Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
திருவடிப் புகழ்ச்சி
tiruvaṭip pukaḻchsi
நெஞ்சறிவுறுத்தல்
neñsaṟivuṟuttal
முதல் திருமுறை / First Thirumurai
002. விண்ணப்பக் கலிவெண்பா
viṇṇappak kaliveṇpā
காப்பு
நேரிசை வெண்பா
திருச்சிற்றம்பலம்
1.
அவ்வவ் விடைவந் தகற்றி அருள்தரலால்
எவ்வெவ் விடையூறும் எய்தலிலம் - தெவ்வர்தமைக்
கன்றுமத மாமுகமுங் கண்மூன்றுங் கொண்டிருந்த
தொன்றதுநம் முள்ள முறைந்து.
கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்
2.
சொற்பெறுமெய்ஞ் ஞானச் சுயஞ்சோதி யாந்தில்லைச்
சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே - நற்சிவையாந்
3.
தாயி னுலகனைத்துந் தாங்குந் திருப்புலியூர்க்
கோயி லமர்ந்தகுணக் குன்றமே - மாயமிகும்
4.
வாட்களமுற் றாங்குவிழி மாதர்மய லற்றவர்சூழ்
வேட்களமுற் றோங்கும் விழுப்பொருளே - வாழ்க்கைமனை
5.
நல்வாயி லெங்கு நவமணிக்குன் றோங்குதிரு
நெல்வாயி னின்றொளிரு நீளொளியே - செல்வாய்த்
6.
தெழிப்பாலை வேலைத் திரையொலிபோ லார்க்குங்
கழிப்பாலை யின்பக் களிப்பே - விழிப்பாலன்
7.
கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதிதரு
நல்லூர்ப் பெருமணம்வாழ் நன்னிலையே - சொல்லுந்
8.
தயேந்திர ருள்ளத் தடம்போ லிலங்கும்
மயேந்திரப் பள்ளியின்ப வாழ்வே - கயேந்திரனைக்
9.
காயலுறா தன்றுவந்து காத்தோன் புகழ்முல்லை
வாயிலி னோங்கு மணிவிளக்கே - மேய
10.
பலிக்காவூர் தோறும் பதஞ்சேப்பச் சென்று
கலிக்காமூர் மேவுங் கரும்பே - வலிக்காலில்
11.
பாய்
48
க்காடு கின்றவொரு பச்சை முகில்பரவுஞ்
சாய்க்காடு மேவுந் தடங்கடலே - வாய்க்கமையச்
12.
சொல்லவ னீச்சரங்கு தோயவும்ப ராம்பெருமைப்
பல்லவ னீச்சரத்தெம் பாவனமே - நல்லவர்கள்
13.
கண்காட்டு நெற்றிக் கடவுளே யென்றுதொழ
வெண்காட்டின் மேவுகின்ற மெய்ப்பொருளே - தண்காட்டிக்
14.
கார்காட்டித் தையலர்தங் கண்காட்டிச் சோலைகள்சூழ்
சீர்காட்டுப் பள்ளிச் சிவக்கொழுந்தே - பார்காட்
15.
டுருகாவூ ரெல்லா மொளிநயக்க வோங்குங்
குருகாவூர் வெள்ளடையெங் கோவே - அருகாத
16.
கார்
49
காழி னெஞ்சக் கவுணியர்க்குப் போதமருள்
சீர்காழி ஞானத் திரவியமே - ஓர்காழிப்
17.
பாலற்கா வன்று பசும்பொற்றா ளங்கொடுத்த
கோலக்கா மேவுங் கொடையாளா - கோலக்கா
18.
உள்ளிருக்கும் புள்ளிருக்கு மோதும் புகழ்வாய்ந்த
புள்ளிருக்கும் வேளூர்ப் புரிசடையாய் -கள்ளிருக்கும்
19.
காவின் மருவுங் கனமுந் திசைமணக்கும்
கோவின் மருவுகண்ணார் கோயிலாய் - மாவின்
20.
இடைமுடியின் றீங்கனியென் றெல்லின் முசுத்தாவும்
கடைமுடியின் மேவுங் கருத்தா - கொடைமுடியா
21.
நன்றியூ ரென்றிந்த ஞாலமெலாம் வாழ்த்துகின்ற
நின்றியூர் மேவு நிலைமையனே - ஒன்றிக்
22.
கருப்புன்கூ ருள்ளக் கயவர் நயவாத்
திருப்புன்கூர் மேவுஞ் சிவனே - உருப்பொலிந்தே
23.
ஈடூரி லாதுயர்ந்த ஏதுவினா லோங்குதிரு
நீடூ ரிலங்கு நிழற்றருவே - பீடுகொண்டு
24.
மன்னியூ ரெல்லாம் வணங்க வளங்கொண்ட
அன்னியூர் மேவு மதிபதியே - மன்னர்சுக
25.
வாழ்விக் குடிகளடி மண்பூச லாலென்னும்
வேழ்விக் குடியமர்ந்த வித்தகனே - சூழ்வுற்றோர்
26.
விண்ணெதிர்கொண் டிந்திரன்போன் மேவிநெடு நாள்வாழப்
பண்ணெதிர்கொள் பாடிப் பரம்பொருளே - நண்ணும்
27.
வணஞ்சே ரிறைவன் மகிழ்ந்து வணங்கும்
மணஞ்சேரி நீங்கா மகிழ்வே - மணஞ்சேர்ந்துந்ன்
28.
வாரட்ட கொங்கை மலையா ளொடுங்கொறுக்கை
வீரட்ட மேவும் வியனிறைவே - ஓரட்ட
29.
திக்குங் கதிநாட்டிச் சீர்கொள்திருத் தொண்டருளம்
ஒக்குங் கருப்பறிய லூரரசே - மிக்கதிரு
30.
மாவளருஞ் செந்தா மரைவளருஞ் செய்குரக்குக்
காவளரு மின்பக் கனசுகமே - தாவுமயல்
31.
காழ்கொ ளிருமனத்துக் காரிருத் தோர்மருவும்
வாழ்கொளி புத்தூர்
50
மணிச்சுடரே - தாழ்வகற்ற
32.
நண்ணிப் படிக்கரையர் நாடோறும் வாழ்த்துகின்ற
மண்ணிப் படிக்கரைவாழ் மங்கலமே - விண்ணினிடை
33.
வாமாம் புலியூர் மலர்ச்சோலை சூழ்ந்திலங்கும்
ஓமாம் புலியூர்வாழ் உத்தமமே - நேமார்ந்த
34.
வானாட்டு முள்ளூர் மருவுகின்றோர் போற்றுதிருக்
கானாட்டு முள்ளூர்க் கலைக்கடலே - மேனாட்டும்
35.
தேரையூர்ச் செங்கதிர்போற் செம்மணிக ணின்றிலங்கும்
நாரையூர் மேவு நடுநிலையே - பாரில்
36.
உடம்பூர் பவத்தை யொழித்தருளும் மேன்மைக்
கடம்பூர்வாழ் என்னிரண்டு கண்ணே - தடம்பொழிலில்
37.
கொந்தணவுங் கார்க்குழலார் கோலமயிற் போலுலவும்
பந்தண நல்லூர்ப் பசுபதியே - கந்தமலர்
38.
அஞ்சனூர்
51
செய்ததவத் தாலப் பெயர்கொண்ட
கஞ்சனூர் வாழுமென்றன் கண்மணியே - அஞ்சுகங்கள்
39.
நாடிக்கா வுள்ளே நமச்சிவா யம்புகலும்
கோடிக்கா மேவுங் குளிர்மதியே - ஓடிக்
40.
கருமங்க லக்குடியிற் காண்டுமென வோதும்
திருமங்க லக்குடியில் தேனே - தரும
41.
மனந்தாள் மலரை மருவுவிப்போர் வாழும்
பனந்தாளிற் பாலுகந்த பாகே - தினந்தாளிற்
42.
சூழ்திருவாய்ப் பாடியங்கு சூழ்கினுமா மென்றுலகர்
வாழ்திருவாய்ப் பாடிஇன்ப வாரிதியே - ஏழ்புவிக்குள்
43.
வாய்ஞ்ஞலூ ரீதே மருவவென வானவர்சேர்
சேய்ஞ்ஞலூர் இன்பச் செழுங்கனியே - வாஞ்சையுறும்
44.
சீவன் குடியுறவிச் சீர்நகரொன் றேயெனுஞ்சீர்த்
தேவன் குடிமகிழ்ந்த தெள்ளமுதே - ஓவில்
45.
மயலூர் மனம்போல் வயலிற் கயலூர்
வியலூர் சிவானந்த வெற்பே - அயலாம்பல்
46.
மட்டையூர் வண்டினங்கள் வாய்ந்து விருந்துகொளும்
கொட்டையூ ருட்கிளருங் கோமளமே - இட்டமுடன்
47.
என்னம்ப ரென்னம்ப ரென்றயன்மால் வாதுகொள
இன்னம்பர் மேவிநின்ற என்னுறவே - முன்னம்பு
48.
மாற்கும் புறம்பியலா வாய்மையருள் செய்யவுளம்
ஏற்கும் புறம்பியம்வாழ் என்னுயிரே - மாற்கருவின்
49.
கண்விசைய மங்கைக் கனிபோற் பெறத்தொண்டர்
எண்விசைய மங்கையில்வாழ் என்குருவே - மண்ணுலகில்
50.
வைகாவூர் நம்பொருட்டான் வைகியதென் றன்பர்தொழும்
வைகாவூர் மேவியவென் வாழ்முதலே - உய்யும்வகைக்
51.
காத்தும் படைத்துங் கலைத்துநிற்போர் நாடோறும்
ஏத்துங் குரங்காட்டின்
52
என்னட்பே - மாத்தழைத்த
52.
வண்பழனத் தின்குவிவெண் வாயிற்றேன் வாக்கியிட
உண்பழனத் தென்றன் உயிர்க்குயிரே - பண்பகன்ற
53.
