திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பொன்வடிவப் பேறு
poṉvaṭivap pēṟu
சற்குருமணி மாலை
saṟkurumaṇi mālai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

097. நடராஜபதி மாலை
naṭarājapati mālai

    பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
    சுகாதீத வெளிநடுவிலே
    அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
    அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
    பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
    பொற்பொடுவி ளங்கிஓங்கப்
    புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
    பூரணா காரமாகித்
    தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
    சிறப்பமுதல் அந்தம்இன்றித்
    திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
    தெளிந்திட வயங்குசுடரே
    சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
    சுந்தரிக் கினியதுணையே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
  • 2. என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
    இதயத்தி லேதயவிலே
    என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
    என்இயற் குணம்அதனிலே
    இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
    என்செவிப் புலன்இசையிலே
    என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
    என்அனு பவந்தன்னிலே
    தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
    தானே கலந்துமுழுதும்
    தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
    ததும்பிநிறை கின்றஅமுதே
    துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
    சுகமே சுகாதீதமே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
  • 3. உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம்
    உள்ளனஎ லாங்கலந்தே
    ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும்
    உதயாத்த மானம்இன்றி
    இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய்
    ஏகமாய் ஏகபோக
    இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே
    இலங்நிறை கின்றசுடரே
    கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம்
    ககன்எலாம் கண்டபரமே
    காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன்
    கண்காண வந்தபொருளே
    தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த்
    துணையாய் விளங்கும்அறிவே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
  • 4. மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
    மேன்மேற் கலந்துபொங்க
    விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
    விளங்கஅறி வறிவதாகி
    உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
    துவட்டாதுள் ஊறிஊறி
    ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
    உள்ளபடி உள்ளஅமுதே
    கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
    கண்ணே கலாந்தநடுவே
    கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
    கணிப்பருங் கருணைநிறைவே
    துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட்
    சுகபோக யோகஉருவே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
  • 5. எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே
    இடையிலே கடையிலேமேல்
    ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்
    டெய்துவடி வந்தன்னிலே
    கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே
    கருவிலே தன்மைதனிலே
    கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக்
    கலந்தோங்கு கின்றபொருளே
    தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச்
    சேர்ந்தனு பவித்தசுகமே
    சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத்
    திருமாளி கைத்தீபமே
    துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே
    சுதந்தரித் தொளிசெய்ஒளியே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
  • 6. அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே
    அம்மண்ட லந்தன்னிலே
    அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக்
    கானவடி வாதிதனிலே
    விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட
    விளக்கும்அவை அவையாகியே
    மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு
    மெய்ந்நிலையும் ஆனபொருளே
    தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத்
    தலத்திலுற வைத்தஅரசே
    சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம்
    தானாய்இ ருந்தபரமே
    தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச்
    சுகமும்ஒன் றானசிவமே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
  • 7. நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற
    நிலையிலே நுண்மைதனிலே
    நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே
    நெகிழிலே தண்மைதனிலே
    ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும்
    ஒண்சுவையி லேதிரையிலே
    உற்றநீர்க் கீழிலே மேலிலே நடுவிலே
    உற்றியல் உறுத்தும்ஒளியே
    காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக்
    கருணைமழை பொழிமேகமே
    கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக்
    கண்ணோங்கும் ஒருதெய்வமே
    தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற
    சுகசொருப மானதருவே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
  • 8. ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா
    ஒளியிலே சுடரிலேமேல்
    ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே
    உறும்ஆதி அந்தத்திலே
    தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம்
    செயவல்ல செய்கைதனிலே
    சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள்
    சிறக்கவளர் கின்றஒளியே
    வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத
    வானமே ஞானமயமே
    மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
    வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
    துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச்
    சுகம்எனக் கீந்ததுணையே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
  • 9. அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின்
    ஆதிநடு அந்தத்திலே
    ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி
    ஆடும்அதன் ஆட்டத்திலே
    உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின்
    உற்றபல பெற்றிதனிலே
    ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட்
    குபகரித் தருளும்ஒளியே
    குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம்
    கோடிகிர ணங்கள்வீசிக்
    குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும்
    குலாவும்ஒரு தண்மதியமே
    துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட
