திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பெரு விண்ணப்பம்
peru viṇṇappam
திரு அருட் கிரங்கல்
tiru aruṭ kiraṅkal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

061. திருக்காட்சிக் கிரங்கல்
tirukkāṭsik kiraṅkal

    திருவொற்றியூர்
    தரவு கொச்சகக் கலிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால்
    புண்ணேயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன்
    பண்ணேயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு
    கண்ணேஉன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலனே.
  • 2. மருள்ஆர்ந்த வல்வினையால் வன்பிணியால் வன்துயரால்
    இருள்ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன்
    தெருள்ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமேநின்
    அருள்ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே.
  • 3. வல்லார் முலையார் மயல்உழந்த வஞ்சகனேன்
    பொல்லார் புரம்எரித்த புண்ணியனே பொய்மறுத்த
    நல்லார் தொழுந்தில்லை நாயகனே நன்றளித்த
    அல்லார் களத்தின் அழகுதனைக் கண்டிலனே.
  • 4. நோயால் மெலிந்துனருள் நோக்குகின்ற நொய்யவனேன்
    தாயா னவனேஎன் தந்தையே அன்பர்தமைச்
    சேயாய் வளர்க்கும் சிவனே சிவனேஎம்
    தூயாநின் பொற்றோளின் சுந்தரத்தைக் கண்டிலனே.
  • 5. வன்னேர் முலையார் மயல்உழந்த வன்மனத்தேன்
    அன்னேஎன் அப்பாஎன் ஐயாஎன் ஆரமுதே
    மன்னே மணியே மலையாள் மகிழ்உனது
    பொன்னேர் இதழிப் புயங்காணப் பெற்றிலனே.
  • 6. நண்ணும் வினையால் நலிகின்ற நாயடியேன்
    எண்ணும் சுகாதீத இன்பமே அன்புடையோர்
    கண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே
    பெண்ஒருபால் வாழும்உருப் பெற்றிதனைக் கண்டிலனே.
  • 7. தெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன்
    இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே
    அவ்வண்ண மான அரசே அமுதேநின்
    செவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே.
  • 8. அல்வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாயடியேன்
    சொல்வைத்த உண்மைத் துணையே இணைத்தோள்மேல்
    வில்வத் தொடைஅணிந்த வித்தகனே நின்னுடைய
    செல்வத் திருவடியின் சீர்காணப் பெற்றிலனே.
  • 9. பொத்தேர் மயலால் புழுங்குகின்ற பொய்யடியேன்
    கொத்தேர் செழுங்கொன்றைக் குன்றமே கோவாத
    முத்தே எவர்க்கும் முழுமுதலே முத்திக்கு
    வித்தேநின் பொன்னடிக்கீழ் மேவிநிற்க கண்டிலனே.
  • 10. நீதியிலார் வாயிலிடை நின்றலைந்த நெஞ்சகனேன்
    சோதிஎலாம் சூழ்ந்தபரஞ் சோதியே செஞ்சடைமேல்
    பாதிநிலா ஓங்கும் பரமேநீ ஒற்றிநகர்
    வீதிஉலா வந்தஎழில் மெய்குளிரக் கண்டிலனே.

திருக்காட்சிக் கிரங்கல் // திருக்காட்சிக் கிரங்கல்

No audios found!