வெய்யாற்றி னின்றவரை மெய்யாற்றி னேற்றுதிரு
ஐயாற்றின் மேவியஎன் னாதரவே - பொய்யாற்றி
54.
மெய்த்தான நின்றோர் வெளித்தான மேவுதிரு
நெய்த்தானத் துள்ளமர்ந்த நித்தியமே - மைத்த
55.
கரும்புலியூர்க் காளையொடுங் கண்ணோட்டங் கொள்ளும்
பெரும்புலியூர் வாழ்கருணைப் பேறே - விரும்பிநிதம்
56.
பொன்னுங்
53
கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்தருளை
மன்னு மழபாடி வச்சிரமே - துன்னுகின்ற
57.
நாய்க்குங் கடையேன் நவைதீர நற்கருணை
வாய்க்கும் பழுவூர் மரகதமே - தேய்க்களங்கில்
58.
வானூர் மதிபோன் மணியாற் குமுதமலர்
கானூ ருயர்தங்கக் கட்டியே - நானூறு
59.
கோலந் துறை
55
கொண்ட கோவையருள் கோவைமகிழ்
ஆலந் துறை
56
யின் அணிமுத்தே - நீலங்கொள்
60.
தேந்துறையி லன்னமகிழ் சேக்கை பலநிலவு
மாந்துறைவாழ் மாணிக்க மாமலையே - ஏந்தறிவாம்
61.
நூற்றுறையில் நின்றவர்கள் நோக்கிமகிழ் வெய்துதிருப்
பாற்றுறையில் நின்ற பரஞ்சுடரே - நாற்றிசையுந்
62.
தேனைக்கா வுள்மலர்கள் தேங்கடலென் றாக்குவிக்கும்
ஆனைக்கா மேவியமர் அற்புதமே - மானைப்போல்
63.
மைஞ்ஞ“ல வாட்கண் மலராள் மருவுதிருப்
பைஞ்ஞ“லி மேவும் பரம்பரமே - எஞ்ஞான்றும்
64.
ஏச்சிரா மங்கலத்தோ டின்பந் தரும்பாச்சி
லாச்சிரா மஞ்சேர் அருள்நிலையே - நீச்சறியா
65.
தாங்கோய் மலைப்பிறவி யார்கலிக்கோர் வார்கலமாம்
ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே - ஓங்காது
66.
நாட்போக்கி நிற்கு நவையுடையார் நாடரிதாம்
வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே - கோட்போக்கி
67.
நில்லுங் கடம்ப நெறிபோ லெனப்பூவை
சொல்லுங் கடம்பந் துறைநிறைவே - மல்லலொடு
68.
வாழும் பராய்த்துறைவான் மன்னவரு மன்னவருஞ்
சூழும் பராய்த்துறைவாழ் தோன்றலே - கூழும்பல்
69.
நற்குடியு மோங்கி நலம்பெருகு மேன்மைதிருக்
கற்குடியிற் சந்தான கற்பகமே - சிற்சுகத்தார்
70.
பிற்சநந மில்லாப் பெருமை தருமுறையூர்ச்
சற்சனர்சேர் மூக்கீச் சரத்தணியே - மற்செய்
71.
அராப்பள்ளி மேவு மவனின்று வாழ்த்தும்
சிராப்பள்ளி ஞானத் தெளிவே - இராப்பள்ளி
72.
நின்றெழன்மெய் யன்றெனவே நேர்ந்துலகு வாழ்த்துகின்ற
நன்றெறும்பி யூரிலங்கு நன்னெறியே - துன்றுகயற்
73.
கண்ணார் நெடுங்களத்தைக் கட்டழித்த மெய்த்தவர்சூழ்
தண்ணார் நெடுங்களமெய்த் தாரகமே - எண்ணார்
74.
தருக்காட்டுப் பள்ளித் தகைகொண்டோர் சூழுந்
திருக்காட்டுப் பள்ளியில்வாழ் தேவே - மருக்காட்டு
75.
நீலம் பொழிற்குள் நிறைதடங்கட் கேர்காட்டும்
ஆலம் பொழிற்சிவயோ கப்பயனே - சீலநிறை
76.
வாந்துருத்தி கொண்டுள் ளனலெழுப்பு வோர்புகழும்
பூந்துருத்தி மேவுசிவ புண்ணியமே - காந்தருவத்
77.
தண்டியூர் போற்றுந் தகைகாசிக் கட்செய்து
கண்டியூர் வாழுங் களைகண்ணே - கொண்டியல்பின்
78.
வேற்றுத் துறையுள் விரவா தவர்புகழும்
சோற்றுத் துறையுட் சுகவளமே - ஆற்றலிலாத்
79.
தீதிக் குடியென்று செப்பப் படார்மருவும்
வேதிக் குடி
58
யின்ப வெள்ளமே - கோதியலும்
80.
வன்குடித் திட்டை மருவார் மருவுதிருத்
தென்குடித் திட்டைச் சிவபதமே - நன்குடைய
81.
உள்ளமங்கை மார்மே லுறுத்தா தவர்புகழும்
புள்ளமங்கை வாழ்பரம போகமே - கள்ளமிலஞ்
82.
சக்கரப் பள்ளிதனிற் றாம்பயின்ற மைந்தர்கள்சூழ்
சக்கரப் பள்ளிதனில் தண்ணளியே - மிக்க
83.
அருகாவூர் சூழ்ந்தே அழகுபெற வோங்கும்
கருகாவூர் இன்பக் கதியே - முருகார்ந்த
84.
சோலைத் துறையிற் சுகஞ்சிவநு‘ல் வாசிக்கும்
பாலைத் துறையிற் பரிமளமே - சீலத்தர்
85.
சொல்லூ ரடியப்பர் தூயமுடி மேல்வைத்த
நல்லூ ரமர்ந்தநடு நாயகமே - மல்லார்ந்த
86.
மாவூ ரிரவியின்பொன் வையமள வுஞ்சிகரி
ஆவூரி லுற்றவெங்கள் ஆண்தகையே - ஓவாது
87.
சித்திமுற்ற யோகஞ் செழும்பொழிலிற் பூவைசெயும்
சத்திமுற்ற மேவுஞ் சதாசிவமே - பத்தியுற்றோர்
88.
முட்டீச் சுரத்தின் முயலா வகையருளும்
பட்டீச் சரத்தெம் பராபரமே - துட்டமயல்
89.
தீங்குவிழை யார்தமைவான் சென்றமரச் செய்விக்க
ஓங்குபழை யாறையிலென் னுள்ளுவப்பே - பாங்குபெற
90.
ஆர்ந்த வடவிலையான் அன்னத்தான் போற்றிநிதம்
சார்ந்த வடதளிவாழ் தற்பரமே - சேர்ந்த
91.
மலஞ்சுழி கின்ற மனத்தர்க் கரிதாம்
வலஞ்சுழி வாழ்பொன் மலையே - நிலஞ்சுழியா
92.
தோணத்தில் வந்தோ னுடன்றுதித்து வாழ்கும்ப
கோணத்தில் தெய்வக் குலக்கொழுந்தே - மாணுற்றோர்
93.
காழ்க்கோட்ட நீங்கக் கருதுங் குடமூக்கிற்
கீழ்க்கோட்ட மேவுமன்பர் கேண்மையே - வாழ்க்கோட்டத்
94.
தேரோண மட்டுந் திகழ்குடந்தை மட்டுமின்றிக்
காரோண மட்டுங் கமழ்மலரே - சீரோங்கும்
95.
யோகீச் சுரர்நின் றுவந்து வணங்குதிரு
நாகீச் சுரமோங்கு நங்கனிவே - ஓகையுளம்
96.
தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண் சூழ்பழியைப்
போக்கும் இடைமருதிற் பூரணமே - நீக்கமிலா
97.
நன்குரங் காணு நடையோ ரடைகின்ற
தென்குரங் காடுதுறைச் செம்மலே - புன்குரம்பை
98.
ஏலக் குடிபுகுந்த எம்மனோர்க் குண்மைதரு
நீலக் குடியிலங்கு நிட்களமே - ஞாலத்து
99.
நீடக்கோர் நாளும் நினைந்தேத் திடும்வைகல்
மாடக்கோ யிற்குண் மதுரமே - பாடச்சீர்
100.
வல்ல தமிழ்ப்புலவர் மன்னி வணங்குதிரு
நல்லமகிழ் இன்ப நவவடிவே - இல்லமயல்
101.
ஆழம்பங் கென்ன வறிந்தோர் செறிந்தேத்தும்
கோழம்பம் வாழ்கருணைக் கொண்டலே - வீழும்பொய்
102.
தீரா வடுவுடையார் சேர்தற் கருந்தெய்வச்
சீரா வடுதுறையெஞ் செல்வமே - பேராக்
103.
கருத்திருத்தி யேத்துங் கருத்தர்க் கருள்செய்
திருத்துருத்தி இன்பச் செழிப்பே - வருத்துமயல்
104.
நாளு மெழுந்தூர் நவையறுக்கு மன்பருள்ளம்
நீளும் அழுந்தூர் நிறைதடமே - வேளிமையோர்
105.
வாயூரத் தேமா மலர்
59
சொரிந்து வாழ்த்துகின்ற
மாயூரத் தன்பர் மனோரதமே - தேயா
106.
வளநகரென் றெவ்வுலகும் வாழ்த்தப் படுஞ்சீர்
விளநகர்வா ழெங்கண் விருந்தே - இளமைச்
107.
செறியலூர் கூந்தல் திருவனையா ராடும்
பறியலூர் வாழ்மெய்ப் பரமே - நெறிகொண்டே
108.
அன்பள்ளி யோங்கு மறிவுடையோர் வாழ்த்துஞ்செம்
பொன்பள்ளி வாழ்ஞான போதமே - இன்புள்ளித்
109.
தெள்ளியார் போற்றித் திகழுந் திருநன்னிப்
பள்ளியார்ந் தோங்கும் பரசிவமே - எள்ளுறுநோய்
110.
