திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நெஞ்சொடு கிளத்தல்
neñsoṭu kiḷattal
அம்பலவாணர் வருகை
ampalavāṇar varukai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

112. மெய்யருள் வியப்பு
meyyaruḷ viyappu

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    பல்லவி
  • 1. எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
    இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.
  • கண்ணிகள்
  • 2. தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்ற தே
    தாவிப் போகப் போக நூலின் தரத்தில் நின்ற தே
    கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்த வே
    கலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்த வே.
    எனக்கும் உனக்கும்
  • 3. இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே
    ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுக வே
    அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கி யே
    அதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கி யே.
    எனக்கும் உனக்கும்
  • 4. இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே
    யானும் சிலரும் படகில் ஏறி யேம யங்க வே
    விரவில் தனித்தங் கென்னை ஒருகல் மேட்டில் ஏற்றி யே
    விண்ணில் உயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றி யே.
    எனக்கும் உனக்கும்
  • 5. மேலைப் பாற்சிவ கங்கை என்னுமோர் தீர்த்தம் தன்னை யே
    மேவிப் படியில் தவறி நீரில் விழுந்த என்னை யே
    ஏலத் துகிலும் உடம்பும் நனையா தெடுத்த தேஒன் றோ
    எடுத்தென் கரத்தில் பொற்பூண் அணிந்த இறைவன் நீயன் றோ.
    எனக்கும் உனக்கும்
  • 6. என்ன துடலும் உயிரும்336 பொருளும் நின்ன தல்ல வோ
    எந்தாய் இதனைப் பெறுக எனநான் இன்று சொல்ல வோ
    சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்கு தே
    சிந்தை நினைக்கக் கண்­ர் பெருக்கி337 உடம்பை நனைக்கு தே.
    எனக்கும் உனக்கும்
  • 7. அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லை யே
    அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லை யே
    எப்பா லவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லை யே
    எனக்கும் நின்மே லன்றி உலகில் இச்சை இல்லை யே.
    எனக்கும் உனக்கும்
  • 8. அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே
    அணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே
    விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே
    மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே.
    எனக்கும் உனக்கும்
  • 9. தனிஎன்338 மேல்நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லை யே
    தகும்ஐந் தொழிலும் வேண்டுந் தோறும் தருதல் வல்லை யே
    வினவும் எனக்கென் உயிரைப் பார்க்க மிகவும் நல்லை யே
    மிகவும் நான்செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லை யே.
    எனக்கும் உனக்கும்
  • 10. என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகு தே
    என்னை விழுங்கி எங்கும் இன்ப வெள்ளம் பெருகு தே
    உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்கு தே
    உன்னோ டென்னை வேறென் றெண்ணில் மிகவும் பனிக்கு தே.
    எனக்கும் உனக்கும்
  • 11. உன்பே ரருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
    உண்டு பசிதீர்ந் தாற்போல் காதல் மிகவும் தடிக்கு தே
    அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற் றே
    அன்போர் அணுவும் இல்லா எனக்கிங் கருளல் ஆயிற் றே.
    எனக்கும் உனக்கும்
  • 12. நினைக்க நினைக்கத் தித்திப் பெனது நினைவில் கொடுக்கு தே
    நின்பால் அன்றிப் பிறர்பால் செல்ல நெஞ்சம் நடுக்கு தே
    எனைத்துன் பொழித்தாட் கொண்ட நின்னை அன்னை என்ப னோ
    எந்தாய் அன்பி லேன்நின் னடிக்கு முன்னை அன்ப னோ.
    எனக்கும் உனக்கும்
  • 13. உன்னை மறக்கில் எந்தாய் உயிர்என் உடம்பில் வாழு மோ
    உன்பால் அன்றிப் பிறர்பால் என்றன் உள்ளம் சூழு மோ
    என்னைக் கொடுக்க வாங்கிக் கொண்ட தென்ன கருதி யோ
    எந்தாய் நின்னைக் கொடுக்க என்பால் இன்று வருதி யோ.
    எனக்கும் உனக்கும்
  • 14. நெடுநாள் முயன்றும் காண்டற் கரிய நிலையைக் காட்டி யே
    நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டி யே
    நடுநா டியநின் அருளுக் கென்மேல் என்ன நாட்ட மோ
    நாய்க்குத் தவிசிட் டனைநின் தனக்கிங் கிதுவோர் ஆட்ட மோ.