    சொருபமே துரியபதமே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
  • 10. வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு
    வத்திலே வான்இயலிலே
    வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே
    வண்ணத்தி லேகலையிலே
    மானிலே நித்திய வலத்திலே பூரண
    வரத்திலே மற்றையதிலே
    வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை
    வைத்தஅருள் உற்றஒளியே
    தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித்
    திரளிலே தித்திக்கும்ஓர்
    தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச்
    செப்பிடாத் தெள்ளமுதமே
    தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த
    சொருபமே சொருபசுகமே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
  • 11. என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே
    இயல்உருவி லேஅருவிலே
    ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே
    எறிஆத பத்திரளிலே
    ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே
    ஒளிஒளியின் ஒளிநடுவிலே
    ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள்
    ஒளியேஎன் உற்றதுணையே
    அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன்
    அய்யனே அரசனேஎன்
    அறிவனே அமுதனே அன்பனே இன்பனே
    அப்பனே அருளாளனே
    துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே
    தூயனே என்நேயனே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
  • 12. அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே
    அவ்வுருவின் உருவத்திலே
    அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியிலே
    அவ்வொளியின் ஒளிதன்னிலே
    பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே
    பக்கநடு அடிமுடியிலே
    பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே
    பலித்தபர மானந்தமே
    மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு
    வாழ்வே நிறைந்தமகிழ்வே
    மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன்
    வரமே வயங்குபரமே
    துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு
    துரியமே பெரியபொருளே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
  • 13. அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல்
    ஆங்காரி யப்பகுதியே
    ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்நடு
    அடியினொடு முடியும்அவையில்
    கண்டபல வண்ணமுத லானஅக நிலையும்
    கணித்தபுற நிலையும்மேன்மேல்
    கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக்
    கலந்துநிறை கின்றஒளியே
    கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட
    குறியே குறிக்கஒண்ணாக்
    குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம்
    கொண்டதனி ஞானவெளியே
    தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற
    சுகயோக அனுபோகமே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
  • 14. கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற்
    கடையிலே கடல்இடையிலே
    கடல்முதலி லேகடல் திரையிலே நுரையிலே
    கடல்ஓசை அதன்நடுவிலே
    வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட
    வடிவிலே வண்ணம்அதிலே
    மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள்
    வயங்கிஅவை காக்கும் ஒளியே
    புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே
    புகுந்தறி வளித்தபொருளே
    பொய்யாத செல்வமே நையாத கல்வியே
    புடம்வைத் திடாதபொன்னே
    மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே
    மறுப்பிலா தருள்வள்ளலே
    மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
    வல்லநட ராஜபதியே.
  • 15. உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்
    உற்றகரு வாகிமுதலாய்
    உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
    உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
    பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
    பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
    பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன்
    பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
    தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற
    சிவமாய் விளங்குபொருளே
    சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்
    தேற்றிஅருள் செய்தகுருவே
    மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான
    வாழ்வேஎன் வாழ்வின்வரமே
    மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
    வல்லநட ராஜபதியே.
  • 16. எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
    எல்லாஞ்செய் வல்லதாகி
    இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
    இயற்கையே இன்பமாகி
    அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த
    அருளாகி அருள்வெளியிலே
    அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்
    அருட்பெருஞ் சோதியாகிக்
    கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்
    காட்சியே கருணைநிறைவே
    கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற
    கதியே கனிந்தகனியே
    வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே
    வீற்றிருந் தருளும்அரசே
    மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
    மேவுநட ராஜபதியே.
  • 17. நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
    நண்ணுறு கலாந்தம்உடனே
    நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்
    ஞானமெய்க் கொடிநாட்டியே
    மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்
    முன்னிப் படைத்தல்முதலாம்
    முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்
    மூர்த்திகளும் ஏவல்கேட்ப
    வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்
    வாய்ந்துபணி செய்யஇன்ப
    மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்
    வளத்தொடு செலுத்துமரசே
    சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே
    துரியநடு நின்றசிவமே
    சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
    சோதிநட ராஜபதியே.
  • 18. ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
    உன்னமுடி யாஅவற்றின்
    ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
    உற்றகோ டாகோடியே
    திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
    சிவஅண்டம் எண்ணிறந்த
    திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
    சீரண்டம் என்புகலுவேன்
    உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
    உறுசிறு அணுக்களாக
    ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
    ஒருபெருங் கருணைஅரசே
    மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
    வரந்தந்த மெய்த்தந்தையே
    மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
    வல்லநட ராஜபதியே.
