திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
செளந்தர மாலை
seḷantara mālai
அபராத மன்னிப்பு மாலை
aparāta maṉṉippu mālai
நான்காம் திருமுறை / Fourth Thirumurai

007. அதிசய மாலை
atisaya mālai

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அக்கோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
    அயன்முதலோர் நெடுங்காலம் மயன்முதல்நீத் திருந்து
    மிக்கோல மிடவும்அவர்க் கருளாமல் இருளால்
    மிகமருண்டு மதியிலியாய் வினைவிரிய விரித்து
    இக்கோலத் துடனிருந்தேன் அன்பறியேன் சிறியேன்
    எனைக்கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும்
    தக்கோன்என் றுலகிசைப்பத் தன்வணம்ஒன் றளித்தான்
    தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
  • 2. அச்சேஈ ததிசயம்ஈ ததிசயம்ஈ புகல்வேன்
    அரிமுதலோர் நெடுங்காலம் புரிமுதல்நீத் திருந்து
    நச்சோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்
    நாள்கழித்துக் கோள்கொழிக்கும் நடைநாயிற் கடையேன்
    எச்சோடும் இழிவினுக்கொள் றில்லேன்நான் பொல்லேன்
    எனைக்கருதி யானிருக்கும் இடத்திலெழுந் தருளித்
    தர்சோதி வணப்பொருள்ஒன் றெனக்களித்துக் களித்தான்
    தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
  • 3. அத்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
    அந்தணரெல் லாரும்மறை மந்தணமே புகன்று
    ஒத்தோல மிடவும்அவர்க் கொருசிறிதும் அருளான்
    ஓதியனையேன் விதியறியேன்ஒருங்கேன்வன் குரங்கேன்
    இத்தோட மிகவுடையேன் கடைநாய்க்குங் கடையேன்
    எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி நடந்து
    சத்தோட முறஎனக்கும் சித்தியொன்று கொடுத்தான்
    தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
  • 4. அந்தேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
    அறிவுடையார் ஐம்புலனும் செறிவுடையார் ஆகி
    வந்தோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்
    மனஞ்சென்ற வழியெல்லாந் தினஞ்சென்ற மதியேன்
    எந்தேஎன் றுலகியம்ப விழிவழியே உழல்வேன்
    எனைக்கருதி எளியேன்நான் இருக்குமிடத் தடைந்து
    சந்தோட முறஎனக்கும் தன்வணம்ஒன் றளித்தான்
    தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
  • 5. அப்பாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
    அருந்தவர்கள் விரும்பிமிக வருந்திஉளம் முயன்று
    இப்பாரில் இருந்திடவும் அவர்க்கருளான் மருளால்
    இவ்வுலக நடைவிழைந்து வெவ்வினையே புரிந்து
    எப்பாலும் இழிந்துமனத் திச்சைபுரி கின்றேன்
    எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி அடைந்து
    தப்பாத ஒளிவண்ணந் தந்தென்னை அளித்தான்
    தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
  • 6. அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
    அன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி
    எம்மாயென் றேத்திடவும் அவர்க்கருளான் மருளால்
    இதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே
    மைம்மாலிற் களிசிறந்து வல்வினையே புரியும்
    வங்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ் தெனக்கும்
    தம்மான முறவியந்து சம்மான மளித்தான்
    தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
  • 7. ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
    அடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி
    ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கருளான் மாயை
    உலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று