    எனக்கும் உனக்கும்
  • 15. நாகா திபனும் அயனும் மாலும் நறுமு றென்ன வே
    ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்ன வே
    சாகாக்கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவை யே
    சாற்றற் கரிது நினக்கென் கொடுப்ப தேதும் வியவை யே.
    எனக்கும் உனக்கும்
  • 16. யாது கருதி என்னை ஆண்ட தைய ஐய வோ
    யானுன் அடிப்பொற் றுணைகட் குவந்து தொழும்பு செய்ய வோ
    ஓது கடவுட் கூட்டம் அனைத்தும் அடிமை அல்ல வோ
    உடையாய் அவர்க்குள் எனையும் ஒருவன் என்று சொல்ல வோ.
    எனக்கும் உனக்கும்
  • 17. தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கி னேனை யே
    தாங்கித் தெரித்த தயவை நினைக்கில் உருக்கு தூனை யே
    புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்க வே
    புகுவித் தாயை என்வாய் துடிப்ப தேத்தித் துதிக்க வே.
    எனக்கும் உனக்கும்
  • 18. தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தை யே
    தனியே நின்னை நினைக்கக் கிளர்வ தெனது சிந்தை யே
    நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக் கொடுத்த பண்ப னே
    நான்செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்ப னே.
    எனக்கும் உனக்கும்
  • 19. ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றி யே
    இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி யே
    மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னை யோ
    மதியி லேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னை யோ.
    எனக்கும் உனக்கும்
  • 20. இடமும் வலமும் இதுவென் றறியா திருந்த என்னை யே
    எல்லாம் அறிவித் தருள்செய் கருணை என்னை என்னை யே
    நடமும் நடஞ்செய் இடமும் எனக்கு நன்று காட்டி யே
    நாயி னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
    எனக்கும் உனக்கும்
  • 21. விதுவும் கதிரும் இதுவென் றறியும் விளக்கம் இன்றி யே
    விழித்து மயங்கி னேன்பால் பெரிய கருணை ஒன்றி யே
    அதுவும் அதுவும் இதுவென் றெனக்குள் அறியக் காட்டி யே
    அடிய னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
    எனக்கும் உனக்கும்
  • 22. இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே
    இரவும் பகலும் மயங்கி னேனை இனிது நண்ணி யே
    அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டி யே
    அன்பால் என்னை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
    எனக்கும் உனக்கும்
  • 23. அண்டத் தகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லு தே
    அவனே எல்லாம் வல்லான் என்று மறைகள் சொல்லு தே
    பிண்டத் தகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதி யே
    பேயேன் அளவில் விளங்கு கின்ற தென்ன நீதி யே.
    எனக்கும் உனக்கும்
  • 24. கருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே
    காண்போம் என்று நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
    அருள்நா டகஞ்செய் பதங்கள் பாடி ஆட விரைவ தே
    ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவ தே.
    எனக்கும் உனக்கும்
  • 25. அருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத் தே
    அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்த திந்த ஞாலத் தே
    பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னை யோ
    பொன்னென் றைய மதிப்ப துதவாத் துரும்பு தன்னை யோ.
    எனக்கும் உனக்கும்
  • 26. எனக்குள் நீயும் உனக்குள் நானும்இருக்கும் தன்மை யே
    இன்று காட்டிக் கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மை யே
    தனக்குள் ளதுதன் தலைவர்க் குளதென் றறிஞர் சொல்வ தே
    சரியென் றெண்ணி எனது மனது களித்து வெல்வ தே.
    எனக்கும் உனக்கும்
  • 27. கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே
    கனித்த பெரிய தனித்த கனிஎன் கருத்துள் இனித்த தே
    தருணத் துண்டு மகிழ்வுற் றேன்அம் மகிழ்ச்சி சொல்ல வே
    தனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்த தல்ல வே.
    எனக்கும் உனக்கும்
  • 28. என்னா ருயிர்க்குத் துணைவ நின்னை நான்து திக்க வே
    என்ன தவஞ்செய் தேன்முன் உலகு ளோர்ம திக்க வே
    பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரிய தே
    புலைய னேனுக் களித்த கருணை மிகவும் பெரிய தே.
    எனக்கும் உனக்கும்
  • 29. என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே
    என்ன தவஞ்செய் தேன்முன் அயனும் அரியும் நாண வே
    புன்கண் ஒழித்துத் தெள்ளா ரமுதம் புகட்டி என்னை யே
    பொருளாய் எண்ணி வளர்க்கின் றாய்நீ எனக்கோர் அன்னை யே.
