஏக பராபர யோக வெளிக்கப்பால்
    ஏக வெளிநின்றீர் வாரீர்
    ஏகர் அனேகரே வாரீர். வாரீர்
  • 77. ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல்
    ஏறவைத் தீர்இங்கு வாரீர்
    தேறவைத் தீர்இங்கு வாரீர். வாரீர்
  • 78. ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென்
    றேகாந்தம் சொல்லினீர் வாரீர்
    தேகாந்தம் இல்லீரே வாரீர். வாரீர்
  • 79. ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்
    றேகாத லாற்சொன்னீர் வாரீர்
    வேகாத காலினீர் வாரீர். வாரீர்
  • 80. ஏடா யிரமென்னை கோடா மொழிஒன்றே
    ஏடாஎன் றீர்இங்கு வாரீர்
    ஈடாவார் இல்லீரே வாரீர். வாரீர்
  • 81. ஏசாத தந்திரம் பேசாத மந்திரம்
    ஈசான மேலென்றீர் வாரீர்
    ஆசாதி இல்லீரே வாரீர். வாரீர்
  • 82. ஏனென்பார் வேறிலை நான்அன்பாற் கூவுகின்
    றேன்என்பால் ஏனென்பீர் வாரீர்
    ஆனின்பால் ஆடுவீர் வாரீர். வாரீர்
  • 83. ஐந்து மலங்களும் வெந்து விழஎழுத்
    தைந்துஞ் செயும்என்றீர் வாரீர்
    இந்து சிகாமணி வாரீர். வாரீர்
  • 84. ஐயமுற் றேனைஇவ் வையங் கரியாக
    ஐயம் தவிர்த்தீரே வாரீர்
    மெய்யம் பலத்தீரே வாரீர். வாரீர்
  • 85. ஐயர் நடம்புரி மெய்யர்என் றேஉணர்ந்
    தையர் தொழநின்றீர் வாரீர்
    துய்யர் உளநின்றீர் வாரீர். வாரீர்
  • 86. ஐவணங் காட்டுநும் மெய்வணம் வேட்டுநின்
    றைவணர் ஏத்துவீர் வாரீர்
    பொய்வணம் போக்குவீர் வாரீர். வாரீர்
  • 87. ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும்
    ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர்
    நன்றேநின் றீர்இங்கு வாரீர். வாரீர்
  • 88. ஒப்பாரில் லீர்உமக் கிப்பாரில் பிள்ளைநான்
    ஒப்பாரி அல்லகாண் வாரீர்
    முப்பாழ் கடந்தீரே வாரீர். வாரீர்
  • 89. ஒத்த இடந்தன்னில் நித்திரை செய்என்றீர்
    ஒத்த இடங்காட்ட வாரீர்
    சித்த சிகாமணி வாரீர். வாரீர்
  • 90. ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன்
    ஒட்டுவைத் தேனும்மேல் வாரீர்
    எட்டுக் குணத்தீரே வாரீர். வாரீர்
  • 91. ஒருமை நிலையில் இருமையும் தந்த
    ஒருமையி னீர்இங்கு வாரீர்
    பெருமையி னீர்இங்கு வாரீர். வாரீர்
  • 92. ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர்
    உண்மைசொன் னேன்இங்கு வாரீர்
    பெண்மை304 இடங்கொண்டீர் வாரீர். வாரீர்
  • 93. ஓங்கார நாடகம் பாங்காகச்305 செய்கின்ற
    ஓங்கார நாடரே வாரீர்
    ஆங்கார நீக்கினீர் வாரீர். வாரீர்
  • 94. ஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி
    ஓங்கு நடேசரே வாரீர்
    பாங்குசெய் வீர்இங்கு வாரீர். வாரீர்
  • 95. ஓசையின் உள்ளேஓர் ஆசை306 உதிக்கமெல்
    ஓசைசெய் வித்தீரே வாரீர்
    பாசம் அறுத்தீரே வாரீர். வாரீர்
  • 96. ஓரா துலகினைப் பாரா திருநினக்
    கோரா வகைஎன்றீர் வாரீர்
    பேரா நிலைதந்தீர் வாரீர். வாரீர்
  • 97. ஓடாது மாயையை நாடாது நன்னெறி
    ஊடா திருஎன்றீர் வாரீர்
    வாடா திருஎன்றீர் வாரீர். வாரீர்
  • 98. ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்தருள்
    ஓலக்கங் காட்டினீர் வாரீர்
    காலக் கணக்கில்லீர் வாரீர். வாரீர்
  • 99. ஓடத்தின் நின்றொரு மாடத்தில் ஏற்றிமெய்
    யூடத்தைக் காட்டினீர் வாரீர்
    வேடத்தைப் பூட்டினீர் வாரீர். வாரீர்
  • 100. ஓமத்தி லேநடுச் சாமத்தி லேஎனை
    ஓமத்தன்308 ஆக்கினீர் வாரீர்
    சாமத்த309 நீக்கினீர் வாரீர். வாரீர்
  • 101. ஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன்
    ஊமென்று310 காட்டினீர் வாரீர்
    நாமென்று நாட்டினீர் வாரீர். வாரீர்
  • 102. ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே
    செவ்வியன் ஆக்கினீர் வாரீர்
    ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர். வாரீர்
  • 103. கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசை
    கடல்பொங்கு கின்றது வாரீர்
    உடல்தங்கு கின்றது வாரீர். வாரீர்
  • 104. கண்டணைந் தால்அன்றிக் காதல் அடங்காதென்
    கண்மணி யீர்இங்கு வாரீர்
    உண்மணி யீர்இங்கு வாரீர். வாரீர்
  • 105. கட்டிக்கொண் டும்மைக் கலந்து கொளல்வேண்டும்
    காரண ரேஇங்கு வாரீர்
    பூரண ரேஇங்கு வாரீர். வாரீர்
  • 106. வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
    வல்லி மணாளரே வாரீர்
    மணிமன்ற வாணரே வாரீர்.

    • 298. பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
    • 299. ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,
    • 300. தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
    • 301. எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா. எட்டுரு - அஷ்டமூர்த்தம்எட்டுஉரு - (எட்டு தமிழில் எழுத 'அ' ஆகும்) அகரவடிவம். எட்டுரு - அரு. ச. மு. க.
    • 302. கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
    • 303. 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ளமில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு மறப்பு அற்றஇடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,' என்பது ச. மு. க. குறிப்பு.இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.
    • 304. வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,
    • 305. பாங்காரச் - பி. இரா.
    • 306. ஓசை - பிரதிபேதம். ஆ. பா. 307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
    • 308. ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க.
    • 309. சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.
    • 310. ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.

அம்பலவாணர் வருகை // அம்பலவாணர் வருகை