ஏய வலம்புரத்தை யெண்ணாம லெண்ணுகின்றோர்
மேய வலம்புரத்து மேதகவே - தூயகொடி
111.
அங்காடு கோபுரம்வா னாற்றாடு கின்றதலைச்
சங்காடு மேவுஞ் சயம்புவே - பொங்குமிருட்
112.
கூறுதிரு வாக்கூர் கொடுப்பனபோற் சூழ்ந்துமதில்
வீறுதிரு வாக்கூர் விளக்கமே - மாறகற்றி
113.
நன்கடையூர் பற்பலவு நன்றிமற வாதேத்தும்
தென்கடையூர்
60
ஆனந்தத் தேறலே - வன்மையிலாச்
114.
சொற்கடவி மேலோர் துதித்தலொழி யாதோங்கு
நற்கடவூர் வீரட்ட நாயகனே - வற்கடத்தும்
115.
வாட்டக் குடிசற்றும் வாய்ப்பதே யில்லையெனும்
வேட்டக் குடிமேவு மேலவனே - நாட்டமுற்ற
116.
வாக்குந் தெளிச்சேரி மாதவத்தர்க் கின்பநலம்
ஆக்குந் தெளிச்சேரி அங்கணனே - நீக்கும்
117.
கரும புரத்திற் கலவா தருள்செய்
தரும புரஞ்செய் தவமே - இருமையினும்
118.
எள்ளாற்றின் மேவாத ஏற்புடையோர் சூழ்ந்திறைஞ்சு
நள்ளாற்றின் மேவியஎன் நற்றுணையே - தெள்ளாற்றின்
119.
நீட்டாறு கொண்டரம்பை நின்று கவின்காட்டும்
கோட்டாறு மேவுங் குளிர்துறையே - கூட்டாக்
120.
கருவம்பர் தம்மைக் கலவாத மேன்மைத்
திருவம்பர் ஞானத் திரட்டே - ஒருவந்தர்
121.
மாகாளங் கொள்ள மதனைத் துரத்துகின்ற
மாகாளாத் தன்பர் மனோலயமே - யோகாளக்
122.
காயச்சூர் விட்டுக் கதிசேர வேட்டவர்சூழ்
மீயச்சூர் தண்ணென்னும் வெண்ணெருப்பே - மாயக்
123.
களங்கோயில் நெஞ்சக் கயவர் மருவா
இளங்கோயின் ஞான இனிப்பே - வளங்கோ€
124.
நாடுந் திலத நயப்புலவர் நாடோறும்
பாடுந் திலதைப் பதிநிதியே - ஆடுமயில்
125.
காம்புரங்கொள் தோளியர்பொற் காவிற் பயில்கின்ற
பாம்புரங்கொள் உண்மைப் பரம்பொருளே - ஆம்புவனம்
126.
துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலஞ் செய்துவகை
மன்னுஞ் சிறுகுடிஆன் மார்த்தமே - முன்னரசும்
127.
காழி மிழலையருங் கண்டுதொழக் காசளித்த
வீழி மிழலை விராட்டுருவே - ஊழிதொறும்
128.
மன்னியூர் மால்விடையாய் வானவா வென்றுதொழ
வன்னியூர் வாழு மணிகண்டா - இந்நிமிடம்
129.
சிந்துங் கருவலியின் திண்மையென்று தேர்ந்தவர்கள்
முந்துங் கருவிலிவாழ் முக்கண்ணா - மந்தணத்தைக்
130.
காணு மருந்துறையிக் காமர்தல மென்றெவரும்
பேணு பெருந்துறையிற் பெம்மானே - ஏணுடன்கா
131.
ஈட்டும் பெருநறையா றென்ன வயலோடி
நாட்டும் பெருநறையூர் நம்பனே - காட்டும்
132.
பரிசிற் கரைப்புற்றோர் பாங்குபெற வோங்கும்
அரிசிற் கரைப்புத்தூ
61
ரானே - தரிசனத்தெக்
133.
காலுஞ் சிவபுரத்தைக் காதலித்தோர் தங்கள்துதி
ஏலுஞ் சிவபுரத்தி லெம்மானே - மாலுங்கொள்
134.
வெப்புங் கலையநல்லோர் மென்மதுரச் சொன்மாலை
செப்புங் கலயநல்லூர்ச் சின்மயனே - செப்பமுடன்
135.
ஓங்குந் திருத்தொண்டர் உள்குளிர நல்லருளால்
தாங்குங் கருக்குடிவாழ் சங்கரனே - ஆங்ககனந்
136.
தாஞ்சியத்தை
62
வேங்கைத் தலையாற் றடுக்கின்ற
வாஞ்சியத்தின் மேவு மறையோனே - ஆஞ்சியிலா
137.
திந்நிலத்தும் வானாதி யெந்நிலத்து மோங்குபெரு
நன்னிலத்து வாழ்ஞான நாடகனே - மன்னுமலர்
138.
வண்டீச் சுரம்பாடி வார்மதுவுண் டுள்களிக்குங்
கொண்டீச் சுரத்தமர்ந்த கோமானே - கண்டீச
139.
நண்பனையூ ரன்புகழும் நம்பவென உம்பர்தொழத்
தண்பனையூர் மேவுஞ் சடாதரனே - பண்புடனே
140.
எற்குடியா னங்கொண் டிருக்க மகிழ்ந்தளித்த
விற்குடியின் வீரட்ட மேயவனே - சொற்கொடிய
141.
வன்புகலா நெஞ்சின் மருவும் ஒருதகைமைத்
தென்புகலூர் வாழ்மகா தேவனே - இன்பமறை
142.
அர்த்தமா நீக்கரிய வாதார மாகிநின்ற
வர்த்தமா நேச்சரத்து வாய்ந்தவனே - மித்தையுற்ற
143.
காமனதீ சங்கெடவே கண்பார்த் தருள்செய்த
ராமனதீ சம்பெறுநி ராமயனே - தோமுண்
144.
மயற்றூர் பறித்த மனத்தில் விளைந்த
பயற்றூர் திசையம் பரனே - இயற்றுஞ்சீர்
145.
ஆச்சிரமே வுஞ்செங்காட் டங்குடியி னங்கணப
தீச்சரம்வா ழுஞ்சந்த்ர சேகரனே - ஏச்சகல
146.
விண்மருவி னோனை விடநீக்க நல்லருள்செய்
வண்மருகல் மாணிக்க வண்ணனே - திண்மைகொண்ட
147.
மாத்தமங்கை யுள்ளம் மருவிப் பிரியாத
சாத்தமங்கைக் கங்கைச் சடாமுடியோய் - தூத்தகைய
148.
பாகைக்கா ரென்னும் பணிமொழியார் வாழ்த்தோவா
நாகைக்கா ரோணம் நயந்தோனே - ஓகையற
149.
விக்கல் வருங்கால் விடாய்தீர்த் துலகிடைநீ
சிக்கலெனுஞ் சிக்கல் திறலோனே - மிக்கமினார்
150.
வாளூர் தடங்கண் வயல்காட்டி யோங்குங்கீழ்
வேளூரிற் செங்கண் விடையோனே - நீளுவகைப்
151.
பாவூ ரிசையிற் பயன்சுவையிற் பாங்குடைய
தேவூர் வளர்தேவ தேவனே - பூவினிடை
152.
இக்கூடன் மைந்த வினிக்கூட லென்றுபள்ளி
முக்கூடன் மேவியமர் முன்னவனே - தக்கநெடுந்
153.
தேரூ ரணிவீதிச் சீரூர் மணிமாட
ஆரூரி லெங்கள் அருமருந்தே - நீரூர்ந்த
154.
காரூர் பொழிலுங் கனியீந் திளைப்பகற்றும்
ஆரூ ரரனெறிவே ளாண்மையே - ஏரார்ந்த
155.
மண்மண் டலிகர் மருவுமா ரூர்ப்பரவை
உண்மண் டலி
63
எம் உடைமையே - திண்மைக்
156.
களமர் மகிழக் கடைசியர் பாடும்
விளமர் கொளுமெம் விருப்பே - வளமை
157.
எருக்கரவீ ரஞ்சே ரெழில்வேணி கொண்டு
திருக்கரவீ ரஞ்சேர் சிறப்பே - உருக்க
158.
வருவேளூர் மாவெல்லா மாவேறுஞ் சோலைப்
பெருவேளூர் இன்பப் பெருக்கே - கருமை
159.
மிலையாலங் காட்டு மிடற்றாயென் றேத்தும்
தலையாலங் காட்டுத் தகவே - நிலைகொள்
160.
தடவாயில் வெண்மணிகள் சங்கங்க ளீனும்
குடவாயில் அன்பர் குறிப்பே - மடவாட்கோர்
161.
கூறை
64
யுவந்தளித்த கோவேயென் றன்பர்தொழச்
சேறை யுவந்திருந்த சிற்பரமே - வேறுபடாப்
162.
பாலூர் நிலவிற் பணிலங்கள் தண்கதிர்செய்
நாலூரில் அன்பர்பெறு நன்னயமே - மேலூரும்
163.
நோய்க்கரையுட் செய்யாத நோன்மையோர் சூழ்ந்தகடு
வாய்க்கரையுண் மேவுகின்ற வண்மையே - வாய்த்த
164.
பெரும்பூகந் தெங்கிற் பிறங்க வளங்கொள்ளும்
இரும்பூளை மேவி யிருந்தோய் - விரும்பும்
165.
விரதப் பெரும்பாழி விண்ணவர்க ளேத்தும்
அரதைப் பெரும்பாழி ஆர்ந்தோய் - சரதத்தால்
166.
ஏதும் அவணிவணென் றெண்ணா தவரிறைஞ்சி
ஓதும் அவளிவணல் லூருடையோய் - கோதகன்ற
167.
நீட்டுஞ் சுருதி நியமத்தோர்க் கின்னருளை
நீட்டும் பரிதி நியமத்தோய் - காட்டியநந்
168.