    எனக்கும் உனக்கும்
  • 30. அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே
    அமுதும் அளித்தாய் யார்செய் வார்கள் இந்த நன்றி யே
    செறிவி லாத பொறியும் மனமும் செறிந்து நிற்க வே
    செய்தாய் மேலும் தெரித்தாய் சாகாக் கல்வி கற்க வே.
    எனக்கும் உனக்கும்
  • 31. ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே
    யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலை யே
    திருநாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையு மே
    சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையு மே.
    எனக்கும் உனக்கும்
  • 32. அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும்அறிய வேண்டி யே
    ஆசைப் பட்ட தறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டி யே
    பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும்பிண்டம் தன்னை யே
    பிரியும் வகையும் பிரியா வகையும்தெரித்தாய் பின்னை யே.
    எனக்கும் உனக்கும்
  • 33. வேதா கமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன் றாக வே
    விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போக வே
    பூதா திகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்று மே
    பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்று மே.
    எனக்கும் உனக்கும்
  • 34. வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய்ம ணக்கு தே
    வஞ்ச வினைகள் எனைவிட் டோடித் தலைவ ணக்கு தே
    எள்ளா துனது புகழைக் கேட்கச் செவிந யக்கு தே
    எந்தாய் தயவை எண்ணுந் தோறும் உளம்வி யக்கு தே.
    எனக்கும் உனக்கும்
  • 35. இறைவா நின்னைக் கனவி லேனும் யான்ம றப்ப னோ
    எந்தாய் உலகத் தவர்கள் போல்நான் இனி இறப்ப னோ
    மறைவா சகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியி லே
    வாய்க்கக் கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியி லே.
    எனக்கும் உனக்கும்
  • 36. தலைவா எனக்குக் கருணை அமுதம் தரஇத் தலத்தி லே
    தவம்செய் தேன்அத் தவமும் உன்றன் அருள்வ லத்தி லே
    அலைவா ரிதியில் துரும்பு போல அயனும் மாலு மே
    அலைய எனக்கே அளிக்கின் றாய்நீ மேலும் மேலு மே.
    எனக்கும் உனக்கும்
  • 37. உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்ன வே
    உடம்பு பூரிக் கின்ற தொளிர்பொன் மலைய தென்ன வே
    தடையா தினிஉள் மூல மலத்தின் தடையும் போயிற் றே
    சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமம தாயிற் றே.
    எனக்கும் உனக்கும்
  • 38. மயங்குந் தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கி யே
    மகிழ்விக் கின்றாய் ஒருகால் ஊன்றி ஒருகால் தூக்கி யே
    உயங்கு மலங்கள் ஐந்தும் பசையற் றொழிந்து வெந்த தே
    உன்பே ரருட்பொற் சோதி வாய்க்குந் தருணம் வந்த தே.
    எனக்கும் உனக்கும்
  • 39. எனக்கும் நின்னைப் போல நுதற்கண் ஈந்துமதனை யே
    எரிப்பித் தாய்பின் எழுப்பிக் கொடுத்தாய் அருவ மதனை யே
    சினக்குங் கூற்றை உதைப்பித் தொழித்துச் சிதைவு மாற்றி யே
    தேவர் கற்பம் பலவும் காணச் செய்தாய் போற்றி யே.
    எனக்கும் உனக்கும்
  • 40. கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்று மே
    கருத்தில் உளது வேறோர் விடயம் காணேன் என்று மே
    உள்ள துரைக்கின் றேன்நின் அடிமேல் ஆணை முன்னை யே
    உள்ளே விளங்கிக் காண்கின் றாய்க்கிங் கொளிப்ப தென்னை யே.
    எனக்கும் உனக்கும்
  • 41. என்னை அடிமை கொண்டாய் நானும் நினக்கு நல்ல னோ
    எல்லாம் வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்ல னோ
    முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டி யே
    மூவர்க் கரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டி யே.
    எனக்கும் உனக்கும்
  • 42. சோதி மலையில் கண்டேன் நின்னைக் கண்க ளிக்க வே
    துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிம ளிக்க வே
    ஓதி உணர்தற் கரிய பெரிய உணர்வை நண்ணி யே
    ஓதா தனைத்தும்உணர்கின்றேன்நின் அருளை எண்ணி யே.