  • 19. வரவுசெல வற்றபரி பூரணா காரசுக
    வாழ்க்கைமுத லாஎனக்கு
    வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே
    வயங்கிஒளிர் கின்றஒளியே
    இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபே
    ரின்பமே அன்பின்விளைவே
    என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே
    என்னாசை யேஎன் அறிவே
    கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற
    கருணைஅமு தேகரும்பே
    கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல
    கடவுளே கலைகள்எல்லாம்
    விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான
    மெய்ம்மையே சன்மார்க்கமா
    மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
    மேவுநட ராஜபதியே.
  • 20. பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்
    பகுதியும் காலம்முதலாப்
    பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த
    பரமாதி நாதம்வரையும்
    சீராய பரவிந்து பரநாத முந்தனது
    திகழங்கம் என்றுரைப்பத்
    திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு
    தெய்வமே என்றும்அழியா
    ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே
    உயர்தந்தை யேஎன்உள்ளே
    உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே
    உவப்பேஎன் னுடையஉயிரே
    ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த
    அரசே அருட்சோதியே
    அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை
    அமுதநட ராஜபதியே.
  • 21. உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை
    உறுமவுன வெளிவெளியின்மேல்
    ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்
    ஒருங்கநிறை உண்மைவெளியே
    திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்
    சித்தே எனக்குவாய்த்த
    செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை
    தெரித்தெனை வளர்த்தசிவமே
    பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம்
    படைத்திடுக என்றெனக்கே
    பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்
    பரமமே பரமஞான
    வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த
    வண்ணநட மிடுவள்ளலே
    மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்
    வல்லநட ராஜபதியே.
  • 22. ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத்
    துயிர்க்கெலாம் தரினும்அந்தோ
    ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற்
    குவப்பொடு கிடைத்தநிதியே
    வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா
    வரந்தந்த வள்ளலேஎன்
    மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே
    மதிஅமுதின் உற்றசுகமே
    ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ
    தென்னைஎன் றதிசயிப்ப
    இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை
    இன்புறச் செய்தகுருவே
    ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை
    யாடென் றுரைத்தஅரசே
    அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர்
    அபயநட ராஜபதியே.
  • 23. பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என்
    புகல்வழிப் பணிகள்கேட்பப்
    பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப்
    பொருள்கண்ட சத்தர்பலரும்
    ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்
    கிசைந்தெடுத் துதவஎன்றும்
    இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்
    றிருக்கஎனை வைத்தகுருவே
    நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்
    நலம்பெறச் சன்மார்க்கமாம்
    ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல்
    நடத்திவரு நல்லஅரசே
    வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய
    மாமதியின் அமுதநிறைவே
    மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
    வல்லநட ராஜபதியே.
  • 24. வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது
    மனமிக மயங்கிஒருநாள்
    மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை
    மறந்துதுயில் கின்றபோது
    நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை
    நன்றுற எழுப்பிமகனே
    நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ
    நலிதல்அழ கோஎழுந்தே
    ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண்
    டின்புறுக என்றகுருவே
    என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே
    ரின்பமே என்செல்வமே
    வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத
    வித்தையில் விளைந்தசுகமே
    மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
    மேவுநட ராஜபதியே.
  • 25. என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம்
    ஏதாக முடியுமோஎன்
    றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின்
    றேங்கிய இராவில்ஒருநாள்
    மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே
    வெளிநின் றணைத்தென்உள்ளே
    மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே
    வீற்றிருக் கின்றகுருவே
    நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட
    நல்குரவி னோன்அடைந்த
    நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே
    நான்கண்டு கொண்டமகிழ்வே
    வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை
    வலியவந் தாண்டபரமே
    மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
    வல்லநட ராஜபதியே.
  • 26. துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
    சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
    சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
    சுதந்தரம தானதுலகில்
    வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
    வாழ்வெலாம் பெற்றுமிகவும்
    மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்
    மனநினைப் பின்படிக்கே
    அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை
    யாடுக அருட்சோதியாம்
    ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்
    ஆணைநம் ஆணைஎன்றே
    இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
    திசைவுடன் இருந்தகுருவே
    எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
    இலங்குநட ராஜபதியே.