தேவனூ ரென்று திசைமுகன்மால் வாழ்த்துகின்ற
பூவனூர் மேவும் புகழுடையோய் - பூவலகாம்
169.
ஈங்கும்பா தாளமுத லெவ்வுலகு மெஞ்ஞான்றுந்
தாங்கும்பா தாளேச் சரத்தமர்ந்தோய் - ஓங்குபுத்தி
170.
மான்களரி லோட்டி மகிழ்வோ டிருந்தேத்தும்
வான்களரில் வாழு மறைமுடிபே - மேன்மைதரும்
171.
முற்றேமம் வாய்ந்த முனிவர் தினம்பரவும்
சிற்றேமம் வாய்ந்த செழுங்கதிரே - கற்றவர்கள்
172.
எங்குமுசாத் தான மிருங்கழக மன்றமுதல்
தங்குமுசாத் தானத் தனிமுதலே - பொங்குபவ
173.
வல்லலிடும் பாவநத்த மட்டொளிசெய் கின்றதிரு
மல்லலிடும் பாவனத்து மாட்சிமையே - தொல்லைப்
174.
படிக்குள் நோவாத பண்புடையோர் வாழ்த்தும்
கடிக்குளத் தன்பர் களிப்பே - கடிக்குளத்தின்
175.
வண்டலைக்கத் தேனலரின் வார்ந்தோர் தடமாக்கும்
தண்டலைக்குள் நீணெறிச்சிந் தாமணியே - கொண்டலென
176.
மன்கோட்டூர் சோலை வளர்கோட்டூர் தண்பழனத்
தென்கோட்டூர் தேவ சிகாமணியே - தென்கூட்டிப்
177.
போய்வண் டுறைதடமும் பூம்பொழிலுஞ் சூழ்ந்தமரர்
ஆய்வெண் டுமறைமாசி லாமணியே - தோய்வுண்ட
178.
கள்ளம்பூ தாதிநிலை கண்டுணர்வு கொண்டவர்சூழ்
கொள்ளம்பூ தூர்வான் குலமணியே - வெள்ளிடைவான்
179.
வாம்பே ரெயிற்சூழ்ந்த மாண்பாற் றிருநாமம்
ஆம்பே ரெயிலொப்பி லாமணியே - தாம்பேரா
180.
வீட்டிலன்ப ரானந்தம் மேவச் செயுங்கொள்ளிக்
காட்டி லமர்ந்தஎன்கண் காட்சியே - நீட்டுமொளி
181.
ஆங்கூ ரிலைவே லவனா தியர்சூழத்
தேங்கூரில் வாழ்தேவ சிங்கமே - ஓங்குமலை
182.
வல்லிக்கா தார மணிப்புயவென் றன்பர்தொழ
நெல்லிக்கா வாழ்மெய்ந் நியமமே - எல்அல்கண்
183.
சேட்டியத் தானே தெரிந்துசுரர் வந்தேத்து
நாட்டியத் தான்குடிவாழ் நல்லினமே - நாட்டுமொரு
184.
நூறாயி லன்பர்தமை நோக்கி யருள்செய்திருக்
காறாயின் மேலோர் கடைப்பிடியே - வீறாகும்
185.
இன்றாப்பூர் வந்தொட் டிருந்ததிவ்வூ ரென்னவுயர்
கன்றாப்பூர் பஞ்சாக் கரப்பொருளே - துன்றாசை
186.
வெய்ய வலிவலத்தை வீட்டியன்பர்க் கின்னருள்செய்
துய்ய வலிவலத்துச் சொன்முடிபே - நையுமன
187.
மைச்சினத்தை விட்டோர் மனத்திற் சுவைகொடுத்துக்
கைச்சினத்தி னுட்கரையாக் கற்கண்டே - நெற்சுமக்க
188.
ஆளிலையென் றாரூர னார்துதிக்கத் தந்தருளும்
கோளிலியின் அன்பர்குலங் கொள்ளுவப்பே - நீளுலகம்
189.
காய்மூர்க்க ரேனுங் கருதிற் கதிகொடுக்கும்
வாய்ழூர்க் கமைந்த மறைக்கொழுந்தே - நேயமுணத்
190.
தேடெலியை மூவுலகுந் தேர்ந்துதொழச் செய்தருளும்
ஈடின்மறைக் காட்டிலென்றன் எய்ப்பில்வைப்பே - நாடுமெனை
191.
நின்னகத்தி யான்பள்ளி நேர்ந்தேனென் றாட்கொண்ட
தென்னகத்தி யான்பள்ளிச் செம்பொன்னே - தொன்னெறியோர்
192.
நாடிக் குழக நலமருளென் றேத்துகின்ற
கோடிக் குழகரருட் கோலமே - நீடுலகில்
193.
நாட்டும் புகழீழ நாட்டிற் பவவிருளை
வாட்டுந் திருக்கோண மாமலையாய் - வேட்டுலகின்
194.
மூதீச் சரமென்று முன்னோர் வணங்குதிருக்
கேதீச் சரத்திற் கிளர்கின்றோய் - ஓதுகின்றோர்
195.
பாலவாய் நிற்கும் பரையோடு வாழ்மதுரை
ஆலவாய்ச் சொக்கழகா னந்தமே - சீலர்தமைக்
196.
காப்பனூ ரில்லாக் கருணையா லென்றுபுகும்
ஆப்பனூர் மேவுசதா னந்தமே - மாப்புலவர்
197.
ஞானபரங் குன்றமென நண்ணிமகிழ் கூர்ந்தேத்த
வானபரங் குன்றலின்பா னந்தமே - வானவர்கோன்
198.
தேமே டகத்தனொடு சீதரனும் வாழ்த்துஞ்சீ
ராமே டகத்தறிவா னந்தமே - பூமீதில்
199.
நற்றவருங் கற்ற நவசித்த ரும்வாழ்த்தி
உற்றகொடுங் குன்றத்தெம் ஊதியமே - முற்றுகதிர்
200.
இத்தூர மன்றி யினித்தூர மில்லையெனப்
புத்தூர் வருமடியார் பூரிப்பே - சித்தாய்ந்து
201.
நாமீச ராகும் நலந்தருமென் றும்பர்தொழும்
ராமீசம்
67
வாழ்சீவ ரத்தினமே - பூமீது
202.
நீடானை சூழும் நிலமன்னர் வாழ்த்துதிரு
வாடானை மேவுகரு ணாகரமே - சேடான
203.
வானப்பே ராற்றை மதியை முடிசூடுங்
கானப்பேர் ஆனந்தக் காளையே - மோனருளே
204.
பூவணமும் பூமணமும் போலவ மர்ந்ததிருப்
பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே - தீவணத்தில்
205.
கண்சுழிய லென்று கருணையளித் தென்னுளஞ்சேர்
தண்சுழியல் வாழ்சீவ சாக்ஷியே - பண்செழிப்பக்
206.
கற்றாலங் குண்மைக் கதிதருமென் றற்றவர்சூழ்
குற்றாலத் தன்பர் குதுகலிப்பே - பொற்றாம
207.
நல்வேலி சூழ்ந்து நயன்பெறுமொண் செஞ்சாலி
நெல்வேலி உண்மை நிலயமே - வல்வேலை
208.
நஞ்சைக் களத்துவைத்த நாதவெனத் தொண்டர்தொழ
அஞ்சைக் களஞ்சேர் அருவுருவே - நெஞ்சடக்கி
209.
ஆன்று நிறைந்தோர்க் கருளளிக்கும் புக்கொளியூர்த்
தோன்றுமவி நாசிச் சுயம்புவே - சான்றவர்கள்
210.
தம்முருகன் பூணுட் டலம்போல வாழ்கின்ற
எம்முருகன் பூண்டி இருநிதியே - செம்மையுடன்
211.
அங்குன்றா தோங்கு மணிகொள் கொடிமாடச்
செங்குன்றூர் வாழுஞ்சஞ் சீவியே - தங்குமன
212.
வஞ்சமாக் கூடல் வரையா தவர்சூழும்
வெஞ்சமாக் கூடல் விரிசுடரே - துஞ்சலெனும்
213.
இன்ன லகற்ற இலங்குபவா னிக்கூடல்
என்னு நணாவினிடை இன்னிசையே - துன்னியருள்
214.
வேண்டிக் கொடுமுடியா மேன்மைபெறு மாதவர்சூழ்
பாண்டிக் கொடுமுடியிற் பண்மயமே - தீண்டரிய
215.
வெங்கருவூர் வஞ்ச வினைதீர்த் தவர்சூழ்ந்த
நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே - தங்களற்றின்
216.
தீங்கார் பிறதெய்வத் தீங்குழியில்
70
வீழ்ந்தவரைத்
தாங்கா வரத்துறையில் தாணுவே - பூங்குழலார்
217.
வீங்கானை மாடஞ்சேர் விண்ணென் றகல்கடந்தைத்
தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே - நீங்காது
218.
நீடலை யாற்றூர் நிழன்மணிக்குன் றோங்குதிருக்
கூடலை யாற்றூர்க் குணநிதியே - நாடியவான்
219.
அம்புலியூர் சோலை யணிவயல்க ளோங்கெருக்கத்
தம்புலியூர் வேத சமரசமே - நம்புவிடை
220.
ஆங்குந் தினையூர்ந் தருளாயென் றன்பர்தொழு
தோங்குந் தினையூர் உமாபதியே - தீங்குறுமொன்
221.
னார்புரத்தை
72
வெண்ணகைத்தீ யாலழித்தா யென்றுதொழச்
சோபுரத்தின்
73
வாழ்ஞான தீவகமே - வார்கெடிலச்
222.
சென்னதிகை யோங்கித்
74
திலதவதி யார்பரவும்
மன்னதிகை வீரட்ட மாதவமே - பன்னரிதாம்
223.
ஆவலூ ரெங்களுடை ஆரூர னாரூரா
நாவலூர் ஞானியருண் ஞாபகமே - தேவகமாம்
224.