    எனக்கும் உனக்கும்
  • 43. ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே
    ஏற்றிக் களிக்க வைத்தாய் அதன்மேல் இலங்கு குன்றி லே
    வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசு மே
    மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப்பொற் காசு மே.
    எனக்கும் உனக்கும்
  • 44. இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மை யே
    என்பால் செய்ய வைத்தாய் இதுநின் அருளின் தன்மை யே
    அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கி யே
    அப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமை யாக்கி யே.
    எனக்கும் உனக்கும்
  • 45. அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதி யே
    அரசே எனக்குள் விளங்கும் ஆதி யாம்அ னாதி யே
    ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணை யாள னே
    ஒன்றாய் ஒன்றில் உபய மாகி ஒளிரும் தாள னே.
    எனக்கும் உனக்கும்
  • 46. பாலும் தேனும் கலந்த தென்ன என்னுள் இனிக்க வே
    பரம ஞான அமுதம் அளிக்கின் றாய்த னிக்க வே
    ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவ தென்ப ரே
    இன்று நோக்கி ஓர வாரன் என்பர் அன்ப ரே.
    எனக்கும் உனக்கும்
  • 47. ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே
    அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே
    மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே
    வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே.
    எனக்கும் உனக்கும்
  • 48. பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்ட மும்
    போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்ட மும்
    நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமு மே
    நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமு மே.
    எனக்கும் உனக்கும்
  • 49. எட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே
    எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டி யே
    துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ளேற்றி யே
    தூண்டா தென்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றி யே.
    எனக்கும் உனக்கும்
  • 50. அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவ னாகி யே
    அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகி யே
    பொருளாய் எனையும் உளங்கொண் டளித்த புனித நாத னே
    போற்று நாத முடிவில் நடஞ்செய் கமல பாத னே.
    எனக்கும் உனக்கும்
  • 51. உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே
    உயிருள் நிறைந்த தலைவ எல்லாம் வல்ல சித்த னே
    மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரம மே
    மன்றில் பரமா னந்த நடஞ்செய் கின்ற பிரம மே.
    எனக்கும் உனக்கும்
  • 52. அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே
    அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ள மே
    பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வான மே
    புனித வானத் துள்ளே விளங்கும் பூரண ஞான மே.
    எனக்கும் உனக்கும்
  • 53. சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே
    சாற்றப் புகினும் சாலார்அருளின் பெருமை உன்ன வே
    அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே
    அனந்தத் தொன்றென் றுரைத்துஞ் சாலா நின்பொன் னடியி லே.
    எனக்கும் உனக்கும்
  • 54. அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவ ரே
    ஆறா றகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவ ரே
    இப்பா ராதி பூதம் அடங்குங் காலும் நின்னை யே
    ஏத்திக் களித்து வாழ்வேன் இதற்கும் ஐய மென்னை யே.
    எனக்கும் உனக்கும்
  • 55. என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டி யே
    இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டி யே
    முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னை யே
    முன்னி மகிழ்ந்து பாடப் புரிந்தாய் அடிமை என்னை யே.
    எனக்கும் உனக்கும்
  • 56. எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே
    இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்கு தே
    கண்ணும் கருத்தும் நின்பால் அன்றிப் பிறர்பால் செல்லு மோ
    கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லு மோ.
    எனக்கும் உனக்கும்
  • 57. விந்தோ நாத வெளியும் கடந்து மேலும் நீளு தே
    மேலை வெளியும் கடந்துன் அடியர் ஆணை ஆளு தே
    அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லை யே
    அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லை யே.
    எனக்கும் உனக்கும்
  • 58. இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனிநான் விடுவ னோ
    எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவ னோ
    குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற் றே
    கோவே உன்றன் அருட்சிற் சோதி என்ன தாயிற் றே.
    எனக்கும் உனக்கும்
  • 59. காய்க்கும் பருவம் தன்னைப் பழுத்த பருவம் ஆக்கி யே
    கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே
    நாய்க்குத் தவிசிட் டொருபொன் முடியும் நன்று சூட்டி யே
    நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டி யே.
    எனக்கும் உனக்கும்
  • 60. கல்லை நோக்கிக் கனிந்து பழுத்த கனிய தாக்கி யே
    கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே
    புல்லை முடிக்கும் அணிகின் றாய்என் புன்சொல் மாலை யே
    புனைந்தென் உளத்தில் இருக்கப் புரிந்தாய் நின்பொற் காலையே.