    தீவாய நரகினிடை விழக்கடவேன் எனைத்தான்
    சிவயாநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச்
    சாவாத வரங்கொடுத்துத் தனக்கடிமை பணித்தான்
    தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
  • 8. அண்ணஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
    அறங்கரைந்த நாவினர்கள் அகங்கரைந்து கரைந்து
    கண்ணர நீர்பெருக்கி வருந்தவும்அங் கருளான்
    கடைநாயிற் கடையேன்மெய்க் கதியைஒரு சிறிதும்
    எண்ணாத கொடும்பாவிப் புலைமனத்துச் சிறியேன்
    எனைக்கருதி வலியவும்நான் இருக்குமிடத் தடைந்து
    தண்ணார்வெண் மதியமுதம் உணவொன்று கொடுத்தான்
    தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
  • 9. ஐயாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
    அருமைஅறிந் தருள்விரும்பி உரிமைபல இயற்றிப்
    பொய்யாத நிலைநின்ற புண்ணியர்கள் இருக்கப்
    புலைமனத்துச் சிறியேன்ஓர் புல்லுநிகர் இல்லேன்
    செய்யாத சிறுதொழிலே செய்துழலுங் கடையேன்
    செருக்குடையேன் எனைத்தனது திருவுளத்தில் அடைத்தே
    சையாதி அந்தநடுக் காட்டிஒன்று கொடுத்தான்
    தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
  • 10. அன்னோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
    அருளருமை அறிந்தவர்கள் அருளமுதம் விரும்பி
    என்னோஇங் கருளாமை என்றுகவன் றிருப்ப
    யாதுமொரு நன்றியிலேன் தீதுநெறி நடப்பேன்
    முன்னோபின் னும்அறியா மூடமனப் புலையேன்
    முழுக்கொடியேன் எனைக்கருதி முன்னர்எழுந் தருளித்
    தன்னோடும் இணைந்தவண்ணம் ஒன்றெனக்குக் கொடுத்தான்
    தனித்தசிவ காமவல்லிக் கினிந்தநடத் தவனே.
  • 11. ஐயோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
    அருவினைகள் அணுகாமல் அறநெறியே நடந்து
    மெய்யோதும் அறிஞரெலாம் விரும்பியிருந்திடவும்
    வெய்யவினைக் கடல்குளித்து விழற்கிறைத்துக் களித்துப்
    பொய்ஓதிப் புலைபெருக்கி நிலைசுருக்கி உழலும்
    புரைமனத்தேன் எனைக்கருதிப் புகுந்தருளிக் கருணைச்
    சையோக முறஎனக்கும் வலிந்தொன்று கொடுத்தான்
    தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
  • 12. எற்றேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
    இச்சையெலாம் விடுத்துவனத் திடத்தும்மலை யிடத்தும்
    உற்றேமெய்த் தவம்புரிவார் உன்னிவிழித் திருப்ப
    உலகவிட யங்களையே விலகவிட மாட்டேன்
    கற்றேதும் அறியகிலேன் கடையரினுங் கடையேன்
    கருணையிலாக் கல்மனத்துக் கள்வன்எனைக் கருதிச்
    சற்றேயும் அன்றுமிகப் பெரிதெனக்கிங் களித்தான்
    தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
  • 13. என்னேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
    இரவுபகல் அறியாமல் இருந்தஇடத் திருந்து
    முன்னேமெய்த் தவம்புரிந்தார் இன்னேயும் இருப்ப
    மூடர்களில் தலைநின்ற வேடமனக் கொடியேன்
    பொன்னேயம் மிகப்புரிந்த புலைக்கடையேன் இழிந்த
    புழுவினும்இங் கிழிந்திழிந்து புகுந்தஎனைக் கருதித்
    தன்னேய முறஎனக்கும் ஒன்றளித்துக் களித்தான்
    தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
  • 14. ஓகோஈ ததிசயம்ஈ ததிசயம்என் னுரைப்பேன்
    உள்ளபடி உள்ளஒன்றை உள்ளமுற விரும்பிப்
    பாகோமுப் பழரசமோ எனருசிக்கப் பாடிப்
    பத்திசெய்வார் இருக்கவும்ஓர் பத்தியும்இல் லாதே
    கோகோஎன் றுலகுரைப்பத் திரிகின்ற கொடியேன்
    குற்றமன்றிக் குணமறியாப் பெத்தன்எனைக் கருதித்
    தாகோத ரங்குளிர்ந்த தன்மைஒன்று கொடுத்தான்
    தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.

அதிசய மாலை // அதிசய மாலை