மன்ற மமர்ந்த வளம்போற் றிகழ்ந்தமுது
குன்ற மமர்ந்தஅருட் கொள்கையே - அன்றகத்தின்
225.
நல்வெண்ணெ யுண்டொளித்த நாரணன்வந் தேத்துகின்ற
நெல்வெண்ணெய் மேவுசிவ நிட்டையே - சொல்வண்ணம்
226.
நாவலர் போற்றி நலம்பெறவே யோங்குதிருக்
கோவலூர் வீரட்டங் கொள்பரிசே - ஆவலர்மா
227.
தேவா இறைவா சிவனே யெனுமுழக்கம்
ஓவா அறையணிநல் லூருயர்வே - தாவாக்
228.
கடையாற்றி னன்பர்தமைக் கல்லாற்றி னீக்கும்
இடையாற்றின் வாழ்நல் இயல்பே - இடையாது
229.
சொல்லூரன் றன்னைத் தொழும்புகொளுஞ் சீர்வெண்ணெய்
நல்லூ ரருட்டுறையின் நற்பயனே - மல்லார்ந்து
230.
மாசுந் துறையூர் மகிபன்முதல் மூவருஞ்சீர்
பேசுந் துறையூர்ப் பிறைசூடீ - நேசமுற
231.
வேற்றா வடுகூ ரிதயத்தி னார்க்கென்றுந்
தோற்றா வடுகூர்ச் சுயஞ்சுடரே - ஆற்றமயல்
232.
காணிக் குழிவீழ் கடையர்க்குக் காண்பரிய
மாணிக் குழிவாழ் மகத்துவமே - மாணுற்ற
233.
பூப்பா திரிகொன்றை புன்னைமுதற் சூழ்ந்திலங்கும்
ஏர்ப்பா
75
திரிப்புலியூர் ஏந்தலே - சீர்ப்பொலியப்
234.
பண்டீச் சுரனிப் பதியே விழைந்ததெனும்
முண்டீச் சுரத்தின் முழுமுதலே - பெண்தகையார்
235.
ஏர்ப்பனங்காட் டூரென் றிருநிலத்தோர் வாழ்த்துகின்ற
சீர்ப்பனங்காட் டூர்மகிழ்நி க்ஷேபமே - சூர்ப்புடைத்த
236.
தாமாத்தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும்
ஆமாத்தூர் வாழ்மெய் அருட்பிழம்பே - யாமேத்தும்
237.
உண்ணா முலையாள் உமையோடு மேவுதிரு
அண்ணா மலைவாழ் அருட்சுடரே - கண்ணார்ந்த
238.
நாகம்ப ராந்தொண்ட நாட்டி லுயர்காஞ்சி
ஏகம்ப மேவும்பே ரின்பமே - ஆகுந்தென்
239.
காற்றளிவண் பூமணத்தைக் காட்டும் பொழிற்கச்சி
மேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே - நாற்றமலர்ப்
240.
பூந்தண் டளிவிரித்துப் புக்கிசைக்குஞ் சீரோண
காந்தன் றளிஅருட்ப்ர காசமே - சேர்ந்தவர்க்கே
241.
இங்கா பதஞ்சற்று மில்லா தவனேக
தங்கா பதஞ்சேர் தயாநிதியே - மங்காது
242.
மெச்சி நெறிக்கார்வ மேவிநின்றோர் சூழ்ந்ததிருக்
கச்சி நெறிக்காரைக் காட்டிறையே - முச்சகமும்
243.
ஆயுங் குரங்கணின்முட் டப்பெயர்கொண் டோங்குபுகழ்
ஏயுந் தலம்வா ழியன்மொழியே - தோயுமன
244.
யோகறலி
77
லாத்தவத்தோ ருன்ன விளங்குதிரு
மாகறலில் அன்பரபி மானமே - ஓகையிலா
245.
வீத்தூர
78
மாவோட மெய்த்தவர்கள் சூழ்ந்ததிரு
ஓத்தூரில் வேதாந்த உண்மையே - பூத்தவிசின்
246.
ஆர்த்தான் பனகத் தவனிந் திரன்புகழ்வன்
பார்த்தான் பனங்காட்டூர் பாக்கியமே - பார்த்துலகில்
247.
இல்ல மெனச்சென் றிரவா தவர்வாழும்
வல்லமகி ழன்பர் வசித்துவமே - சொல்லரிக்குக்
248.
காற்பேறு கச்சியின்முக் காற்பே றிவணென்னும்
மாற்பேற்றி னன்பர் மனோபலமே - ஏற்புடைவாய்
249.
ஊற லடியா ருறத்தொழுது மேவுதிரு
ஊற லழியா உவகையே - மாறுபடு
250.
தீது மிலம்பயங்கோட் டீரென் றடியர்புகழ்
ஓது மிலம்பயங்கோட் டூர்நலமே - தீதுடைய
251.
பொற்கோலம் ஆமெயிற்குப் போர்க்கோலம் கொண்டதிரு
விற்கோலம் மேவுபர மேட்டிமையே - சொற்போரில்
252.
ஓலங்காட் டும்பழைய னூர்நீலி வாதடக்கும்
ஆலங்காட் டிற்சூழ் அருள்மயமே - ஞாலம்சேர்
253.
மாசூர் அகற்றும் மதியுடையோர் சூழ்ந்ததிருப்
பாசூரில் உண்மைப் பரத்துவமே - தேசூரன்
254.
கண்பார்க்க வேண்டுமெனக் கண்டூன்று கோற்கொடுத்த
வெண்பாக்கத் தன்பர்பெறும் வீறாப்பே - பண்பார்க்கு
255.
நள்ளிப் பதியே நலந்தருமென் றன்பர்புகுங்
கள்ளிற் பதிநங் கடப்பாடே - எள்ளலுறுங்
256.
கோளத்தி நீக்குங் குணத்தோர்க் கருள்செய்திருக்
காளத்தி ஞானக் களஞ்சியமே - ஆள்அத்தா
257.
வெற்றியூ ரென்ன வினையேன் வினைதவிர்த்த
ஒற்றியூர் மேவியஎன் உள்ளன்பே - தெற்றிகளில்
258.
பொங்குமணிக் கால்கள் பொலஞ்செய்திரு வொற்றிநகர்
தங்குஞ் சிவபோக சாரமே - புங்கவர்கள்
259.
சேர்ந்துவலங் கொள்ளுந் திருவொற்றி யூர்க்கோயிற்
சார்ந்து மகிழ்அமுத சாரமே - தேர்ந்துலகர்
260.
போற்றுந் திருவொற்றிப் பூங்கோயிற் குட்பெரியோர்
சாற்றும் புகழ்வேத சாரமே - ஊற்றுறுமெய்
261.
அன்புமிகுந் தொண்டர்குழு ஆயும்வலி தாயத்தில்
இன்பமிகு ஞான இலக்கணமே - துன்பமற
262.
எல்லைவாயற் குள்மட்டும் ஏகில்வினை யேகுமெனும்
முல்லைவாயிற் குள்வைத்த முத்திவித்தே - மல்லல்பெறு
263.
வேற்காட்ட ரேத்துதிரு வேற்காட்டின் மேவியமுன்
நூற்காட் டுயர்வேத நுட்பமே - பாற்காட்டும்
264.
ஆர்த்திபெற்ற மாதுமயி லாய்ப்பூசித் தார்மயிலைக்
கீர்த்திபெற்ற நல்வேத கீதமே - கார்த்திரண்டு
265.
வாவுகின்ற சோலை வளர்வான்மி யூர்த்தலத்தில்
மேவுகின்ற ஞான விதரணமே - தூவிமயில்
266.
ஆடும் பொழிற்கச்சூ ராலக்கோ யிற்குளன்பர்
நீடுங் கனதூய நேயமே - ஈடில்லை
267.
என்னுந் திருத்தொண்ட ரேத்து மிடைச்சுரத்தின்
மன்னுஞ் சிவானந்த வண்ணமே - நன்னெறியோர்
268.
துன்னுநெறிக் கோர்துணையாந் தூயகழுக் குன்றினிடை
முன்னுமறி வானந்த மூர்த்தமே - துன்னுபொழில்
269.
அம்மதுரத் தேன்பொழியும் அச்சிறுபாக் கத்துலகர்
தம்மதநீக் குஞ்ஞான சம்மதமே - எம்மதமும்
270.
சார்ந்தால் வினைநீக்கித் தாங்குதிரு வக்கரையுள்
நேர்ந்தார் உபநிடத நிச்சயமே - தேர்ந்தவர்கள்
271.
தத்த மதுமதியாற் சாரும் அரசிலியூர்
உத்தமமெய்ஞ் ஞான ஒழுக்கமே - பத்தியுள்ளோர்
272.
எண்ணும் புகழ்கொள் இரும்பைமா காளத்து
நண்ணுஞ் சிவயோக நாட்டமே - மண்ணகத்துள்
273.
கோபலத்திற் காண்பரிய கோகரணங் கோயில்கொண்ட
மாபலத்து மாபலமா மாபலமே - தாபமிலாப்
274.
பாகியற்சொல் மங்கையொடும் பாங்கார் பருப்பதத்தில்
யோகியர்க ளேத்திடவாழ் ஒப்புரவே - போகிமுதல்
275.
பாடியுற்ற நீலப் பருப்பதத்தில் நல்லோர்கள்
தேடிவைத்த தெய்வத் திலகமே - நீடுபவம்
276.
தங்கா தவனேக தங்கா பதஞ்சேர்ந்த
நங்கா தலான நயப்புணர்வே - சிங்காது
8
277.
தண்ணிறைந்து நின்றவர்தாஞ் சார்திருக்கே தாரத்திற்
பண்ணிறைந்த கீதப் பனுவலே - எண்ணிறைந்த
278.
சான்றோர் வணங்குநொடித் தான்மலையில் வாழ்கின்ற
தேன்றோய் அமுதச் செழுஞ்சுவையே - வான்தோய்ந்த
279.