    எனக்கும் உனக்கும்
  • 61. சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலை யே
    தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலை யே
    ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற் பாத மே
    உலக விடயக் காட்டில் செல்லா தெனது போத மே.
    எனக்கும் உனக்கும்
  • 62. அருளும் பொருளும் பெற்றேன் அடிய னாகி நானு மே
    அஞ்சேன் மாயை வினைகட் கொருசிற் றளவ தேனு மே
    இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள்சிற் சோதி யே
    என்றன் அகத்தும் புறத்தும் விளங்கு கின்ற தாதி யே.
    எனக்கும் உனக்கும்
  • 63. காமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தி னேன்
    கடிய மயக்கக் கடலைத் தாண்டி அடியை ஏந்தி னேன்
    சேமப் பொதுவில் நடங்கண் டெனது சிறுமை நீங்கி னேன்
    சிற்றம் பலத்து நடங்கண் டுவந்து மிகவும் ஓங்கி னேன்.
    எனக்கும் உனக்கும்
  • 64. தாங்கல் விடுதல் இரண்டும் எனக்குச் சமம தாயிற் றே
    சகத்தில் வழங்கும் மாயை வழக்குத் தவிர்ந்து போயிற் றே
    ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கி னேன்
    எந்தாய் கருணை அமுதுண் டின்பப் பொருப்பில் ஓங்கி னேன்.
    எனக்கும் உனக்கும்
  • 65. உறவு பகைஎன் றிரண்டும் எனக்கிங் கொன்ற தாயிற் றே
    ஒன்றென் றிரண்டென் றுளறும் பேதம் ஓடிப் போயிற் றே
    மறவு நினைவென் றென்னை வலித்த வலிப்பு நீங்கி னேன்
    மன்றில் பரமா னந்த நடங்கண் டின்பம் ஓங்கி னேன்.
    எனக்கும் உனக்கும்
  • 66. உன்னைக்கண்டு கொண்டேன் கண்ட வுடன்இங் கென்னை யே
    உலக மெல்லாம் கண்டு கொண்ட உவப்பி தென்னை யே
    என்னைக் கண்டு கொண்ட காலத் திறைவ நின்னை யே
    யாரும் கண்டு கொண்டார் இல்லை யாங்க தென்னை யே.
    எனக்கும் உனக்கும்
  • 67. மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயி னேன்
    வள்ளல் கருணை அமுதுண் டின்ப நாட்டான் ஆயி னேன்
    குலத்தில் குறியில் குணத்தில் பெருமை கொள்ளா நாயி னேன்
    கோதில் அமுதுண் டெல்லா நலமும் உள்ளான் ஆயி னேன்.
    எனக்கும் உனக்கும்
  • 68. கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயி னேன்
    கருணை அமுதுண் டின்ப நாட்டுக் குடையன் ஆயி னேன்
    விடயக் காட்டில் ஓடித் திரிந்த வெள்ளை நாயி னேன்
    விடையாய் நினக்கு மிகவும் சொந்தப் பிள்ளை ஆயி னேன்.
    எனக்கும் உனக்கும்
  • 69. அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார்
    அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார்
    மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே
    வயங்கும் அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே.
    எனக்கும் உனக்கும்
  • 70. வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே
    மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே
    எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே
    இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே.
    எனக்கும் உனக்கும்
  • 71. சிற்றம் பலத்தில் நடங்கண் டவர்காற் பொடிகொள் புல்ல தே
    சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்ய வல்ல தே
    பற்றம் பலத்தில் வைத்தார் தம்மைப் பணியும் பத்த ரே
    பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்த ரே.
    எனக்கும் உனக்கும்
  • 72. சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்யென் றென்னை யே
    செல்வப் பிள்ளை யாக்கி வளர்க்கின் றாய்இ தென்னை யே
    தெருட்டித் திருப்பொற் பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டி யே
    திகழ நடுவைத் தாய்சன் மார்க்க சங்கம்கூட்டி யே.
    எனக்கும் உனக்கும்
  • 73. அடியன்ஆக்கிப் பிள்ளைஆக்கி நேயன்ஆக்கி யே
    அடிகள்ஆக்கிக் கொண்டாய் என்னை அவலம் நீக்கி யே
    படியு ளோரும் வானு ளோரும் இதனை நோக்கி யே
    பதியும் ஓர வாரன் என்பர் பரிவு தேக்கி யே.
