திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருட்பெருஞ்ஜோதி அகவல்
aruṭperuñjōti akaval
பதி விளக்கம்
pati viḷakkam
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

003. அருட்பெருஞ்சோதி அட்டகம்
aruṭperuñsōti aṭṭakam

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
    தருட்பெருந் தலத்துமேல் நிலையில்
    அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்
    அருட்பெருந் திருவிலே அமர்ந்த
    அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
    அருட்பெருஞ் சித்திஎன் அமுதே
    அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
  • 2. குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த
    கோடிகோ டிகளும்ஆங் காங்கே
    நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
    நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்
    விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும்
    மெய்யறி வானந்தம் விளங்க
    அலகுறா தொழியா ததுவதில் விளங்கும்
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
  • 3. கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
    கருவினால் பகுதியின் கருவால்
    எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
    இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
    விண்முதல் பரையால் பராபர அறிவால்
    விளங்குவ தரிதென உணர்ந்தோர்
    அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
  • 4. நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே
    நண்ணியும் கண்ணுறா தந்தோ
    திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்
    திரும்பின எனில்அதன் இயலை
    இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும்
    இசைத்திடு வேம்என நாவை
    அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
  • 5. சுத்தவே தாந்த மவுனமோ அலது
    சுத்தசித் தாந்தரா சியமோ
    நித்தநா தாந்த நிலைஅனு பவமோ
    நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ
    புத்தமு தனைய சமரசத் ததுவோ
    பொருள்இயல் அறிந்திலம் எனவே
    அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும்
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
  • 6. ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
    இயற்கையோ செயற்கையோ சித்தோ
    தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
    திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ
    யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
    உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்
    ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
  • 7. தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
    தத்துவா தீதமேல் நிலையில்
    சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
    சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
    ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
    ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
    றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
  • 8. எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
    இதுஅது எனஉரைப் பரிதாய்த்
    தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
    தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
    பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
    புத்தமு தருத்திஎன் உளத்தே
    அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

அருட்பெருஞ்சோதி அட்டகம் // அருட்பெருஞ்சோதி அட்டகம்

No audios found!