இந்திரரும் நாரணரும் எண்ணில் பிரமர்களும்
வந்திறைஞ்சும் வெள்ளி மலையானே - தந்திடுநல்
280.
தாய்க்குங் கிடையாத தண்ணருள்கொண் டன்பருளம்
வாய்க்குங் கயிலை மலையானே - தூய்க்குமரன்
281.
தந்தையே என்னருமைத் தந்தையே தாயேயென்
சிந்தையே கோயில்கொண்ட தீர்த்தனே - சந்தமிகும்
282.
எண்டோ ளுடையாய் எனையுடையாய் மார்பகத்தில்
வண்டோ லிடுங்கொன்றை மாலையாய் - தொண்டர்விழி
283.
உண்ணற் கெளியாய் உருத்திரன்மா லாதியர்தங்
கண்ணிற் கனவினிலுங் காண்பரியாய் - மண்ணுலகில்
284.
என்போன் றவர்க்கும் இருள்நீக்கி இன்புதவும்
பொன்போன்ற மேனிப் புராதனனே - மின்போன்ற
285.
செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கு மியாவருக்கும்
அஞ்சடையா வண்ணம் அளிப்போனே - விஞ்சுலகில்
286.
எல்லார்க்கு நல்லவனே எல்லாஞ்செய் வல்லவனே
எல்லார்க்கும் ஒன்றா யிருப்போனே - தொல்லூழி
287.
ஆர்ந்த சராசரங்க ளெல்லா மடிநிழலில்
சேர்ந்தொடுங்க மாநடனஞ் செய்வோனே - சார்ந்துலகில்
288.
எத்தேவர் மெய்த்தேவ ரென்றுரைக்கப் பட்டவர்கள்
அத்தேவர்க் கெல்லாமுன் னானோனே - சத்தான
289.
வெண்மைமுதல் ஐவணமு மேவிஐந்து தேவர்களாய்த்
திண்மைபெறும் ஐந்தொழிலுஞ் செய்வோனே - மண்முதலாம்
290.
ஐந்தா யிருசுடரா யான்மாவாய் நாதமுடன்
விந்தா கியெங்கும் விரிந்தோனே - அந்தணவெண்
291.
நீறுடையா யாறுடைய நீண்முடியாய் நேடரிய
வீறுடையாய் நின்றனக்கோர் விண்ணப்பம் - மாறுபட
292.
எள்ள லடியேன் எனக்குள் ஒளியாமல்
உள்ள படியே யுரைக்கின்றேன் - விள்ளுறுமியான்
293.
வன்சொ லுடன்அன்றி வள்ளலுன தன்பர்தமக்
கின்சொ லுடன்பணிந்தொன் றீந்ததிலை - புன்சொலெனும்
294.
பொய்யுரைக்க வென்றாற் புடையெழுவேன் அன்றியொரு
மெய்யுரைக்க வென்றும் விழைந்ததிலை - வையகத்தில்
295.
பொல்லா விரதத்தைப் போற்றியுவந் துண்பதல்லால்
கொல்லா விரதத்தைக் கொண்டதிலை - அல்லாதார்
296.
வன்புகழைக் கேட்க மனங்கொண்ட தல்லாமல்
நின்புகழைக் கேட்க நினைந்ததிலை - வன்புகொண்டே
297.
இன்னடிக்கு நுண்ணிடையார்க் கேவல்புரிந் தேனலதுன்
பொன்னடிக்குத் தொண்டு புரிந்ததிலை - பன்னுகின்ற
298.
செக்குற்ற எள்ளெனவே சிந்தைநசிந் தேனலது
முக்குற்றந் தன்னை முறித்ததிலை - துக்கமிகுந்
299.
தாவில் வலங்கொண்டு சஞ்சரித்தேன் அல்லதுநின்
கோவில்வலங் கொள்ளக் குறித்தநிலை - பூவுலகில்
300.
வன்னிதியோர் முன்கூப்பி வாழ்த்தினேன் அன்றியுன்றன்
சன்னிதியிற் கைகூப்பித் தாழ்ந்ததிலை - புன்னெறிசேர்
301.
மிண்டரொடு கூடி வியந்ததல்லா லையாநின்
தொண்ட ரொடுங்கூடிச் சூழ்ந்ததிலை - கண்டவரைக்
302.
கன்றுமுகங் கொண்டு கடுகடுத்துப் பார்ப்பதல்லால்
என்று முகமலர்ச்சி யேற்றதிலை - நன்றுபெறு
303.
நன்னெஞ்ச ருன்சீர் நவில வதுகேட்டுக்
கன்னெஞ்சைச் சற்றுங் கரைத்ததிலை - பின்னெஞ்சாப்
304.
பண்ர்மை கொண்டதமிழ்ப் பாமாலை யாற்றுதித்துக்
கண்ர்கொண் டுன்பாற் கனிந்ததிலை - தண்ர்போல்
305.
நெஞ்சம் உருகி நினைக்குமன்பர் போலெனைநீ
அஞ்சலென நின்றாள் அடுத்தநிலை - விஞ்சுலகர்
306.
மெய்யடிய னென்றுரைக்க வித்தகநின் பொன்னடிக்குப்
பொய்யடிமை வேடங்கள் பூண்டதுண்டு - நையமிகு
307.
மையல் வினைக்குவந்த மாதர் புணர்ச்சியெனும்
வெய்ய வினைக்குழியில் வீழ்ந்ததுண்டு - துய்யர்தமை
308.
என்னொன்று மில்லா தியல்பாகப் பின்னொன்று
முன்னொன்று மாக மொழிந்ததுண்டு - மன்னுகின்ற
309.
மானஞ் செயாது மனநொந் திரப்போர்க்குத்
தானஞ்செய் வாரைத் தடுத்ததுண்டு - ஈனமிலா
310.
வாரமுரை யாது வழக்கி னிடையோர
வார முரைத்தே மலைந்ததுண்டு - ஈரமிலா
311.
நெஞ்ச ருடன்கூடி நேசஞ்செய் தும்மடியே
தஞ்சமெனத் தாழாது தாழ்ந்ததுண்டு - எஞ்சலிலாத்
312.
தாயனையா யுன்றனது சந்நிதிநேர் வந்துமொரு
நேயமுமில் லாதொதி
82
போல் நின்றதுண்டு - தீயவினை
313.
மாளாக் கொடிய மனச்செல்வர் வாயிலிற்போய்க்
கேளாச் சிவநிந்தை கேட்டதுண்டு - மீளாத
314.
பொல்லாப் புலையரைப்போற் புண்ணியரை வன்மதத்தால்
சொல்லா வசையெல்லாஞ் சொன்னதுண்டு - நல்லோரைப்
315.
போற்றாது பொய்யுடம்பைப் போற்றிச் சிவபூசை
ஆற்றாது சோற்றுக் கலைந்ததுண்டு - தேற்றாமல்
316.
ஈபத்தா என்றிங் கிரப்போர் தமைக்கண்டு
கோபத்தால் நாய்போற் குரைத்ததுண்டு - பாபத்தால்
317.
சிந்தையொன்று வாக்கொன்று செய்கையொன்றாய்ப் போகவிட்டே
எந்தைநினை யேத்தா திருந்ததுண்டு - புந்தியிந்த
318.
சொல்லைக்கல் லென்றுநல்லோர் சொன்னபுத்தி கேளாமல்
எல்லைக்கல் லொத்தே யிருந்ததுண்டு - தொல்லைவினை
319.
ஆழ்த்தா மயவுலகி லற்ப மகிழ்ச்சியினால்
வாழ்த்தாம லுன்னை மறந்ததுண்டு - தாழ்த்தாமற்
320.
பூணா வெலும்பணியாய்ப் பூண்டோய்நின் பொன்வடிவங்
காணாது வீழ்நாள் கழித்ததுண்டு - மாணாத
321.
காடுபோன் ஞாலக் கடுநடையி லேயிருகான்
மாடுபோல் நின்றுழைத்து வாழ்ந்ததுண்டு - நாடகன்ற
322.
கள்ளிவா யோங்குபெருங் காமக் கடுங்காட்டிற்
கொள்ளிவாய்ப் பேய்போற் குதித்ததுண்டு - ஒள்ளியரால்
323.
எள்ளுண்ட மாயா இயல்புறுபுன் கல்வியெலாங்
கள்ளுண்ட பித்தனைப்போற் கற்றதுண்டு - நள்ளுலகில்
324.
சீராசை யெங்குஞ்சொற் சென்றிடவே வேண்டுமெனும்
பேராசைப் பேய்தான் பிடித்ததுண்டு - தீராவென்
325.
சாதகமோ தீவினையின் சாதனையோ நானறியேன்
பாதகமென் றாலெனக்குப் பாற்சோறு - தீதகன்ற
326.
தூய்மைநன்றா மென்கின்ற தொன்மையினார் வாய்க்கினிய
வாய்மையென்றால் என்னுடைய வாய்குமட்டுங் - காய்மைதரும்
327.
கற்கு நிகராங் கடுஞ்சொலன்றி நன்மதுரச்
சொற்கும் எனக்கும்வெகு தூரங்காண் - பொற்புமிக
328.
நண்ணியுனைப் போற்றுகின்ற நல்லோர்க் கினியசிவ
புண்ணியமென் றாலெனக்குப் போராட்டம் - அண்ணலுனை
329.
நாளுரையா தேத்துகின்ற நல்லோர்மேல் இல்லாத
கோளுரையென் றாலெனக்குக் கொண்டாட்டம் - நீளநினை
330.
நேசிக்கு நல்ல நெறியாஞ் சிவாகமநு‘ல்
வாசிக்க வென்றாலென் வாய்நோகுங் - காசிக்கு
331.
நீடிக்கி லானாலு நேர்ந்தறிவ தல்லதுவீண்
வேடிக்கை யென்றால் விடுவதிலை - நாடயலில்
332.
வீறா முனது விழாச்செயினும் அவ்விடந்தான்
ஆறா யிரங்காத மாங்கண்டாய் - மாறான
333.
