திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அழிவுறா அருள்வடிவப் பேறு
aḻivuṟā aruḷvaṭivap pēṟu
பொன்வடிவப் பேறு
poṉvaṭivap pēṟu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

095. பேரருள் வாய்மையை வியத்தல்
pēraruḷ vāymaiyai viyattal

    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி
    மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய்
    இன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம்
    ஒன்றே எனினும் பொறேன்அரு ளாணை உரைத்தனனே.
  • 2. தற்சோதி என்னுயிர்ச் சத்திய சோதி தனித்தலைமைச்
    சிற்சோதி மன்றொளிர் தீபக சோதிஎன் சித்தத்துள்ளே
    நற்சோதி ஞானநல் நாடக சோதி நலம்புரிந்த
    பொற்சோதி ஆனந்த பூரண சோதிஎம் புண்ணியனே.
  • 3. திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்
    கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த
    உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற
    வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.
  • 4. மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை
    தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்
    எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா
    இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே.
  • 5. வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச்
    சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம்
    போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும்
    சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே.
  • 6. செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே
    இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய்
    எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை
    வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே.
  • 7. ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட
    வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ
    ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே
    ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே.
  • 8. என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம்
    தன்னே ரிலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக்
    கன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும்
    பொன்னேர் வடிவும் அளித்தென் னுயிரில் புணர்ந்தனனே.
  • 9. அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான்
    எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம்
    மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை
    இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே.
  • 10. வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
    வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்
    வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு
    வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.

பேரருள் வாய்மையை வியத்தல் // பேரருள் வாய்மையை வியத்தல்

No audios found!