  • 27. பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
    பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
    பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
    பேதமுற் றங்கும்இங்கும்
    போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
    போகாத படிவிரைந்தே
    புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
    பொருளினை உணர்த்திஎல்லாம்
    ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
    என்பிள்ளை ஆதலாலே
    இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
    றெண்ணற்க என்றகுருவே
    நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
    நிறைந்திருள் அகற்றும்ஒளியே
    நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
    நீதிநட ராஜபதியே.
  • 28. சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
    தான்என அறிந்தஅறிவே
    தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
    தனித்தபூ ரணவல்லபம்
    வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
    விளையவிளை வித்ததொழிலே
    மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
    வியந்தடைந் துலகம்எல்லாம்
    மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
    வானவர மேஇன்பமாம்
    மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
    மரபென் றுரைத்தகுருவே
    தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
    தேற்றிஅருள் செய்தசிவமே
    சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
    தெய்வநட ராஜபதியே.
  • 29. நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற
    நின்வார்த்தை யாவும்நமது
    நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும்
    நெஞ்சம்அஞ் சேல் உனக்கே
    ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும்
    அழியாத நிலையின்நின்றே
    அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ
    ஆடிவாழ் கென்றகுருவே
    நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம்
    நான்இளங் காலைஅடைய
    நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே
    நண்பனே துணைவனேஎன்
    ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே
    ஒருவனே அருவனேஉள்
    ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே
    ஓங்குநட ராஜபதியே.
  • 30. அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக்
    கன்புடன் உரைத்தபடியே
    அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
    அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
    இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
    இயற்றிவிளை யாடிமகிழ்க
    என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
    இயல்சுத்த மாதிமூன்றும்
    எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
    எய்திநின் னுட்கலந்தேம்
    இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
    தெம்மாணை என்றகுருவே
    மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
    வரமாகி நின்றசிவமே
    மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
    வல்லநட ராஜபதியே.
  • 31. காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங்
    கருணைஅமு தேஎனக்குக்
    கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்
    காட்சியே கனகமலையே
    தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்
    தலைவனே நின்பெருமையைச்
    சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்
    சார்கின்ற தோறும்அந்தோ
    வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும்
    மதிஎலாந் தித்திக்கும்என்
    மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில்
    வரும்இன்பம் என்புகலுவேன்
    தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம்
    தோன்றிட விளங்குசுடரே
    துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
    சோதிநட ராஜகுருவே.
  • 32. எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே
    எல்லாஞ்செய் வல்லசித்தாய்
    என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை
    எழுமையும் விடாதநட்பே
    கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்
    கட்டியே கருணைஅமுதே
    கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது
    கண்காண வந்தகதியே
    மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன்
    வினைஎலாந் தீர்த்தபதியே
    மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக
    விளைவேஎன் மெய்ம்மைஉறவே
    துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே
    சுத்தசன் மார்க்கநிலையே
    துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
    சோதிநட ராஜகுருவே.
  • 33. துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான்
    சோர்ந்தொரு புறம்படுத்துத்
    தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால்
    தூயதிரு வாய்மலர்ந்தே
    இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே
    இருகைமலர் கொண்டுதூக்கி
    என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத்
    தியலுற இருத்திமகிழ்வாய்
    வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி
    வைத்தநின் தயவைஅந்தோ
    வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப
    வாரிஅமு தூறிஊறித்
    துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச்
    சுகவண்ணம் என்புகலுவேன்
    துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
    சோதிநட ராஜகுருவே.
  • 34. ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே
    ஒருமைநிலை உறுஞானமே
    உபயபத சததளமும் எனதிதய சததளத்
    தோங்கநடு வோங்குசிவமே
    பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய
    பருவத்தில் ஆண்டபதியே
    பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம்
    படிவைக்க வல்லபரமே
    ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வா
    யாடுவோர்க் கரியசுகமே
    ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி
    யாகிநிறை கின்றநிறைவே
    தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது
    தூக்கந் தொலைத்ததுணையே
    துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
    சோதிநட ராஜகுருவே.

நடராஜபதி மாலை // நடராஜபதி மாலை

No audios found!