போகமென்றா லுள்ளமிகப் பூரிக்கும் அன்றிசிவ
யோகமென்றா லென்னுடைய உண்ணடுங்கும் - சோகமுடன்
334.
துள்ளலொழிந் தென்னெஞ்சஞ் சோர்ந்தழியுங் காலத்திற்
கள்ளமென்றா லுள்ளே களித்தெழும்பும் - அள்ளனெறி
335.
செல்லென்றால் அன்றிச் சிவசிவா வென்றொருகால்
சொல்லென்றால் என்றனக்குத் துக்கம்வரும் - நல்லநெறி
336.
வாம்பலன்கொண் டோர்கள் மறந்தும் பெறாக்கொடிய
சோம்பலென்ப தென்னுடைய சொந்தங்காண் - ஏம்பலுடன்
337.
எற்றோ இரக்கமென்ப தென்றனைக்கண் டஞ்சியெனை
உற்றோ ரையுமுடன்விட் டோடுங்காண் - சற்றேனும்
338.
ஆக்கமே சேரா தறத்துரத்து கின்றவெறுந்
தூக்கமே யென்றனக்குச் சோபனங்காண் - ஊக்கமிகும்
339.
ஏறுடையாய் நீறணியா ஈனர்மனை யாயினும்வெண்
சோறுகிடைத் தாலதுவே சொர்க்கங்காண் - வீறுகின்ற
340.
வாழ்வுரைக்கு நல்ல மனத்தர்தமை யெஞ்ஞான்றுந்
தாழ்வுரைத்தல் என்னுடைய சாதகங்காண் - வேள்விசெயுந்
341.
தொண்டர் தமைத்துதியாத் துட்டரைப்போ லெப்பொழுதுஞ்
சண்டையென்ப தென்றனக்குத் தாய்தந்தை - கொண்டஎழு
342.
தாதாட ஓங்கித் தலையாட வஞ்சரொடு
வாதாட என்றாலென் வாய்துடிக்குங் - கோதாடச்
343.
சிந்தை திரிந்துழலுந் தீயரைப்போல் நற்றரும
நிந்தையென்ப தென்பழைய நேசங்காண் - முந்தநினை
344.
எண்ணென்றால் அன்றி யிடர்செய் திடுங்கொடிய
பெண்ணென்றால் தூக்கம் பிடியாது - பெண்களுடன்
345.
புல்லென்றால் தேகம் புளகிக்கும் அன்றிவிட்டு
நில்லென்றால் என்கண்ணி னீரரும்பும் - புல்லரென்ற
346.
பேர்க்கும்விருப் பெய்தாத பெண்பேய்கள் வெய்யசிறு
நீர்க்குழியே யான்குளிக்கு நீர்ப்பொய்கை - சீர்க்கரையின்
347.
ஏறாப்பெண் மாத ரிடைக்கு ளளிந்தென்றும்
ஆறாப்புண் ணுக்கே யடிமைநான் - தேறாத
348.
வெஞ்சலஞ்செய் மாயா விகாரத்தி னால்வரும்வீண்
சஞ்சலமெல்லா மெனது சம்பந்தம் - அஞ்செழுத்தை
349.
நேர்ந்தார்க் கருள்புரியு நின்னடியர் தாமேயுஞ்
சார்ந்தா லதுபெரிய சங்கட்டம் - ஆர்ந்திடுமான்
350.
காந்தும் விழிப்புலியைக் கண்டதுபோல் நல்லகுண
சாந்த மெனைக் கண்டால் தலைசாய்க்கும் - ஆந்தகையோர்
351.
சேர மனத்திற் செறிவித் திடும்புருட
தீரமெனைக் கண்டாற் சிரிக்குங்காண் - கோரமதைக்
352.
காணி லுலகிற் கருத்துடையோர் கொள்ளுகின்ற
நாண மெனைக்கண்டு நாணுங்காண் - ஏணுலகில்
353.
ஞானங் கொளாவெனது நாமமுரைத் தாலுமபி
மானம் பயங்கொண்டு மாய்ந்துவிடும் - ஆனவுன்றன்
354.
கேண்மைக் குலத்தொண்டர் கீர்த்தி பெறக்கொண்ட
ஆண்மைக்கு நானென்றா லாகாது - வாண்மைபெறும்
355.
ஐயநின்றாட் பூசிக்கு மன்பருள்ளத் தன்பிற்கும்
பொய்ய னெனக்கும் பொருத்தமிலை - வையகத்தோர்
356.
இல்லெனினுஞ் சும்மாநீ யீகின்றே னென்றொருசொல்
சொல்லெனினுஞ் சொல்லத் துணிவுகொளேன் - நல்லையெமக்
357.
கீயென்பா ரன்றியன்னை யென்பயத்தா னின்சோற்றில்
ஈயென்ப தற்கு மிசையாள்காண் - ஈயென்பார்க்
358.
கெண்ணுஞ் சிலர்மண் ணிடுவா ரெனக்கந்த
மண்ணுங் கொடுக்கமனம் வாராது - அண்ணுறுமென்
359.
இல்லை யடைந்தே யிரப்பவருக் கெப்போதும்
இல்லையென்ப தென்வாய்க் கியல்புகாண் - தொல்லுலகை
360.
ஆண்டாலு மன்றி அயலார்புன் கீரைமணிப்
பூண்டாலு மென்கண் பொறுக்காது - நீண்டஎழு
361.
தீப முறுவோர் திசையோர்மற் றியாவர்க்குங்
கோப மதுநான் கொடுக்கிலுண்டு - ஆபத்தில்
362.
வீசங் கொடுத்தெட்டு வீச மெனப்பிறரை
மோசஞ் செயநான் முதற்பாதம் - பாசமுளோர்
363.
கைக்குடைய வேயெழுதிக் கட்டிவைத்த இவ்வுலகப்
பொய்க்கதையே யான்படிக்கும் புத்தகங்கள் - மெய்ப்படுநின்
364.
மந்திரத்தை உச்சரியா வாயுடையேன் என்போலத்
தந்திரத்தில் கைதேர்ந் தவரில்லை - எந்தைஇனி
365.
ஏதென் றுரைப்பே னிருங்கடல்சூழ் வையகத்தில்
சூதென்ப தெல்லாமென் சுற்றங்காண் - ஓதுகின்ற
366.
நஞ்சமெலாங் கூட்டி நவின்றிடினும் ஒவ்வாத
வஞ்சமெலா மென்கை வசங்கண்டாய் - அஞ்சவரும்
367.
வீணவமாம் வஞ்ச வினைக்குமுத லாகிநின்ற
ஆணவமே என்காணி ஆட்சியதாம் - மாணிறைந்த
368.
நல்லறிவே என்னைநெடு நாட்பகைத்த தன்றிமற்றைப்
புல்லறிவே என்னுட் பொருள்கண்டாய் - சொல்லவொணா
369.
வேடருக்குங் கிட்டாத வெங்குணத்தா லிங்குழலும்
மூடருக்குள் யானே முதல்வன்காண் - வீடடுத்த
370.
மேதையர்கள் வேண்டா விலங்காய்த் திரிகின்ற
பேதையென்ப தென்னுரிமைப் பேர்கண்டாய் - பேதமுற
371.
ஓதுவதென் பற்பலவாய் உற்றதவத் தோர்நீத்த
தீதுகளெல் லாமெனது செல்வங்காண் - ஆதலினால்
372.
பேயினையொத் திவ்வுலகில் பித்தாகி நின்றவிந்த
நாயினைநீ ஆண்டிடுதல் நன்கன்றே - ஆயினுமுன்
373.
மண்ணா ருயிர்களுக்கும் வானவர்க்குந் தானிரங்கி
உண்ணாக் கொடுவிடமும் உண்டனையே - எண்ணாமல்
374.
வேய்த்தவள வெற்பெடுத்த வெய்யஅரக் கன்தனக்கும்
வாய்த்தவர மெல்லாம் வழங்கினையே - சாய்த்தமன
375.
வீம்புடைய வன்முனிவர் வேள்விசெய்து விட்டகொடும்
பாம்பையெல் லாந்தோளிற் பரித்தனையே - நாம்பெரியர்
376.
எஞ்சேமென் றாணவத்தா லேற்ற இருவரையும்
அஞ்சேலென் றாட்கொண் டருளினையே - துஞ்சுபன்றித்
377.
தோயாக் குருளைகளின் துன்பம் பொறாதன்று
தாயாய் முலைப்பாலுந் தந்தனையே - வாயிசைக்குப்
378.
பாண்டியன்முன் சொல்லிவந்த பாணன் பொருட்டடிமை
வேண்டி விறகெடுத்து விற்றனையே - ஆண்டொருநாள்
379.
வாய்முடியாத் துன்புகொண்ட வந்திக்கோ ராளாகித்
தூய்முடிமேல் மண்ணுஞ் சுமந்தனையே - ஆய்துயர
380.
மாவகஞ்சேர் மாணிக்க வாசகருக் காய்க்குதிரைச்
சேவகன்போல் வீதிதனில் சென்றனையே - மாவிசயன்
381.
வில்லடிக்கு நெஞ்சம் விரும்பியதல் லால்எறிந்த
கல்லடிக்கும் உள்ளங் களித்தனையே - மல்லலுறும்
382.
வில்வக் கிளையுதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே - சொல்லகலின்
383.
நீளுகின்ற நெய்யருந்த நேரெலியை மூவுலகும்
ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே - கோளகல
384.
வாய்ச்சங்கு நூலிழைத்த வாய்ச்சிலம்பி தன்னைஉயர்
கோச்செங்கட் சோழனெனக் கூட்டினையே - ஏச்சறுநல்
385.
ஆறடுத்த
83
வாகீசர்க் காம்பசியைக் கண்டுகட்டுச்
சோறெடுத்துப் பின்னே சுமந்தனையே - கூறுகின்ற
386.
தொன்மைபெருஞ் சுந்தரர்க்குத் தோழனென்று பெண்பரவை
நன்மனைக்குத் தூது நடந்தனையே - நன்மைபெற
387.
