திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
செல்வச் சீர்த்தி மாலை
selvach sīrtti mālai
தேவ ஆசிரியம்
tēva āsiriyam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

047. செவி அறிவுறுத்தல்
sevi aṟivuṟuttal

    கலி விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. உலகியற் கடுஞ்சுரத் துழன்று நாள்தொறும்
    அலகில்வெந் துயர்கிளைத் தழுங்கு நெஞ்சமே
    இலகுசிற் பரகுக என்று நீறிடில்
    கலகமில் இன்பமாம் கதிகி டைக்குமே.
  • 2. மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே
    இருளுறு துயர்க்கடல் இழியும் நெஞ்சமே
    தெருளுறு நீற்றினைச் சிவஎன் றுட்கொளில்
    அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே.
  • 3. வல்வினைப் பகுதியால் மயங்கி வஞ்சர்தம்
    கொல்வினைக் குழியிடைக் குதிக்கும் நெஞ்சமே
    இல்வினைச் சண்முக என்று நீறிடில்
    நல்வினை பழுக்கும்ஓர் நாடு வாய்க்குமே.
  • 4. கடும்புலைக் கருத்தர்தம் கருத்தின் வண்ணமே
    விடும்புனல் எனத்துயர் விளைக்கும் நெஞ்சமே
    இடும்புகழ்ச் சண்முக என்று நீறிடில்
    நடுங்கும்அச் சம்நினை நண்ணற் கென்றுமே.
  • 5. அன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில்
    என்பிலாப் புழுஎன இரங்கு நெஞ்சமே
    இன்பறாச் சண்முக என்று நீறிடில்
    துன்புறாத் தனிக்கதிச் சூழல் வாய்க்குமே.
  • 6. . செறிவிலா வஞ்சகச் செல்வர் வாயிலில்
    அறிவிலா துழலும்என் அவல நெஞ்சமே
    எறிவிலாச் சண்முக என்று நீறிடில்
    மறிவிலாச் சிவகதி வாயில் வாய்க்குமே.
  • 7. மறிதரு கண்ணினார் மயக்கத் தாழ்ந்துவீண்
    வெறியொடு மலைந்திடர் விளைக்கும் நெஞ்சமே
    நெறிசிவ சண்முக என்று நீறிடில்
    முறிகொளீஇ நின்றஉன் மூடம் தீருமே.
  • 8. காயமாம் கானலைக் கருதி நாள்தொறும்
    மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே
    நேயமாம் சண்முக என்று நீறிடில்
    தோயமாம் பெரும்பிணித் துன்பம் நீங்குமே.
  • 9. சதிசெயும் மங்கையர் தமது கண்வலை
    மதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே
    நிதிசிவ சண்முக என்று நீறிடில்
    வதிதரும் உலகில்உன் வருத்தம் தீருமே.
  • 10. பசையறு வஞ்சகர் பாற்சென் றேங்கியே
    வசைபெற நாள்தொறும் வருந்து நெஞ்சமே
    இசைசிவ சண்முக என்று நீறிடில்
    திசைபெற மதிப்பர்உன் சிறுமை நீங்குமே.

செவி அறிவுறுத்தல் // செவி அறிவுறுத்தல்