திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கலி விண்ணப்பம்
kali viṇṇappam
அடிமைப் பதிகம்
aṭimaip patikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

084. கருணை விண்ணப்பம்
karuṇai viṇṇappam

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. நல்லார்க் கெல்லாம் நல்லவன்நீ ஒருவன் யாண்டும் நாயடியேன்
    பொல்லார்க் கெல்லாம் பொல்லவன்நான் ஒருவன் இந்தப் புணர்ப்பதனால்
    எல்லாம் உடையாய் நினக்கெதிரென் றெண்ணேல் உறவென் றெண்ணுகஈ
    தல்லால் வழக்கென் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே.
  • 2. இடமே பொருளே ஏவலே என்றென் றெண்ணி இடர்ப்படுமோர்
    மடமே உடையேன் தனக்கருள்நீ வழங்கல் அழகோ ஆநந்த
    நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத்
    திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே.
  • 3. தெரித்தால் அன்றிச் சிறிதேனும் தெரிவொன் றில்லாச் சிறியேனைப்
    பிரித்தாய் கூடும் வகைஅறியும் பெற்றி என்னே பிறைமுடிமேல்
    தரித்தாய் அடியேன் பிழைபொறுக்கத் தகுங்காண் துன்பம் தமியேனை
    அரித்தால் கண்டிங் கிரங்காமை அந்தோ அருளுக் கழகேயோ.
  • 4. அருள்ஓர் சிறிதும் உதவுகிலாய் அதனைப் பெறுதற் கடியேன்பால்
    தெருள்ஓர் சிறிதும் இலையேஎன் செய்கேன் எங்கள் சிவனேயோ
    மருளோர் எனினும் தமைநோக்கி வந்தார்க் களித்தல் வழக்கன்றோ
    பொருளோர் இடத்தே மிடிகொண்டோர் புகுதல் இன்று புதிதன்றே.
  • 5. புதியேன் அல்லேன் நின்அடிமைப் பொருத்தம் இல்லேன் அல்லேன்யான்
    மதியேன் வேற்றுத் தேவர்தமை வந்தங் கவர்தாம் எதிர்ப்படினும்
    துதியேன் நின்னை விடுவேனோ தொண்ட னேனை விடல்அழகோ
    நதியேர் சடையோய் இன்னருள்நீ நல்கல் வேண்டும் நாயேற்கே.
  • 6. நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கிங்
    கீயேன் ஒன்றும் இல்லேன்நான் என்செய் கேனோ என்னுடைய
    தாயே அனையாய் சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ
    சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ.
  • 7. சிரிப்பார் நின்பேர் அருள்பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ
    விரிப்பார் பழிச்சொல் அன்றிஎனை விட்டால் வெள்ளை விடையோனே
    தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும்வண்ணம்
    தெரிப்பார் நினக்கும் எவர்கண்டாய் தேவர் தேடற் கரியானே.
  • 8. அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும்
    பெரிய பெருமான் சிவபெருமான் பித்தப் பெருமான் என்றுன்னை
    உரிய பெருமா தவர்பழிச்சல் உண்மை எனில்என் உடையானே
    கரிய பெருமால் உடையேற்கும் அருளல் உன்றன் கடன்அன்றே.
  • 9. அன்றும் சிறியேன் அறிவறியேன் அதுநீ அறிந்தும் அருள்செய்தாய்
    இன்றும் சிறியேன் அறிவறியேன் இதுநீ அறிந்தும் அருளாயேல்
    என்றும் ஒருதன் மையன்எங்கள் இறைவன் எனமா மறைகள்எலாம்
    தொன்று மொழிந்த தூமொழிதான் சூது மொழியோ சொல்லாயே.
  • 10. சொல்லற் கரிய பெரியபரஞ் சுடரே முக்கட் சுடர்க்கொழுந்தே
    மல்லற் கருமால் அயன்முதலோர் வழுத்தும் பெருஞ்சீர் மணிக்குன்றே
    புல்லற் கரிதாம் எளியேன்றன் பிழைகள் யாவும் பொறுத்திந்த
    அல்லற் கடல்நின் றெனைஎடுத்தே அருள்வாய் உன்றன் அருள்நலமே.

கருணை விண்ணப்பம் // கருணை விண்ணப்பம்

No audios found!