திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆறெழுத் துண்மை
āṟeḻut tuṇmai
பணித்திறம் வேட்டல்
paṇittiṟam vēṭṭal
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

017. போக் குரையீடு
pōk kuraiyīṭu

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. கற்கி லேன்உன தருட்பெயர் ஆம்குக கந்தஎன் பவைநாளும்
    நிற்கி லேன்உன தாகம நெறிதனில் நீசனேன் உய்வேனோ
    சொற்கி லேசமில் அடியவர் அன்பினுள் தோய்தரு பசுந்தேனே
    அற்கி லேர்தரும் தணிகைஆர் அழுதமே ஆனந்த அருட்குன்றே.
  • 2. பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பிலாப் பிழைநோக்கித்
    தேவ ரீர்மன திரக்கமுற் றேஅருள் செய்திடா திருப்பீரேல்
    காவ லாகிய கடும்பிணித் துயரம்இக் கடையனேன் தனக்கின்னும்
    யாவ தாகுமோ என்செய்கோ என்செய்கோ இயலும்வேல் கரத்தீரே.
  • 3. சேவி யாதஎன் பிழைகளை என்னுளே சிறிதறி தரும்போதோ
    பாவி யேன்மனம் பகீலென வெதும்பியுள் பதைத்திடக் காண்கின்றேன்
    ஆவி யேஅருள் அமுதமே நின்திரு வருள்தனக் கென்னாமோ
    பூவில் நாயகன் போற்றிடும் தணிகையம் பொருப்பமர்ந் திடுவாழ்வே.
  • 4. துன்பி னால்அகம் வெதும்பிநைந் தயர்ந்துநின் துணைஅடி மலர்ஏத்தும்
    அன்பி லாதஇப் பாவியேன் செய்பிழை அனைத்தையும் பொறுப்பாயேல்
    வன்பி லாதநின் அடியவர் தம்திரு மனத்தினுக் கென்னாமோ
    இன்பி னால்சுரர் போற்றிடும் தணிகைவாழ் இறைவனே எம்மானே.
  • 5. என்செய் கேன்இனும் திருவருள் காண்கிலேன் எடுக்கரும் துயர்உண்டேன்
    கன்செய் பேய்மனக் கடையனேன் என்னினும் காப்பதுன் கடன்அன்றோ
    பொன்செய் குன்றமே பூரண ஞானமே புராதனப் பொருள்வைப்பே
    மன்செய் மாணிக்க விளக்கமே தணிகைவாழ் வள்ளலே மயிலோனே.
  • 6. மண்ணில் நண்ணிய வஞ்சகர் பால்கொடு வயிற்றினால் அலைப்பட்டேன்
    கண்ணில் நண்ணரும் காட்சியே நின்திருக் கடைக்கண்ணோக் கருள்நோக்கி
    எண்ணி எண்ணிநெஞ் சழிந்துகண்ணீர்கொளும் ஏழையேன் தனக்கின்னும்
    புண்ணில் நண்ணிய வேல்எனத் துயர்உறில் புலையன்என் செய்கேனே.
  • 7. மலங்கி வஞ்சகர் மாட்டிரந் தையகோ வருந்திநெஞ் சயர்வுற்றே
    கலங்கி நின்திருக் கருணையை விழையும்என் கண்அருள் செய்யாயோ
    இலங்கி எங்கணும் நிறைந்தருள் இன்பமே எந்தையே எந்தாயே
    நலங்கி ளர்ந்திடும் தணிகையம் பதியமர் நாயக மணிக்குன்றே.
  • 8. சைவ நாயக சம்பந்தன் ஆகிய தமிழ்அருட் குன்றேஎன்
    தெய்வ மேநினை அன்றிஓர் துணையிலேன் திருவருள் அறியாதோ
    வைவ தேகொளும் வஞ்சகர் தம்இடை வருந்திநெஞ் சழிகின்றேன்
    செய்வ தோர்கிலேன் கைவிடில் என்செய்கேன் தெளிவிலாச் சிறியேனே.
  • 9. வாழ்வில் ஆம்சிறு களிப்பினால் உன்றனை மறந்திறு மாக்கின்றேன்
    தாழ்வி லேசிறி தெண்ணிநொந் தயர்வன்என் தன்மைநன் றருளாளா
    கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்தருள் பெருவாழ்வே
    வேழ்வி8 ஓங்கிய தணிகைமா மலைதனில் விளங்கிவீற் றிருப்போனே.
  • 10. என்றும் மாதர்மேல் இச்சைவைத் துன்றனை எண்ணுவேன் துயருற்றால்
    கன்று நெஞ்சகக் கள்வனேன் அன்பினைக் கருத்திடை எணில்சால
    நன்று நன்றெனக் கெவ்வணம் பொன்அருள் நல்குவை அறிகில்லேன்
    துன்று மாதவர் போற்றிடும் தணிகைவாழ் சோதியே சுகவாழ்வே.

    • 8. கேழ்வி வேழ்வி என்பன எதுகை நோக்கித் திரித்தவாறு. தொ.வே.

போக் குரையீடு // போக் குரையீடு