    எனக்கும் உனக்கும்
  • 74. அண்ணா எனையும் பொருளென் றெண்ணி இரவும் பகலு மே
    அகத்தும் புறத்தும் திரிகின் றாய்இவ் வுலகென் புகலு மே
    தண்ணா ரமுதம் மிகவும் எனக்குத் தந்த தன்றி யே
    தனியே இன்னும் தருகின் றாய்என் னறிவின் ஒன்றி யே.
    எனக்கும் உனக்கும்
  • 75. வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே
    வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே
    நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே
    நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே.
    எனக்கும் உனக்கும்
  • 76. புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயி னேன்
    பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயி னேன்
    தழுவற் கரிய பெரிய துரியத் தம்பத் தேறி னேன்
    தனித்தப் பாலோர் தவள மாடத் திருந்து தேறி னேன்.
    எனக்கும் உனக்கும்
  • 77. கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லை யே
    கனிய தாக்கித் தூக்கிக் கொண்டாய் துரியத் தெல்லை யே
    உடையாய் துரியத் தலத்தின் மேல்நின் றோங்குந் தலத்தி லே
    உன்பால் இருக்க வைத்தாய் என்னை உவந்து வலத்தி லே.
    எனக்கும் உனக்கும்
  • 78. அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே
    அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையு மே
    எறிந்தப் பாடு முழுதும் பெரிய இன்ப மாயிற் றே
    எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்த மாயிற் றே.
    எனக்கும் உனக்கும்
  • 79. பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
    படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே
    துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற் றே
    துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
    எனக்கும் உனக்கும்
  • 80. ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
    எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே
    ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே
    இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
    எனக்கும் உனக்கும்
  • 81. பாட்டால் உனது பதத்தை நாடிப் பாடும் வாய ரே
    பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேய ரே
    நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயி லோ
    நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக் காயி லோ.
    எனக்கும் உனக்கும்
  • 82. சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே
    சிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மே
    என்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மே
    எல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வ மே.
    எனக்கும் உனக்கும்
  • 83. அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே
    அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்துள் அமர்ந்த அமுத னே
    இச்சை யாவும் முடித்துக் கொடுத்துள் இலங்கும் குரவ னே
    என்றும் இறவாக் கல்வி அடியேற் கீய்ந்த குரவ னே.
    எனக்கும் உனக்கும்
  • 84. உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னை யே
    ஓதா துணர உணரும் உணர்வை உதவும் அன்னை யே
    தெள்ளும் கருணைச் செங்கோல் செலுத்தச் செய்த அப்ப னே
    செல்வப் பிள்ளை யாக்கி என்னுள் சேர்ந்த அப்ப னே.
    எனக்கும் உனக்கும்
  • 85. இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே
    எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவ னே
    கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவ னே
    களித்தென் தனையும் சன்மார்க் கத்தில் நாட்டும் துணைவ னே.
    எனக்கும் உனக்கும்
  • 86. சற்றும் வருந்தப் பாரா தென்னைத் தாங்கும் நேய னே
    தான்நான் என்று பிரித்தற் கரிய தரத்து நேய னே
    முற்றும் தனதை எனக்குக் கொடுத்து முயங்கும் நேய னே
    முன்னே நான்செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேய னே.
    எனக்கும் உனக்கும்
  • 87. நேயா நின்னை நினைக்க நினைக்க நெஞ்சம் களிக்கு தே
    நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர்து ளிக்கு தே
    ஓயா துனது பெருமை நினைக்க உவகை நீடு தே
    உரைப்பார் எவர்என் றுலகில் பலரை ஓடித் தேடு தே.
    எனக்கும் உனக்கும்
  • 88. பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடு தே
    பொதுவைக் காண உள்ளே ஆசை பொங்கி ஆடு தே
    என்னே பிறர்தம் வரவு நோக்கக் கண்கள் வெதும்பு தே
    எந்தாய் வரவை நினைக்கக் களிப்புப் பொங்கித் ததும்பு தே.
    எனக்கும் உனக்கும்
  • 89. மணியே நின்னைப் பொதுவில் கண்ட மனிதர் தேவ ரே
    மனிதர் கண்ணிற் பட்ட புல்லும் மரமும் தேவ ரே
    அணியே நின்னைப் பாடும் அடியர் தாமோ மூவ ரே
    அவரைக் கண்டார் அவரைக் கண்டார் அவர்கள் மூவ ரே.