இற்றென்ற இற்றென்னா எத்தனையோ பேர்கள்செய்த
குற்றங் குணமாகக் கொண்டனையே - பற்றுலகில்
388.
அன்புடைய தாயர்களோ ராயிரம்பே ரானாலும்
அன்புடையாய் நின்னைப்போ லாவாரோ - இன்பமுடன்
389.
ஈண்டவரும் தந்தையர்கள் எண்ணிலரே ஆயினுமென்
ஆண்டவனே நின்னைப்போ லாவாரோ - பூண்டகைகொள்
390.
ஏணுடைய நின்னையன்றி எந்தை பிரானேஉன்
ஆணைஎனக் குற்றதுணை யாருமில்லை - நாணமுளன்
391.
ஆனேன் பிழைக ளனைத்தினையு மையாநீ
தானே பொறுக்கத் தகுங்கண்டாய் - மேல்நோற்ற
392.
மாற்றனுக்கு மெட்டா மலர்க்கழலோய் நீயென்னைக்
கூற்றனுக்குக் காட்டிக் கொடுக்கற்க - பாற்றவள
393.
நந்தக் கடற்புவியில் நானின்னும் வன்பிறவிப்
பந்தக் கடலழுந்தப் பண்ணற்க - முந்தைநெறி
394.
நின்றேயுன் பொற்றாள் நினையாதார் பாழ்மனையில்
சென்றே உடலோம்பச் செய்யற்க - நன்றேநின்
395.
றோங்கு நெறியோர் உளத்தமர்ந்தோய் என்றன்னைத்
தீங்கு நெறியில் செலுத்தற்க - வீங்கடங்கி
396.
வாழி யெனத்தான் வழுத்தினுமென் சொற்கடங்கா
ஏழை மனத்தா லிளைக்கின்றேன் - வாழுமரக்
397.
கோடேறும் பொல்லாக் குரங்கெனவே பொய்யுலகக்
காடேறு நெஞ்சாற் கலங்குகின்றேன் - பாடேறும்
398.
உள்ளறியா மாயையெனு முட்பகையார் காமமெனுங்
கள்ளறியா துண்டு கவல்கின்றேன் - தெள்ளுறுமென்
399.
கண்ணனையாய் நின்தாள் கமலங் களைவழுத்தா
மண்ணனையார் பாற்போய் மயங்குகின்றேன் - திண்ணமிலாக்
400.
காதரவாந் துன்பக் கவலைக் கடல்வீழ்ந்தே
ஆதரவொன் றின்றி அலைகின்றேன் - ஓதுமறை
401.
ஆத்த ரெனுமுன் அடியார் தமைக்கண்டு
நாத்திகஞ்சொல் வார்க்கு நடுங்குகின்றேன் - பாத்துண்டே
402.
உய்வ தறியா உளத்தினே னுய்யும்வகை
செய்வ தறியேன் திகைக்கின்றேன் - சைவநெறி
403.
உண்ணிரம்பு நின்கருணை உண்டோ இலையோஎன்
றெண்ணியெண்ணி உள்ளம் இளைக்கின்றேன் - மண்ணினிடைக்
404.
கொன்செய்கை கொண்டகொடுங் கூற்றன் குறுகிலதற்
கென்செய்வோ மென்றெண்ணி எய்க்கின்றேன் - முன்செய்வினை
405.
ஆமறையா நோயா லகமெலிவுற் றையோநான்
தாமரையி னீர்போல் தயங்குகின்றேன் - தாமமுடி
406.
வள்ளல் அருள்கொடுக்க வந்திலனே இன்னுமென
உள்ளமது நீரா யுருகுகின்றேன் - எள்ளலுறு
407.
மாலைபாய்ந் தின்னுமென்ன வந்திடுமோ என்றுநெஞ்சம்
ஆலைபாய்ந் துள்ளம் அழிகின்றேன் - ஞாலமிசைக்
408.
கோட்பார வாழ்க்கைக் கொடுஞ்சிறையி னின்றென்னை
மீட்பா ரிலாது விழிக்கின்றேன் - மீட்பாகும்
409.
ஆற்றி லொருகாலும் அடங்காச் சமுசாரச்
சேற்றிலொரு காலும்வைத்துத் தேய்கின்றேன் - தோற்றுமயற்
410.
பாகமுறு வாழ்க்கையெனும் பாலைவனத் துன்னருள்நீர்த்
தாகமது கொண்டே தவிக்கின்றேன் - மோகமதில்
411.
போய்ப்படுமோர் பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின்
வாய்ப்படுமோர் தேரையைப்போல் வாடுகின்றேன் - மாய்ப்பவரு
412.
மீன்போலு மாதர் விழியால் வலைப்பட்ட
மான்போலுஞ் சோர்ந்து மடங்குகின்றேன் - கான்போல
413.
வீற்று முலக விகாரப் பிரளயத்தில்
தோற்றுஞ் சுழியுட் சுழல்கின்றேன் - ஆற்றவுநான்
414.
இப்பாரில் உன்மேலன் பில்லெனினும் அன்பனென
ஒப்பாரி யேனும் உடையேன்காண் - தப்பாய்ந்த
415.
மட்டுவிடேன் உன்தாள் மறக்கினும்வெண்ணீற்றுநெறி
விட்டுவிடேன் என்றனைக்கை விட்டுவிடேல் - துட்டனென
416.
மாலுந் திசைமுகனும் வானவரும் வந்துதடுத்
தாலுஞ் சிறியேனைத் தள்ளிவிடேல்- சாலுலக
417.
வாதனைகொண் டோனென்று மற்றெவரா னாலும்வந்து
போதனைசெய் தாலுமெனைப் போக்கிவிடேல் - நீதயவு
418.
சூழ்ந்திடுக என்னையுநின் தொண்டருடன் சேர்த்தருள்க
வாழ்ந்திடுக நின்தாள் மலர்.
47. இது முதல் 64 கண்ணிகள் சோழ நாட்டில் காவிரி வடகரைத்தலங்கள்.
420 48. காலில்பாய் - சேஷசயநம். தொ. வே.
49. காழ் - இல் - நெஞ்சம் என்று பிரித்துப் பொருள்கொள்க. தொ.வே.
421 50. வானொளிப் புற்று‘ர், வாழ்கொளி புத்தூரென மருவியது தொ.வே.2.
51. ஹம்சன், அஞ்சன் எனத் திரிந்தது. அன்னத்தை வாகனமாக உடைய பிரமன் எனப் பொருள்.தொ.வே.
422 52. குரங்காடு - வடகுரங்காடுதுறை. குரங்காட்டின் என நின்றது.வேற்றுமைச்சந்தியாகலான்.தொ.வே.
53. பொன் - இலக்குமி, தொ.வே.
423 54. தே என்பது ஈண்டு விகுதி குன்றிய முதனிலைத் தொழிற்பெயர். தொ.வே.
55. கோலத்துறை என்பது கோலந்துறை என விகாரமாயிற்று. தொ.வே.
424 56. அன்பிலாந்துறை யென்னுமோர் திருப்பதி. தொ.வே.
57. 65 முதல் 191 வரை 127 கண்ணிகள் சோழநாட்டில் காவிரி தென்கரைத் தலங்கள்.
425 58. வேதிகுடி என்பது வேதிக்குடியென விரித்தல் விகாரமாயிற்று; தொ.வே.
59. தேமாமலர் - சிறந்த கற்பகமலர். தொ.வே.
426 60. கடவூர் - கடையூரென மரீஇயது. தொ.வே.
61. அரிசொன்னதிக்கரை, அரிசிற்கரை யென மரீஇயது: தொ.வே.
427 62. சீயத்தை என்பது செய்யுள் விகாரத்தாற் குறுக்கும் வழி குறுக்கப்பட்டு சியத்தையெனநின்றது: தொ.வே.
63. மண்டளி என்பது மண்டலி என ளகர லகர ஒற்றுமைத் திரிபு. தொ.வே.
428 64. மடவாட் கோர் கூற்றை யெனற்பாலது கூறையென இரண்டாவதன் முடிபேற்று நின்றது.தொ.வே.
65. 192, 193-ஆம் கண்ணிகள் ஈழநாட்டுத் தலங்கள்
429 66. 194 முதல் 206 வரை 13 கண்ணிகள் பாண்டி நாட்டுத் தலங்கள்.
67. தொழும் ராமீசம் என்பது வடநூன் முடிபு. தொ.வே. 1. வடசொன் முடிபில் வந்தது க்ஷ 2.
430 68. இஃது மலைநாட்டுத் தலம்.
69. 208 முதல் 214 வரை 7 கண்ணிகள் கொங்கு நாட்டுத் தலங்கள்.
431 70. தீக்குழி என்பது தீங்குழி யென்றாயது: தொ.வே.
71. 215 முதல் 236 வரை 22 கண்ணிகள் நடு நாட்டுத்தலங்கள்
432 72. ஆசிடை யெதுகை: தொ.வே.
73. செந்தொடை: தொ.வே.
433 74. ஓங்கி - பரவெனும் வேறு சினை வினைக் குறைகள் மன்னென்னு முதல் வினையோடுமுடிந்தன: தொ.வே.
75. ஆசிடை யெதுகை. தொ.வே.
434 76. 237 முதல் 271 வரை 35 கண்ணிகள் தொண்டநாட்டுத்தலங்கள்.
77. யோகம் என்பது யோகென விகாரமாயிற்று: தொ.வே.
435 78. வீ - மரணம். தொ.வே.
79. இது துளுநாட்டுத்தலம்
436 80. 273 முதல் 279 வரை 7 கண்ணிகள் வடநாட்டுத்தலங்கள்
81. சிங்குதல் - குறைதல், தொ.வே.
437 82. உதி - ஒதியென மரீஇயது. தொ.வே.
83. ஆறு - வழி. தொ.வே.
விண்ணப்பக் கலிவெண்பா // விண்ணப்பக் கலிவெண்பா
No audios found!
Oct,12/2014: please check back again.