    எனக்கும் உனக்கும்
  • 90. வாழ்வே நினது நடங்கண் டவரைச் சுத்தர் என்ப னோ
    மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்ப னோ
    ஏழ்வே தனையும் நீக்கி வாழும் நித்தர் என்ப னோ
    எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்ப னோ.
    எனக்கும் உனக்கும்
  • 91. சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மை யே
    தேவர் கண்டு கொண்டு வணங்கு கின்றார் இம்மை யே
    தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்த ரே
    தகும்ஐந் தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்த ரே.
    எனக்கும் உனக்கும்
  • 92. ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே
    ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமை யே
    பொய்வ ராத வாய்கொண் டுன்னைப் போற்றும் அன்ப ரே
    பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்ப ரே.
    எனக்கும் உனக்கும்
  • 93. என்னைக் காட்டிஎன்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே
    இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டி யே
    பொன்னைக் காட்டிப் பொன்னே நினது புகழைப் பாடி யே
    புந்தி களிக்க வைத்தாய் அழியா தென்னை நாடி யே.
    எனக்கும் உனக்கும்
  • 94. அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தி யே
    அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தி யே
    பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே
    பேசிப் பேசி வியக்கின் றேன்இப் பிறவி தன்னை யே.
    எனக்கும் உனக்கும்
  • 95. சிற்றம் பலத்தின் நடனம் காட்டிச் சிவத்தைக் காட்டி யே
    சிறப்பாய் எல்லாம் வல்ல சித்தித் திறத்தைக் காட்டி யே
    குற்றம் பலவும் தீர்த்தென் தனக்கோர் முடியும் சூட்டி யே
    கோவே நீயும் என்னுள் கலந்து கொண்டாய் நாட்டி யே.
    எனக்கும் உனக்கும்
  • 96. சுத்த நிலையின் நடுநின் றெங்கும் தோன்றும் சோதி யே
    துரிய வெளியைக் கடந்தப் பாலும் துலங்கும் சோதி யே
    சித்தர் உளத்தில் சுடர்செய் தோங்கும் தெய்வச் சோதி யே
    சிற்றம் பலத்தில் நடஞ்செய் தெனக்குள் சிறந்த சோதி யே.
    எனக்கும் உனக்கும்
  • 97. அன்றே என்னை அடியன்ஆக்கி ஆண்ட சோதி யே
    அதன்பின் பிள்ளை ஆக்கிஅருள்இங் களித்த சோதி யே
    நன்றே மீட்டும் நேயன் ஆக்கிநயந்த சோதி யே
    நானும் நீயும் ஒன்றென் றுரைத்துநல்கு சோதி யே.
    எனக்கும் உனக்கும்
  • 98. நீயே வலிந்திங் கென்னை ஆண்ட நீதிச் சோதி யே
    நின்னைப் பாட என்னை வளர்க்கும் நிமலச் சோதி யே
    தாயே எனவந் தென்னைக் காத்த தருமச் சோதி யே
    தன்மை பிறரால் அறிதற் கரிய தலைமைச் சோதி யே.
    எனக்கும் உனக்கும்
  • 99. சாகாக் கல்விஎனக்குப் பயிற்றித் தந்த சோதி யே
    தன்னேர் முடிஒன் றெனது முடியில் தரித்த சோதி யே
    ஏகாக் கரப்பொற் பீடத்தென்னை ஏற்று சோதி யே
    எல்லாம் வல்ல சித்திஆட்சி ஈய்ந்த சோதி யே.
    எனக்கும் உனக்கும்
  • 100. சோதி எவையும் விளங்க விளங்கும் சோதியே வாழி யே
    துரிய வெளியின் நடுநின் றோங்கும் சோதி வாழி யே
    சூதி லாமெய்ச் சிற்றம் பலத்துச் சோதி வெல்க வே
    துலங்கப் பொன்னம் பலத்தில் ஆடும் சோதி வெல்க வே.
    எனக்கும் உனக்கும்
  • 101. சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே
    சுகவாழ் வளித்த சிற்றம் பலத்துச் சோதி போற்றி யே
    சுத்த சுடர்ப்பொற் சபையில் ஆடும் சோதி போற்றி யே
    சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றி யே.
  • 102. எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
    இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.

    • 336. உயிரும் உடலும் - ச. மு. க.
    • 337. பெருகி - ச. மு. க.
    • 338. தனியன் - பி. இரா., ச. மு. க.

மெய்யருள் வியப்பு // மெய்யருள் வியப்பு